செக்கரியா, எலிசபெத் தம்பதிக்கு முதிர் வயதில் பிறந்த குழந்தை யோவான். கடவுளின் அற்புதத்தைக் கண்டு வியந்த செக்கரியா “குழந்தாய்! ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்’’ என வாழ்த்தினார். யோவான் இயேசுவை விட ஆறு மாதம் மூத்தவர். இருவரும் சொந்தக்காரர்கள். பாலைவனத்தில் வாழ்ந்த யோவானுக்கு ஒட்டக மயிரும், வார் கச்சையும் அவரது ஆடைகள். காட்டுத்தேனும் வெட்டுக்கிளியுமே உணவு. யோவானுக்கு ஆண்டவரின் அழைப்பு வந்தது. மக்களின் மன மாற்றத்துக்காகப் போதிக்க ஆரம்பித்தார். அவரது போதனையில் ஈடுபட்ட பலர் திருமுழுக்கு பெற்றனர். அவர்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டனர். “உன்னிடம் இரண்டு அங்கி இருந்தால், ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு. இருக்கும் உணவையும் பகிர்ந்து சாப்பிடு’’ என்றார். வரி வசூலிப்பவர்கள் அவரிடம் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” ? எனக் கேட்டனர். “எவ்வளவு வசூலிக்க வேண்டுமோ அதை மட்டும் வசூலியுங்கள். நேர்மையாய் இருங்கள்” என்றார். படைவீரர்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றனர். “யாரையும் அச்சுறுத்தி பணம் பறிக்க வேண்டாம். பொய் குற்றம் சுமத்த வேண்டாம். சம்பளமே போதும் என்றிருங்கள்” என்றார். யோவானைப் பற்றிய பேச்சு ஊரெங்கும் பரவியது. அப்போது குறுநில மன்னர் ஏரோது ஆட்சி செய்தார். தம் சகோதரனின் மனைவியான ஏரோதியாளை அபகரித்து அவளுடன் வாழத் தொடங்கினார். “ஏரோது! நீ செய்வது பாவம்! மனம் திரும்பு’’ என யோவானின் குரல் அச்சமின்றி தெரிவித்தார். கோபமடைந்த மன்னர் யோவானைச் சிறையில் அடைத்தார். அப்போது, ‘‘யோவானை விடப் பெரியவர் யாரும் இல்லை” என இயேசு அறிக்கையிட்டார். இந்நிலையில் ஒருநாள் ஏரோதின் பிறந்த நாள் வந்தது. ஏரோதியாளின் மகள் சலோமி என்பவள் அற்புதமான நாட்டியத்தை மன்னரின் முன் நடத்தினாள். “என்ன வேண்டுமோ கேள்! நான் தருகிறேன்” என மன்னர் அறிவித்தார். “யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தரவேண்டும்” என்றாள் சலோமி. அவளது தாயின் அறிவுரை அதுவாக இருந்தது. அதன்படி யோவானின் தலை வெட்டப்பட்டு தட்டில் வைத்து அளிக்கப்பட்டது. அதை அவளும் கொண்டு போய் தன் தாயிடம் கொடுத்தாள். தயங்காத மனம், அஞ்சாத உறுதி மிக்க யோவானின் வாழ்வு இத்துடன் நிறைவு பெற்றது.