வாழ்வின் அடிப்படை லட்சியம், பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்து கொள்வதே (மோட்சமடைதல்) ஆகும். ஒருவரை பரலோக ராஜ்யத்தின் பங்காளியாக, மாற்ற வேண்டும் என்பதே தேவனின் தீர்மானம். அதற்கு பைபிள் வழிகாட்டுகிறது. ஒரு மனிதனின் வாழ்வில் வெவ்வேறு கோணங்களில் கஷ்டம் வரலாம். அவ்வேளை களில் கடவுளுக்கு விரோதமாக பேசக் கூடாது. “ஆண்டவரே! சோதித்து விட்டீரே! உம்மை நான் ஜெபித்து என்ன பலனை கண்டேன்! ஜெபிப்போருக்கெல்லாம் இப்படித் தான் பலன் தருவீர் என்றால் உம்மை ஏன் வீணாக ஜெபித்து, நேரத்தை வீணடிக்க வேண்டும்?” என்றெல்லாம் புலம்பக் கூடாது. கஷ்டங்களை பொறுமையாக ஏற்பதே பண்புள்ள மனிதனுக்குரிய இலக்கணம்.
ஆனந்தமாக இருப்பவர்களெல்லாம் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், துன்பம் அனுபவிப்போர் எல்லாம் அவரால் கைவிடப்பட்டவர்கள் என்பதும் உண்மையல்ல. துன்மார்க்கன் பனையைப்போல செழிக்கலாம். நீதிமான் கடுமையான கஷ்டங்ளை அனுபவிக்கலாம். இவை இரண்டும் இந்த பூமியில் நிகழ தான் செய்யும். ஆனால் மரணத்திற்கு பின், பரலோக வாழ்வில் இந்த வேறுபாட்டிற்கு இடமே இல்லை. அங்கே என்றும் ஆனந்தமே.