பெல்ஜியம் நாட்டில் சாதாரண குடும்பத்தில் பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தவர் டேமியன். தந்தை தானிய வியாபாரம் செய்தார். கல்லுாரி படிப்பை முடித்த டேமியன் மிஷினரியில் பணியாற்றச் சென்றார். ஹவாய் நாட்டில் ஒரு தேவாலயத்தின் பாதிரியாராக நியமிக்கப்பட்டார். ஒரு சமயம் அங்கு குஷ்ட ரோகம் பரவத் தொடங்கியது. நோயாளிகளை தனிப்படுத்தும் விதமாக மோலக்காய் என்னும் தீவுக்கு மக்களை அரசு அனுப்பியது. மருத்துவ வசதி ஏதும் இல்லாததால் மக்கள் விரக்தியடைந்தனர். நடைப்பிணமாக வாழ்ந்த அவர்களின் மீது பரிவு கொண்டார் டேமியன். பிஷப் மெய்கிரேட் என்பவருடன் மோலக்காய் தீவுக்குச் சென்று மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.
நோயாளி யாராவது இறந்தால் அவர்களுக்கு சவப்பெட்டி செய்யும் பணியைக் கூட செய்தார். நாளடைவில் டேமியனும் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டார். ஆனால் வருந்தவில்லை. அப்போதும் சேவையில் ஈடுபட்ட அவர், தன் 49ம் வயதில் மரணமடைந்தார். மோலக்காய் தீவிலேயே அடக்கம் செய்தனர். ஆனால் 47 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது உடலை ஹவாய் நாட்டு அரசின் அனுமதியுடன் கப்பலில் கொண்டு வந்து தாய்நாட்டில் அடக்கம் செய்தனர். அவரைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளியாயின. ஆர்.எல்.ஸ்டீபன்சன் என்னும் எழுத்தாளர், ‘‘நாம் செய்யத் தவறிய தொண்டுகளை டேமியன் செய்து அதில் வெற்றி கண்டார். அரண்மனை போன்ற வீடுகளில் நாம் சொகுசாக வாழ்ந்த போது, அவர் மக்கள் நலனுக்காக உயிரையும் பணயம் வைத்து களத்தில் இறங்கி உயிர் நீத்தார்’’ என்றார். இவர் போன்ற உத்தமர்களை நல்ல நெஞ்சங்கள் ஒருபோதும் மறப்பதில்லை.