மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2011 11:12
திருநெல்வேலி:மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது மேலப்பாளையம் அருகே மேலநத்தம் கிராமத்தில் மிகவும் பழமையான மேற்கு பார்த்த கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் உள்ள சுவாமி மற்றும் அம்பாளை மனம் உருக தரிசனம் செய்தால் தொழுநோய், உடல் உபாதைகள் நீங்குதல், திருமண தடை விலகுதல் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதாக ஐதீகம்.பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் மற்றும் ருத்ர ஜபம், ருத்ர திரிசதி அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது.இதனையடுத்து சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதன நடந்தது. மாலையில் கோயிலில் உள்ள மேஷநந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதில் மேலநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபட்டனர்.ஹோமங்கள் மற்றும் பிரதோஷ பூஜையை அக்னீஸ்வரர் கோயில் அர்ச்சகர் கோபிபட்டர் செய்தார். அதுபோல் நெல்லையப்பர் கோயில், வண்ணார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், பாளை.,திரிபுராந்தீஸ்வரர்(சிவன்)கோயில் உட்பட மாநகரின் பல்வேறு சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தி பெருமானை வழிபட்டனர்.