பதிவு செய்த நாள்
17
பிப்
2020
11:02
திருப்பதி: காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை கண்ணப்ப கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியில், காளஹஸ்தீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில், வாயுலிங்க ஷேத்திரமாக புகழ்பெற்றுள்ளது.சிலந்தி, யானை, பாம்பு இணைந்து சிவனை வழிப்பட்ட ஸ்தலம் என்பதால், காளஹஸ்தி என்று பெயர் பெற்றது. அதனால், இங்கு உறையும் சிவன், காளஹஸ்தீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.இக்கோவிலில், ஆண்டுதோறும், மகாசிவராத்திரியை முன்னிட்டு, வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரண்டு வாரங்கள் நடக்கும் இந்த உற்சவத்தை காண, பக்தர்கள் இங்கு கூடுவர்.
அதன்படி, நேற்று, இக்கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது. அதற்கு அடையாளமாக மாலை, 4:00 மணிக்கு, கண்ணப்ப மலை மேல் உள்ள கொடிமரத்தில், முதலில் கொடி ஏற்றப்பட்டது.சிவன் மேல் இருந்த அபரிமிதமான பக்தியால், கண்ணப்ப நாயனார், தன் கண்ணையே பிடுங்கி சிவனுக்கு வைத்த பெருமை பெற்றவர். அதனால், அவர் சிவனின் முதல் பக்தனாக இன்றும் போற்றப்பட்டு வருகிறார்.எனவே, அவரின் பக்தியை நினைவுகூரும் விதம், முதலில் கண்ணப்ப மலையில் கொடியேற்றம் நடந்து வருகிறது. இதில், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பிரம்மோற்சவம் துவங்கியதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் மலர் அலங்காரங்களும், மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.மேலும் வாகன சேவையின் போது உற்சவமூர்த்திகளுக்கு அலங்கரிக்கும் ஆபரணங்கள் அனைத்தும் வங்கியிலிருந்து கோவிலுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளன.