பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
சென்னை: உலக நன்மைக்காக, முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் நேற்று, 108 திருவிளக்கு பூஜை செய்யப்பட்டது.சென்னை, மயிலாப்பூரில், முண்டகக்கண்ணியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில், தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 108 பெண்கள் பங்கேற்ற, திருவிளக்கு பூஜை, நேற்று மாலை, 4:30 மணிக்கு நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, நேற்று மதியம், மூலவர் அம்மனுக்கு, மஹா அபிஷேகமும், உற்சவர் அம்மனுக்கு, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, பூஜை நடத்தப்பட்டது. மாலை, 4.00 மணிக்கு, பிரதான குத்துவிளக்கு மற்றும் பட்டுப்புடவை, சாத்துப்படியுடன் சிறப்பு அலங்காரம் செய்து, பூஜையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, 108 திருவிளக்குகளும், தனித்தனியே அலங்காரம் செய்யப்பட்டது. பின், சிவாச்சாரியார்கள் மூலம், கணபதி பூஜை, வேத பாராயணம் செய்யப்பட்டு, லலிதா சகஸ்ரநாம பூஜை நடந்தது. பஞ்சபூத ப்ரதிக்காகவும், உலக நன்மைக்காகவும், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அனைத்து விளக்குகளுக்கும், துாப தீப ஆராதனை மற்றும் நைவேத்தியத்துடன் பூஜை நடந்தது.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் செய்திருந்தார்.