இல்லறம் அல்லது நல்லறம் அன்று என்பது அவ்வை வாக்கு. திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்றனர். காலத்தைப் பொறுத்து பயிருக்குப் பெயரிட்டவர்கள் நம் முன்னோர். குறுவைப்பயிர், கோடைப்பயிர், ஓராண்டுப்பயிர் என்றெல்லாம் பெயர் வைத்தது போல, வாழையடி வாழையாக நல்ல சந்ததி தழைக்கவேண்டும் என்னும் அடிப்படையில் திருமணத்தை ஆயிரம் காலத்துப்பயிர் என்று குறிப்பிட்டனர். இன்று திருமணத்தடை என்பது சகஜமான ஒன்றாகி விட்டது. பல பெண்களுக்கு 30 வயதைத் தாண்டியும் முதிர்கன்னிகளாகி திருமணம் நிச்சயமாகாமல் இருக்கிறது. அவர்களின் வாட்டத்தைப் போக்கி, பயிர் செழிக்க வந்த பருவமழையாக ஆண்டாளின் வாரணமாயிரம் பாசுரம் உள்ளது. பூஜையறையில் விளக்கேற்றி, ஆண்டாள் படம் வைத்து பூமாலை இட வேண்டும். திருவிளக்கையே ஆண்டாளாகக் கருதியும் வழிபடலாம். பால் நிவேதனம் செய்து, காலை அல்லது மாலையில் கீழ்க்கண்ட பாசுரத்தை 12 முறை படிக்க வேண்டும். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான் விரைவில் திருமணம் கைகூட அருள்புரியும் பாசுரம் இதுவாகும். இதன் பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள்.தோழியே! மேளச்சத்தம் ஒலிக்கவும், வலம்புரிச்சங்குகள் முழங்கவும், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழே இளை யவனும், நம்பியவரைக் காப்பவனும் ஆகிய மதுசூதனன் மாப்பிள்ளையாக வந்து என் கைகளைப் பற்றிக் கொள்ளும் காட்சியைக் கண்டேன், .ஆண்டாளின் கரத்தை ஆண்டவனே பற்றியது போல, உங்களை ஆளவும் ஒரு நல்லவர் வருவார் இனிதாக!