ஒருமுறை இங்கிலாந்து ராணி மாலை நேரத்தில் சாதாரண உடை அணிந்து தனியாக புறப்பட்டாள். யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. திடீரென மழை பெய்யத் தொடங்கியது. ஒரு வீட்டின் வராந்தாவில் ஒதுங்கி நின்றாள். மழையோ விட்டபாடில்லை. ‘தனக்கு குடை தர முடியுமா?’ என அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் கேட்டாள். ஆனால் விருப்பமில்லாத அவள் அரைமனதுடன் பழைய குடை ஒன்றைக் கொடுத்தாள். மறுநாள் காலை அவள் வீட்டிற்கு அரசாங்க சேவகர்கள் நன்றி தெரிவிக்க வந்தனர். ராணி கைப்பட எழுதிய நன்றிக் கடிதத்தையும் அளித்தனர். அந்த வீட்டுப்பெண் அதை அவமானமாக கருதினாள். ‘‘ஐயோ.... நேற்று வந்த பெண் ராணி எனத் தெரிந்திருந்தால் நன்றாக உபசரித்திருப்பேனே! எளிய உடையில் இருந்ததைக் கண்டு ஏமாந்து விட்டேனே!’’ என வருந்தினாள். ஒருவரின் ஆடை, ஆபரணத்தைக் கண்டு ஆளை எடை போடக் கூடாது. அன்பால் அனைவரையும் அரவணைக்க வேண்டும்.