தை அமாவாசையில் நவபாஷாணம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2020 11:01
தேவிபட்டினம் : தேவிபட்டினத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நவகிரகங்கள் பிரசித்தி பெற்றது. சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன் இங்கு வந்த ராமபிரான் இந்த நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றதாலும், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், முன்னோருக்கு தர்பணம் உள்ளிட்ட பல்வேறு பரிகார பூஜைகளும் இங்கு செய்யப்படுவதால் பிரசித்தி பெற்றுஉள்ளது. நேற்று தை அமாவாசை என்பதால், முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் நவபாஷாணத்திற்கு வந்து கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்பணம் செய்தனர். முன்னதாக கடலில் புனித நீராடிய பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், தக்கார் நாகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பக்தர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் அதிகாலை முதல் பிற்பகல் வரை பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு பித்ருக் கடன், தர்ப்பணம், திதி உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை செய்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்ட சுற்று வட்டார கிராமத்தினரும் குடும்பத்துடன் பங்கேற்று பித்ரு கடன் பூஜைகளை புரோகிதர்கள் மூலம் செய்து வழிபட்டனர்.இங்குள்ள சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள தமிழ் மாமுனிவர் அகத்தியர், விநாயகர் கோயிலின் முன்பு சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.சேதுக்கரை ஊராட்சி சார்பில் மருத்துவ, சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கடற்கரை ஓரங்களில் ஏராளமான சிறு கடைகள் விரிக்கப்பட்டிருந்தன. திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் காலை முதல் பாலாபிஷேகம் நடந்தது. அன்னதானம் நடந்தது. அருகே உள்ள கடற்கரையில் புனித நீராடி தர்ப்பணம் உள்ளிட்ட பூஜைகளை செய்தனர். மூக்கையூர் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடி சங்கல்ப பூஜைகளை செய்தனர்.வழிபாடு செய்த பின், முன்னோர் நினைவாக பசுக்களுக்கு அகத்தி கீரையை உணவாக வழங்கினர்.