பதிவு செய்த நாள்
05
செப்
2018
11:09
வத்திராயிருப்பு:சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறையின் அடையாளமாக இருந்த நுழைவுவாயில் போர்டில் இடம் பெயர் அளிக்கப்பட்டு, சம்பந்தமில்லாத வாசகங்களுடன் வனத்துறையினர் போர்டு வைத்துள்ளது பக்தர்களிடையே குழப்பம், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மலைவாச சிவஸ்தலமாக சதுரகிரி மலை விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம்பக்தர்கள் வந்து செல்லும் இம்மலையானது, தமிழகத்தின் அரிய வகை மூலிகைகள் நிறைந்த 2 வது மூலிகை வனமாக திகழ்கிறது.
இதை அறிவித்த கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மலையடிவாரத்தின் நுழைவு வாயிலில் ஆர்ச் வடிவில் போர்டுஅமைக்கப்பட்டது. அதில் மூலிகைவனம் தாணிப்பாறை என எழுதப்பட்டி ருந்தது. ஏற்கனவே சித்தர்கள் வாழ்ந்து வழிபட்ட வரலாறுடன் இந்த மூலிகை வனமும் சேர்ந்து கொண்டதால் ஆன்மிக ரீதியாகவும், இயற்கை சூழல் ரீதியாகவும் மிகவும் புகழ் பெற்றது. இம்மலை வந்து மூலிகை காற்றை சுவாசித்து சென்றால் உடலில் உள்ள பல்வேறு நோய்களும் தீர்ந்து விடும் என பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. இதுவே இம்மலைக்கு ஒரு பெரிய சிறப்பாக அமைந்தது. இதற்காகவே ஏராளமானபக்தர்கள் மலைக்கு வந்து சென்றனர்.
அணில் சரணாலயம் இப்படி மலைக்கு அடையாளமாக இருந்த மூலிகைவனம் என்பதையும், அடிவாரத்தின் பெயரை பக்தர்களிடம் பதிவு செய்யும் வகையில் எழுதப்பட்டிருந்த தாணிப் பாறை என்ற வாசகத்தையும் வனத்துறையினர் அழித்துவிட்டு அதில் சாம்பல்நிற அணில் சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தார் என எழுதி உள்ளனர்.
இம்மலைக்கு அங்க அடையாளமாக இருந்ததை அழித்த சம்பவம் பக்தர்களிடையே வேதனை , புதிதாக வரும் பக்தர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது புதிதாக எழுதப்பட்ட வாசகங்கள் இம்மலைக்கு சிறிதும் சம்மந்தமில்லாத வாசகங்களாக உள்ளது. அமைவிடம் தாணிப்பாறையாக இருக்கும்போது அதை அழித்து ஸ்ரீவில்லிபுத்தூர் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனே மாற்றுங்க பக்தர்கள் கூறுகையில்,சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மதுரையிலும் ஆரப்பாளையம், கோரிப்பாளையம் என பெயர் உள்ளது. மதுரை எல்லைக்குள் உள்ளது என்பதற்காக அனைத்து ஏரியாக்களிலும் மதுரை என்றோ, சென்னை என்றோ எழுதுவதில்லை. அதுதான் அந்த இடத்தின் அடையாளமாக விளங்குகிறது.
வனத்துறை பதிவேடுகளில் எப்படி வேண்டுமானலும் இருக்கட்டும். இந்த மலைக்கு எது தனிச்சிறப்போ அதுவே அழிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
உடனடியாக பக்தர்களுக்கு தெரியும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்,என்றனர்.