பதிவு செய்த நாள்
16
மார்
2019
12:03
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடந்த, சிம்ம வாகன உற்சவம் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த பிப்., 17ல், பால் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கடந்த, 13 ல் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு கொடியேற்றம், இரவு, 9:00 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. முக்கிய வீதிகளில் வலம் வந்த உற்சவ மூர்த்தியை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவிற்கு பயன்படுத்தப்படும், ரிஷப வாகனம், குதிரை வாகனம் ஆகியவை, 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலம், மாலூர் அருகே, ஐந்து லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில், கோவில் உபயதாரர்கள் மூலம், ரிஷப, ?ஷச மற்றும் குதிரை வாகனம் ஆகியவை பித்தளை மூலம் புதிதாக செய்யப்பட்டது. இவற்றுக்கு நாளை (மார்ச், 17) பூஜை செய்து, அதன் பின் பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.