பதிவு செய்த நாள்
14
ஆக
2020
02:08
தஞ்சாவூர், தஞ்சாவூர் புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடி மரத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது.
மேலும், உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ச. கிருஷ்ணன், பெரியகோயில் செயல் அலுவலர் எஸ். மாதவன், மாரியம்மன் கோயில் மேற்பார்வையாளர் செந்தில்குமார், தலைமைக் கணக்கர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான ஆக. 23ம் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆக. 30ம் தேதி அன்ன வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது. மூன்றாம் வார ஞாயிற்றுக்கிழமையான செப். 6ம் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு, செப். 7ம் தேதி பெரிய காப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, தொடர்ந்து 8 நாள்களுக்கு அம்மன் புறப்பாடு நடைபெறும். இந்தப் புறப்பாடுகள் அனைத்தும் கோயிலுக்குள் நடைபெறும் என்றும், கடந்த ஆண்டுகளைப் போன்று வெளியில் புறப்பாடு இல்லை எனவும், கரோனா பரவல் அச்சம் காரணமாகக் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், திருத்தேரோட்டம், தெப்பத் திருவிழா நடைபெற வாய்ப்பில்லை என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.