ஒரு பெண்ணுக்கு கோபம் வந்தால், அவளிடம், “ஏன் காளி மாதிரி ருத்ரதாண்டவம் ஆடுறே!” என்று கேலி செய்வார்கள். தோற்றத்தில் வேண்டுமானால் காளியிடம் கடுமை தெரியும். உண்மையில், அவள் கருணைக்கடல். நம்பியவர்களைக் கைவிட மாட்டாள்.இதோ ஒரு கர்ண பரம்பரைக் கதை.உஜ்ஜயினி நகரில் உயர்குலத்தில் பிறந்த ஒரு சிறுவன், சூழ்நிலை காரணமாக ஆடுமேய்ப்பவர் இல்லத்தில் வளர்ந்தான். பெரியவன் ஆனதும்,அவனும் ஆடு மேய்க்கும் தொழிலையே செய்தான்.
அவன் வாழ்ந்த ஊரில் வசித்த ஒரு ஆசிரியரிடம் ஒரு இளவரசி படித்தாள். அரண்மனை வாழ்வு தந்த ஆணவத்தால், அவள் ஆசிரியரையே மதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர், அவளுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காக, ஆடு மேய்க்கும் இளைஞனுக்கு அவளை மணம் முடிக்க ஏற்பாடு செய்துவிட்டார்.இளவரசி கலங்கவில்லை. அவள் காளி பக்தை. மகாகாளியிடம் தன் ஆணவத்துக்கு மன்னிப்பு கேட்ட அவள், தன் கணவனை மிகச்சிறந்த அறிவாளியாக்க வேண்டி விரதமிருந்தாள். தன் கணவனுக்கு காளி மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தாள். அவனும் அம்மந்திரத்தைச் சொல்லி காளியின் நேரடி தரிசனம் பெற்றான். அவனை உலகம் போற்றும் புலவராக்கினாள் காளிதேவி. அவரே மகாகவி காளிதாசர்.காளியின் தோற்றம் கடுமையானது தான். அதைக் கொண்டு அவளை <உக்கிர தெய்வமாகக் கருதி ஓடக்கூடாது. அவளது கருணையைப் பெற யாசிக்க வேண்டும். நவராத்திரி காலத்தில் அவளை அவசியம் வணங்கி வாருங்கள்.தேசத்தை ஆபத்து சூழ்ந்துள்ள இந்நேரத்தில் ‘ஓம் காளி’ என்ற மந்திரம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.