காஞ்சி மகாசுவாமிகள் தம்மை தேடி வரும் பக்தர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பார். உடல் உபாதையைப் போக்க இயற்கை வைத்திய முறைகளையும் பரிந்துரைப்பார். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்னும் கோட்பாட்டை சுவாமிகள் பின்பற்றினார். எந்த உணவைச் சாப்பிட்டால் என்ன நோய் தீரும் என அவ்வப்போது சொல்லுவார். சிலநேரங்களில் புரியாத பரிபாைஷயில் சொல்லி விட்டு, பின்னர் இது தான் விஷயம் என சிரித்தபடியே விளக்குவார். ஒருமுறை சுவாமிகளை தரிசிப்பதற்காக வந்த பக்தர் ஒருவர், ரத்தசோகை, மூட்டுவலி, உடல் சோர்வால் அவதிப்படுவதாக வருத்தப்பட்டார். ‘‘தங்க பஸ்பம் சாப்பிட்டால் நோய்நொடி அண்டாது’’ என்றார் சிரித்தபடியே. ‘‘தங்க பஸ்பமா? அவ்வளவு பணத்திற்கு எங்கே போவேன் சுவாமி?’’ என்றார் பக்தர். கலகலவென சிரித்தபடி,‘‘தங்க பஸ்பம் என்றால் அதுவும் ஒரு கீரை தான் தெரியாதா?’ என்றார். புரியாமல் விழித்தார் பக்தர். ‘மணத்தக்காளிக் கீரை தான் தங்க பஸ்பம்! அதில் ரத்த விருத்திக்கு தேவையான இரும்புச்சத்து, எலும்புக்குத் தேவையான கால்சியம் என பல சத்துக்களும் அதிலிருக்கிறது. தினமும் சாப்பாட்டில் மணத்தக்காளிக் கீரை இருக்கிற மாதிரி பார்த்துக் கொள். ரத்தம் விருத்தியாகும். மூட்டுவலியும் குறையும். நோயின்றி சுகமாக வாழலாம்’’ என்றார். அதையே வேதவாக்காக பக்தரும் ஏற்றார். யாராவது முதுகுவலி என்று வருந்தினால் சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் சரியாகும் என்றும், சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவார். பிரண்டை துவையல், மிளகு ரசம், மஞ்சள் பொடி கலந்த பால் இவையெல்லாம் வயிறு பிரச்னை, தொண்டை வலி, ஜலதோஷம் போக்கும் என அடிக்கடி எடுத்துரைப்பார். யார் குடும்பத்தில் நோய் இல்லையோ அவர்களின் வீட்டில் மூன்றுவகை எண்ணெய் இருக்கும் என்பார் மகாசுவாமிகள். 1. நல்லெண்ணெய் – சமையலுக்கு ஏற்றது, விளக்கேற்ற உதவும், எண்ணெய்க் குளியலுக்கு உகந்தது. 2. விளக்கெண்ணெய் – மலச்சிக்கல் தீர்க்கும், உடல் சூட்டைத் தணிக்கும் 3. வேப்பெண்ணெய் – கை, காலில் வலிக்கும் இடத்தில் தொடர்ந்து தடவ பிரச்னை தீரும் துறவியாக இருந்தாலும் எளிய வைத்திய முறைகளைக் கூட மகாசுவாமிகள் தெரிந்திருக்கிறாரே என்று பக்தர்கள் வியந்து நிற்பர்.