பதிவு செய்த நாள்
14
பிப்
2019
03:02
காஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் பிரம்மோற்சவத்திற்கு, கோவிலில் இருக்கும் பழைய உற்சவர் சிலையை பயன்படுத்த வேண்டும் என, முன்னாள் அறங்காவலர்கள் மனு கொடுத்தனர்.
காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யான பிரம்மோற்சவத்திற்கு ,நாளை (பிப்., 15ல்) பந்தக்கால் நாட்டப்படுகிறது. அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் விழா துவங்க இருக்கிறது.
புதிய உற்சவர் சிலை, கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பில் உள்ளது. அதனால், அதற்கு பதில் கோவிலில் இருக்கும் பழைய உற்சவர் சிலையை பயன் படுத்த வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.இது குறித்து, முன்னாள் அறங்காவலர்கள் வெங்கடேசன், கந்தசாமி ஆகியோர், செயல் அலுவலர் முருகேசனிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:புதிய உற்சவர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு சம்பந்தமாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த புதிய சிலை, மூன்று மாதங்களுக்கு முன், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.தற்போது, கோவிலில் உள்ள, சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் சிலை, 1,000 ஆண்டுகள் பழமையானவை. அந்த சிலைகளுக்கு, தினமும் பூஜை நடத்தப்படுகிறது.புதிய உற்சவர் சிலை இல்லாததால், தீபாவளி உற்சவம், கார்த்திகை சோமாவாரம், பார்வேட்டை உற்சவம், தைப்பூச திருநாள் பஞ்சமூர்த்தி உற்சவசம் நடைபெறவில்லை.
இது, பக்தர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இக்கோவில் முக்கிய உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற வேண்டும்.தலைமை ஸ்தபதி முத்தையா இந்த சிலையை ஜடிபந்தனம் மட்டும் செய்தால், மேலும், 1,000 ஆண்டுகள் பயன்படுத்தலாம் என, கூறியிருக்கிறார்.முக்கிய உற்சவங்களுக்கு, இச்சிலையை பயன்படுத்தலாம் எனவும், தெரிவித்திருந்தார். எனவே, பழைய சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி அம்மன் சிலையை, பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.