பதிவு செய்த நாள்
21
நவ
2019
03:11
போத்தனுார் : குறிச்சி அரவான் திருவிழா முன்னிட்டு, அரவான் - பொங்கியம்மன் திருமண விழா நேற்று நடந்தது.
குறிச்சி கிராமத்துக்கு உட்பட்ட அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் ஒற்றுமை விழா எனும் அரவான் திருவிழா, 12ல் துவங்கியது. தொடர்ந்து, 18 வரை தினமும் இரவு,அரவான் சிறப்பு பூஜை நடந்தது.நேற்று முன்தினம் பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல் நடந்தது. நேற்று காலைஅரவான் அலங்கரிக்கப்பட்டு, உருமால் கட்டும் சீர் முடிந்து, பெருமாள் கோவிலில் இருந்து அரவான் எழுந்தருளினார்.தொடர்ந்து குறிச்சி குளக்கரை விநாயகர் கோவிலில் தீர்த்தமாடி சிறப்பு வழிபாட்டுடன் அரவான் புறப்பட்டார்.
இரவு அரவான் கோவிலில் அரவான் - பொங்கியம்மன் திருமண விழா நடந்தது. முன்னதாக, மாவிளக்கு வழிபாடு நடந்தது; திரளானோர் பங்கேற்றனர்.இன்று மதியம் அரவான் கோவிலில் முக்கிய விழா துவங்குகிறது. இரவு, 8:30 மணிக்கு குளக்கரை கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு சீர்முறை வழிபாடு முடித்து, அரவான் புறப்படுதலை தொடர்ந்து, மந்தைவெளி மைதானத்தில் முதுப்பார் சமூக பூஜை நடக்கிறது.நாளைகாலை, 6:30க்கு பிள்ளைமார் சமூக பூஜையை தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமூக பூஜை நடக்கிறது. இதையடுத்து, அரவான் வீதி உலா புறப்படுதல் நடக்கும். இதில், கற்பூர உப்பிலிய நாயக்கர், சேர்வைக்காரர், ரவுண்டு ரோடு தேவர், பொள்ளாச்சி ரோடு பொதுமக்கள், தேவர் சமூகம், முருகா நகர் பொதுமக்கள், சுந்தராபுரம் கோனார் சமூகம், போயர் சமூகம் குறிச்சி போயர் சமூகம், பூசாரி வீதி வள்ளுவர் சமூக பூஜைகளும் நடைபெறும். இறுதியாக, தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில், அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் முன்னிலையில், களப்பலியுடன் விழா நிறைவடையும்.