பதிவு செய்த நாள்
06
அக்
2019
04:10
அன்னுார்:மொண்டிபாளையம், பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மேலைத்திருப்பதி என்று அழைக்கப்படும், அன்னுார் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை, பிருந்தாவனம் நடந்தது. பக்தர்கள், தாசர்களுக்கு தானியங்கள் படைத்து வழிபாடு செய்தனர். பலர், மாட்டு வண்டிகளில் வந்து பெருமாளை தரிசித்தனர்.நேற்றிரவு, கருட வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதர வெங்கடேசப் பெருமாளின் திருவீதியுலா நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். கோவை, அன்னுார், அவிநாசி மற்றும் புளியம்பட்டியிலிருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.