பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியார், பெருமாளுக்கு அக்காரவடிசில் விழா நடந்தது.மார்கழி மாதம் சிவ, வைணவ தலங்களில் அதிகாலை பூஜைகள் நடப்பது வழக்கம். இந்த மாதத்தில் திருப்பாவை, திரும்வெம்பாவை பாடல்கள் பாடப்படுவதுடன், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி ஆகிய பல நிகழ்வுகள் நடைபெறும். இதன் படி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி 27 ம் நாளான நேற்று ஆண்டாள் நாச்சியார், பெருமாளுடன் சேர்க்கையான கூடாரவல்லி தினம்கொண்டாடப்பட்டது. இதன் படி ஆண்டாள், சுந்தரராஜப் பெருமாளிடம் தலா 108 அண்டாக்களில் சர்க்கரை பொங்கல் (அக்காரவடிசில்), வெண்ணெய் படைப்பதாக வேண்டியிருந்தார். இதன் பொருட்டு பின்னாளில் ராமானுஜர் இதனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.
இதனை நினைவு கூறும் வகையில் பெருமாள் கோயிலில், 216 வட்டிலில் பொங்கல் மற்றும் வெண்ணெய் படைக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5:30 மணிக்கு ராமானுஜர் கோயிலில் உலா வந்தார் . பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை மார்கழி 29 ம் தேதியுடன் மார்கழி உற்ஸவம் நிறைவடைகிறது.