பதிவு செய்த நாள்
16
மார்
2019
11:03
ராமநாதபுரம்: திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்களால் ஆதிஜெகநாதர் கோயிலில் புதைந்திருந்த 13ம் நுாற்றாண்டு பாண்டியர்கள் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபி ேஷக ராமர் சன்னதி யின் தெற்கு வெளிப்புற சுவர், மூன்றாம் பிரகாரம் ஆகிய இடங்களில் சுவரின் அடிப்பகுதியில் புதைந்த நிலையில் கல்வெட்டுக்கள் இருந்ததை திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
இவை கி.பி., 13 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள் ஆகும். இதுகுறித்து ராமநாதபுரம் தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு கூறியதாவது: இவை துண்டு கல்வெட்டுக்கள். ஒன்று கோனோரி மேல்கொண்டான் எனும் அரசாணைக்கல்வெட்டு. மூன்று கல்வெட்டுக்களில் உலகமுழுதுமுடையார் என்பவர் பெயர் உள்ளது. வீரபாண்டியன் சந்தி, சதயத்திருநாள், தேவதானம், ஆகியவற்றிற்காக நிலங்களை கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார். திருப்புல்லாணி கோயிலில் வீரபாண்டியன் சந்தி எனும் ஒரு பூஜைக்கட்டளையை உருவாக்கி அதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டு அமுதகுணமங்கலம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். உலகு சிந்தாமணி வளநாடு என்பது சாயல்குடி அருகிலுள்ள திருமாலுகந்தான் கோட்டை. இக்கோயிலில் சதயத்திருநாள் கொண்டாட வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருட்களாக நீர் சூழ்ந்த நிலமும் கருங்செய்யும் நீக்கி மீதமுள்ள நிலத்தை இவர் தானமாக வழங்கியது கல்வெட்டில் உள்ளது.
உலகமுழுதுமுடையார் என்பவர் கி.பி., 1253 முதல் 1283 வரை ஆண்ட முதலாம் சடைய வர்மன் வீரபாண்டியன் பட்டத்தரசி ஆவார் . மன்னன் நலமாக வாழ அவன் பெயரில் ஒரு சந்தியும், அவன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால் அதை சதய திருநாளாக கொண்டாட தானங்களை இக்கோயிலுக்கு வழங்கியுள்ளார். இதில் உள்ள கல்வெட்டுக்கள் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தை சேர்ந்தது, என்பது உறுதியாகிறது, என்றார். வேளானுார் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி, ராமநாதபுரம் சாந்தக்குமார், திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மு.விசாலி, ச.பிரவீணா, து.மனோஜ், ஜெ.தர்ஷினி ஆகியோர் கல்வெட்டு கண்டுபிடித்து நகலெடுத்து பதிவு செய்துள்ளனர்.