மேட்டுப்பாளையம்:திம்மண்ணகவுண்டன்புதூரிலுள்ள, நூற்றாண்டு பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் புடை சூழ கும்பாபிஷேகம் நடந்தது.காரமடையை அடுத்த திம்மண்ணகவுண்டன்புதூரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவிலை சீரமைத்து, கருவறை, விமானம், மகாமண்டபம் ஆகிய அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 15ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.
பவானி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்து கோவில் கருவறை சுத்தம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக யாக வேள்வி பூஜைகளும், விமான கலசம் நிறுவுதல், மூலமூர்த்தியை பீடத்தில் நிறுவி எண்வகை மருந்து சாற்றுதல், அருள்நிலை ஏற்றல் ஆகியவை நடந்தன.நேற்று (மே., 17ல்) காலை, 6:30 மணிக்கு புனித தீர்த்தக்குடங்களை யாகசாலையிலிருந்து கோவிலைச் சுற்றி ஊர்வலமாக சிவாச்சாரியர்கள் எடுத்துச் சென்றனர். கருவறை கோபுரக் கலசத்தும், மூலவருக்கும் ஏககாலத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷே கத்தை நடத்தினர். விழாவில் ஊர்கவுடர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.