கைமணி பூசையில் தனுகண்டா என்று விதிக்கப்பட்டுள்ளது. தேவர்களின் வருகைக்காகவும், அசுரர்களின் விலகுதலுக்காகவும், தெய்வங்களின் வருகைக்கு அடையாளமாகவும் மணியோசையை எழுப்பவேண்டும். பூசையின் துவக்கவேளை, கணேசரின் பூஜை நேரம், கிரியாகாலம், புண்ணிய காலம், தூபதீபகாலம், நிவேதனகாலம், பலிகாலம் ஆகியவற்றில் தவறாமல் மணியோசையை எழுப்பவேண்டும் என்கின்றன. இடையூறுகளைப் போக்கிடும் மணியோசையை எப்போதும் செய்யவேண்டும். மணியோசையின்றி செய்யப்படும் பூஜையின் செயல் எதுவும் பயனற்றதாய் வீணாகும். எனவே மணியோசை (கண்டாநாதம்) மிகவும் அவசியம் என்கின்றன சிவாகமங்கள்.
மேலும் மணியோசையின் வகையில் ஒரு நாதம் மோட்சத்திற்காகவும், இரு நாதம் போக சித்திக்கவும், மூன்றுநாதம் சர்வசித்திக்கும் என மணியை மூவகையில் அடிக்கவேண்டும். மேலும் புண்யாஹகாலம், தூபகாலம், நைவேத்யகாலம், பலிகாலம் ஆகியவற்றில் இரு நாதத்தையும், தீபம் காட்டும்போது ஒரு நாதத்தையும், மூன்று நாதம் சிவன், விஷ்ணு நீங்கலான பிற தெய்வங்களுக்குமாக அறிந்து அடித்தல் முறை.