பதிவு செய்த நாள்
01
டிச
2018
12:12
தலைவாசல்: காலபைரவாஷ்டமியையொட்டி, பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை தேய்பிறை அஷ்டமி, காலபைரவாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில், பைரவர் அவதரித்தார் என்பதால், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதையொட்டி, தலைவாசல் அருகே, ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், அஷ்ட பைரவர் ஆலயத்தில், நேற்று (நவம்., 30ல்)காலை, பால், தயிர் உள்ளிட்ட ஐந்து வகை பொருட்களால், மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.
ஐந்து வகை எண்ணெயால், பஞ்ச தீபமேற்றி, பைரவருக்கு உகந்த, செவ்வரளிப்பூவை வைத்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர். அங்குள்ள, எட்டு பைரவர்களுக்கும், தனித்தனியாக பூஜை நடந்தது.
காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மஹா தீபாராதனை, யாகங்களில், திரளானோர் பங்கேற்று, தரிசனம் செய்தனர். அதேபோல், உலக நன்மை வேண்டி, ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், யாக குண்டத்தில், வற்றல் மிளகாய், மூலிகை கொட்டி, பிரித்தியங்கராதேவி அம்மன், சொர்ண பைரவருக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அம்மன், பைரவர் வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். சேலம், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை முருகன் கோவிலில், வெள்ளை சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், வடைமாலைகளுடன், சந்தனகாப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார்.