பதிவு செய்த நாள்
12
ஜன
2018
01:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் உண்டியல் நேற்று எண்ணப்பட்டது. இதில், பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 415 ரூபாய் காணிக்கை இருந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டிற்கு ஒரு முறை உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை, தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா தலைமையில், கோவிலில் வைக்கப்பட்டிருந்த மூன்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், 20க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், ஒன்பது லட்சத்து, 20 ஆயிரத்து, 710 ரூபாயும், சில்லரை காசாக, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 705 ரூபாய் என, மொத்தம், பத்து லட்சத்து, 88 ஆயிரத்து, 415 ரூபாய் இருந்தது. மேலும், தங்கம், 142 கிராம், வெள்ளி, 91 கிராம் இருந்தது. உண்டியல் எண்ணுவதையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் சத்யா, வளர்மதி, பாண்டியம்மா, கோவிந்தராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள், கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.