திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூ உற்ஸவம் ஜூலை 26ல் துவங்குகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆடி மாதத்தில் ஆண்டாள் பூர நட்சத் திரத்தில் அவதரித்த நாளை முன்னிட்டு 11 நாட்கள் இந்த ஆடிப்பூர உற்ஸவம் நடைபெறும். இன்று மாலை 6:00 மணிக்கு மேல் அங்குரார்ப்பணமும், சேனை முதல்வர் புறப்பாடும் நடை பெறும். ஜூலை 26 ல் காலை 7:12 மணிக்கு மேல் ஆண்டாள், பெருமாள் திருக்கல்யாண மண்டபம் எழுந்தருளுகின்றனர்.
காலை 9:45 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து உற்ஸவம் துவங்கும். இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஆண்டாளும்,பெருமாளும் திருவீதி புறப்பாடு நடை பெறும். ஆக.,1ல் காலையில் அலங்கார திருமஞ்சனமும், மாலை சூர்ணாபிஷேகமும், தொடர்ந்து திருவீதி புறப்பாடும் நடைபெறும். ஆக. 4ல் காலை 8:16 மணிக்கு மேல் ஆண்டாளும். பெருமாளும் தேரில் எழுந்தருளுவர். மாலை 4:06 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கும். மறுநாள் காலை திருப்பாற்கடலில் தீர்த்தவாரியும், இரவில் தங்கப் பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.