பதிவு செய்த நாள்
28
பிப்
2012
04:02
இறைவனின் விருப்பப்படியே உலகம் நடக்கிறது. இறைவனே சரணம் என்று நம்பி தொழில் செய்பவன் என்ன தொழில் செய்தாலும், அந்த தொழில் வெற்றி பெறும்.
கோயில் சந்நிதியில் தன்னையே எரித்துக் கொண்டு தீபஒளி பரப்பும் எண்ணெய் விளக்கைப் போல், வாழ்வின் கடைசி வரை இறைவனின் சேவை செய்யும் நல்ல குணத்தை பெற வேண்டும்.
வாழ்க்கையில் தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் தேவையான பலன் கிடைக்கும். தர்மத்தாலும், கருணையாலும் கிடைக்கும் வெற்றியே நிலைத்து நிற்கும்.
மண்ணிலுள்ள எல்லா மக்களும், பூச்சிகளும், புல்பூண்டும், பறவைகளும், மரங்களும் பிற உயிரினங்களும் இன்பமுற்று வாழ்வதற்காக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
உலகம் முழுமைக்கும் இறைவனே தலைவன். அவன் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் அவனிடம் எது கேட்டாலும் கிடைக்கும். விதியின் முடிவுகளைத் தெய்வ பக்தி வென்று விடும்.
வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணம் அனைத்திலும் மிக உயர்ந்தது பொறுமை.
பொருள் என்பது செல்வம், நிலம், பொன் மட்டுமல்ல. கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல குழந்தைகளைப் பெறுதல் ஆகியவையும் செல்வம் தான்.
பலவீனமான உயிரினங்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும், அநியாயம் நீங்கினால் கலி இல்லை.
மனம் துன்பத்தில் நழுவி விழத் தொடங்கும் போது, அதை உறுதி அல்லது தைரியம் என்னும் சாதனத்தால் பிடித்து நிறுத்திப் பழகுவதே சரியான யோகப் பயிற்சி.
செல்வத்தை சம்பாதிப்பது என்பதற்கு இன்னொரு அர்த்தம் திறமையைப் பயன்படுத்துதல் என்பதாகும். திறமையை வெளிப்படுத்துபவன் மனவலிமையைப் பெறுகிறான்.
நமக்கு முடியாத செயலைக் கைவிடாமல், நம்மைவிட திறமையுள்ளவனிடம் கொடுத்து, அவன் கீழ் சிற்றாளாக இருந்து தொழில் பழகிக் கொண்டு நாமாகச் செய்ய முடியும்.
ஒரு செயலை செய்யத் துவங்குபவன், அதை ஆண்டுக்கணக்கில் நீட்டி பிறருக்கு தொல்லை தரும்படி செய்யக் கூடாது. இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும், அதனால் எந்தவிதமான தீமையும் ஏற்படாது.
பெண்களின் உதவி இல்லாமல், ஒரு தேசம் எந்தவிதமான அபிவிருத்தியையும் அடைய முடியாது. நமது முதலாவது கடமை, நம் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களுக்கு நம் நாட்டிலுள்ள புராதன மகாத்மாக்களை (மகான்கள்) பற்றி பயிற்சி அளிப்பது தான். இளைஞர்களுக்கு தேசபக்தி, ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டும்.
ஒருவன் தனக்குத்தானே நட்பாக இருந்தால் தான், உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகும். நம் நாட்டிற்கு கிடைக்கும் மேன்மை அனைத்தும், முப்பது கோடி மக்களுக்கும் பொதுவானதாகும். எனவே, வாழ்வதென்றால் அனைவரும் வாழ்வோம். வீழ்வதென்றால் அனைவரும் வீழ்வோம். சிலர் வாழ்வது சிலர் வீழ்வது என்னும் நிலை கூடாது.
அச்சமின்றி வாழ்வது ஒரு அரிய பேறாகும். அச்ச உணர்வாலேயே அளவற்ற அல்லல்கள் நம் வாழ்வில் வருகின்றன. மனிதனை மனிதன் கண்டுஅஞ்சியதாலேயே எத்தனையோ போர்களும் அழிவுகளும்ஏற்பட்டன. அச்சஉணர்வு அகல வேண்டுமெனில், அன்பு உணர்வை உள்ளத்தில் வளர்க்க வேண்டும்.
-பாரதியார்