Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஷ்ணு புராணம் இரண்டாவது அம்சம் ... விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம் (பகுதி-2) விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம் ...
முதல் பக்கம் » விஷ்ணு புராணம்
விஷ்ணு புராணம் மூன்றாவது அம்சம் (பகுதி-1)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 மே
2012
04:05

1. கடந்த மனுவந்தரங்கள்

மைத்ரேய முனிவர், பராசரரை நோக்கி, மகரிஷியே! பூமி, சமுத்திரங்கள், முதலானவற்றைப் பற்றியும், சூரியன் சந்திரன் முதலிய கோள்களைப் பற்றியும், தேவதைகள் ரிஷிகள் ஆகியோரின் படைப்பையும், துருவனுடைய சரிதத்தையும், பிரகலாதனின் வரலாற்றையும், அடியேனுக்குக் கூறினீர்கள். இனிமேல் சகல மனுவந்தரங்களையும், அவற்றின் அதிபதிகளையும், தேவர்களையும் பற்றித் தங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன் என்றார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! ஆதியில் சுவாயம்புவ மநுவிலிருந்து துவங்கி, சுவாரோ சிஷர், உத்தமர், தாமசர் ரைவதர், சாக்ஷúஷர் என்ற மனுக்கள் அறுவரும் முறையே சென்றனர். இப்பொழுது சூரியகுமாரரான வைவஸ்வத மனுவினுடைய அந்தரம் நடைபெறுகின்றது. இந்தக் கல்பத்தின் ஆதியில் நடந்த சுவாயம்புவ மநுவந்தரத்தையும் அதிலிருந்த தேவர், முனிவர் முதலானவர்களையும் சொன்னேன். இனி, சுவாரோசிஷ மனுவந்தரத்தில், பாராவாரர், துஷிதர் என்ற தேவதைகளும் விபச்சித் என்ற இந்திரனும் ஊர்ஜ ஸ்தம்பன், பிராணன், தத்தன், அக்கினி, ரிஷபன், நிஸ்வான், சார்வரீவான் என்ற சப்தரிஷிகளும் இருந்தனர். இப்படி இரண்டாவது மனுவந்தரம் நடந்தது. மூன்றாவது உத்தம மனுவந்தரம். இதில் சுசாந்தி என்பவன் இந்திரனானான். சுதாமாக்கள், சத்தியர், சிவர், பிரதர்த்தனர், வசவர்த்திகள் என்ற ஐந்து கணதேவதைகள் கணம் ஒன்றுக்குப் பன்னிருவராகச் சேர்ந்திருந்தார்கள். வசிஷ்டருடைய பிள்ளைகள் சப்தரிஷிகள், அஜன், பரசுதிவியன், முதலியவர்கள் மனுவின் குமாரர்கள். நான்காவது தாமச மனுவின் அந்தரத்திலே சுபாரர், ஹரிகள் சத்தியர் சுதீகர் என்ற கணதேவதையர் கணமொன்றுக்கு இருபத்தேழு பேர்களாக இருந்தார்கள். சிபிச் சக்கரவர்த்தி நூறு அசுவமேத யாகங்களைச் செய்ததால் வஜ்ரா யுதமேந்திய இந்திரனானான். ஜோதிர்த்தாமா, பிருகு, காரியன், சைத்திரன், அக்னி, தனகன், பீவான் என்ற சப்தரிஷிகள் இருந்தனர். நரன், கியாதி, சேதுரூபன், சானு, சங்கன் முதலியோர் அந்தத்தாமச மனுவின் புத்திரர்கள். ஐந்தாவது ரைவத மனுவந்தரம். இதில் விபு என்பவன் இந்திரன், அமிதாபர், பூதனயர் வைகுண்டர், சுசமேதர் என்பவர்கள் தேவகணங்களாய்க் கணத்துக்கு பதினான்கு பேர்களாக இருந்தார்கள். இரணிய ரோமா, வேதசிரீ ஊர்த்துவபாகு, அபரன், வேதபாகு, சுதாமா, பர்ச்சனியன் என்பவர்கள் சப்தரிஷிகள். சுசம்பாவியன், பலபந்து, சத்தியகன் முதலியவர்கள் இந்த மனுவின் குமாரர்கள்.

இந்தச் சுவாரோசிஷர், உத்தமர், தாமசர், நைவதர் என்ற மனுக்கள் நால்வரும் பிரியவிரதருடைய வமிசத்தில் பிறந்தவர்கள். அந்தப் பிரியவிரதர் என்பவர் ராஜரிஷியாவார். அவர் தவத்தால் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதித்து தன் குலத்தில் மனுவந்தராதியதிகள் உண்டாகும்படியான பாக்கியத்தைப் பெற்றார். ஆறாவது மனுவந்திரத்தின் அதிபதி சாக்ஷீஷர் என்ற மனுவாகும். மனோ ஜவன் என்பவன் இந்திரன், ஆப்பியர், பிரசூதர், பவியர், பிருதுகர், லேகர் என்ற ஐவர் கணதேவதைகள். இவர்கள் கணமொன்றுக்கு எட்டுப்பேராக இருந்தனர். இவர்கள் மகானுபாவர்கள். சுமேதன் விரஜன் அவிஷ்மான். உத்தமன் மது அதிநாமா சகிஷ்ணு என்போர் சப்தரிஷிகள். ஊரு பூரு சதத்தியும்னன் முதலான அந்த மனுவின் புத்திரர்கள் அரசரானார்கள். இனி இப்போது நடைபெறும் ஏழாவது மனுவந்தரத்துக்குச் சூரிய புத்திரரான சிரார்த்த தேவன் மனுவாகி இருக்கிறான். இதில் ஆதித்தியர், வசுக்கள், ருத்திரர் முதலானோர் தேவதைகளாக இருக்கிறார்கள். புரந்தரன் என்பவன் இந்திரன். வசிஷ்டர், காசியபர், அத்திரி, ஜமதக்னி, கவுதமர், விசுவாமித்திரர், பரத்வாஜர் என்போர் சப்தரிஷிகள். இஷ்வாகு, நிருகன், திருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், கரூஷன், விரூஷத்திரன் இந்த ஒன்பதின்மரும் மனுவின் புத்திரர்கள். உலக ரட்சணைக்குரிய ஒப்பற்ற ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக சுக்தியானது சகல மனுவந்தரங்களிலேயும் தேவதாவதாரத்தினால் மனு முதலானோரிடமும் வியாபித்துள்ளது. ஸ்ரீமகாவிஷ்ணு சுவாயம்புவ மனுவந்தரத்தில் ஆகுதி என்பவளிடம் யக்ஞன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். பிறகு உத்தம மனுவந்தரத்திலே சத்யை என்பவளிடம் சத்தியன் என்ற திருப்பெயரோடு அவதரித்தார். மறுபடியும் அவர் தாம்ச மனுவந்தரத்திலே ஹரியை என்பவளது கர்ப்பத்தில் ஹரிகள் என்ற தேவர்களுடன் ஹரி என்ற திருப்பெயரில் அவதரித்தார். சாக்ஷúஷ மனுவந்தரத்தில் விகுண்டையின் கருவில் வைகுண்டர் என்ற தேவதைகளோடு வைகுண்டர் என்ற திருப்பெயரில் அவதரித்தார். இந்த வைவசுவத மனுவந்தரம் வந்தபோது, காசிபருக்கு அதிதியிடத்திலே வாமனரூபியாய் அவதரித்து மூன்றடிகளால் சகல உலகங்களையும் ஆக்ரமித்து பகையழித்து அவற்றைப் புரந்தரனுக்கு அளித்தார். இவ்விதமாக ஸ்ரீவிஷ்ணுபகவான் ஏழு மனுவந்தரங்களிலும் ஏழு திருவவதாரம் செய்து மனு முதலான சகல பிரஜைகளையும் காத்து வருகிறார். அந்த சுவாமியானவர் தமது சக்தியினால் மனு முதலான சகல பிரபஞ்சத்தையும், அனுப்பிரவேசித்திருப்பதால் விஷ்ணு என்ற திருப்பெயரைப் பெற்றார். சகல மனுக்களும் சகல சப்த ரிஷிகளும், சகல மனுகுமாரர்களும், இந்திரர்களும் யாவரும் ஸ்ரீவிஷ்ணுவின் ஐசுவரியமானவர்கள் என்பதை அறிவீராக!

2. இனிவரும் மனுவந்தரங்களின் விளக்கம்

பராசரரே! இதுவரை உண்டான மனுவந்தரங்களைச் சொன்னீர்கள்! இனிவரும் மனுவந்தரங்களையும் அடியேனுக்குச் சொல்லியருள வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். பராசரர் கூறலானார். சூரியனுக்கு சமிக்ஞை என்ற மனைவி ஒருத்தி இருந்தாள். அவர் விசுவகர்மாவின் மகள். சிரார்த்த தேவன் என்ற மனுவும் யமதர்மராஜனும் யமுனா என்ற நதியும் அவளுக்குப் பிறந்தனர். சமிக்ஞை தன் கணவனின் தேஜஸைச் சகிக்கமுடியாமல் தன் நிழல் என்று சொல்லும்படியான தன்னைப்போன்ற ஒருத்தியையுண்டாக்கி சாயாதேவியெனும் அப்பெண்ணைத் தன் கணவனுக்குப் பணிவிடைகள் செய்யும்படி வைத்துவிட்டு தவஞ்செய்யக் காட்டுக்குச் சென்றாள். சூரியன் அந்தச் சாயாதேவியைத் தன் பத்தினியாகிய சமிக்ஞை என்றே நினைத்து அவளிடத்திற் சேர்ந்து, சனியையும் மற்றொரு மனுவையும் தபதி என்பவளையும் பெற்றான். இது இப்படியிருக்க, ஒருநாள் யமன் சாயாதேவியைத் தனது தாயாகவே நினைத்து, உதைக்கப்போகும் போது சாயாதேவி கோபங்கொண்டு அவனை சபித்தாள். அவள் கருணையில்லாதவளாக இருந்ததால், அவள் தன் தாயல்ல என்பதை யமன் உணர்ந்தான். பிறகு சாயாதேவி உண்மையைச் சொல்லக் கேட்ட சூரியன், யோகதிருஷ்டியினால் ஆலோசித்தான். அப்போது தன் மனைவி சமிக்ஞை என்பவள் பெண் குதிரையின் வடிவில், வனத்தில் தவஞ்செய்து கொண்டிருப்பதை சூரியன் அறிந்தான். பிறகு சூரியன், தானும் குதிரையின் வடிவு எடுத்துக் கொண்டு, அவள் இருக்குமிடத்திற்குச் சென்று அவளிடத்தில் அசுவினி தேவதைகள் இருவரையும், வீரியத்தின் கடைசிப் பாகத்தினால் ரேவந்தன் என்பவனையும் உண்டாக்கி மறுபடியும் அந்தச் சமிக்ஞையை தனது இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றான். பின்பு விசுவகர்மாவானவன், சூரிய மண்டலத்தைத் தனது சாணைச் சக்கரத்தில் வைத்துத் தேய்த்து, அவனது தேஜசில் எட்டில் ஒரு பங்கைக் குறைத்து விட்டான். இவ்விதம் விசுவகர்மாவினால் தேய்த்துத் தள்ளப்பட்ட தேஜோபாகமானது, மிகவும் பிரகாசத்தோடு பூமியில் விழுந்தது. பூமியில் விழுந்த அந்தத் தேஜோ பாகத்தைக் கொண்டு விசுவகர்மா ஸ்ரீவிஷ்ணுவுக்குச் சக்கரத்தையும், சிவனுக்கு சூலத்தையும், சுப்ரமணியனுக்கு வேலாயுதத்தையும், குபேரனுக்கு சிபிகை என்ற ஆயுதத்தையும் செய்து கொடுத்தான்.

சூரியனுக்கு சாயாதேவியிடம் பிறந்த இரண்டாவது குமாரனை மனுவென்று சொன்னேன் அல்லவா? அந்த மனு முன்பிருந்த மனுவுக்கு இணையாக இருந்ததனால் சாவர்ணி என்று அழைக்கப்பட்டார். இனி வரும் எட்டாவது மனுவந்தரம் அந்தச் சாவர்ணியினுடையதாகும். அந்த மனுவந்தரத்தில் சுபதர், அமிதாபர் முக்கியர் என்ற தேவர்கள் உண்டாவார்கள். அந்தத் தேவர்கள் கணத்துக்கு இருபதின்மராக இருப்பார்கள். தீப்திமான், காலவர், இராமர், கிருபர், அசுவத்தாமா, எனது மகனான வியாசர், ருஷிய சிருங்கர் ஆகிய இவர்கள் அந்த மனுவந்தரத்தின் சப்தரிஷிகள். ஸ்ரீவிஷ்ணுவின் திருவருளால் பாதாளத்தில் வாசஞ்செய்து கொண்டிருக்கும் விரோசன குமாரரான பலிச்சக்கரவர்த்தி அந்த மனுவந்தரத்தில் தேவர்களுக்கு அரசனாவான். விரஜன், சர்வரீவரன், நிர்மோகன் முதலனா அந்த மனுவின் புதல்வர்கள் அரசராவார்கள். இனி ஒன்பதாவது மனு தக்ஷசாவர்ணி என்பவராவார்! அவரது அந்தரத்தில் வார், மரீசி கர்ப்பர் சுதர்மாக்கள் என்ற தேவர்கள் கணமொன்றுக்கு பன்னிருவராக இருப்பார்கள். அத்தேவதைகளுக்கு அற்புதன் என்போன் அதிபதியாவான். சவனன், தியுதிமான், அவியன் வசு மேதாதிதி, ஜோதிஷ்மான் சத்தியன் என்பவர்கள் சப்தரிஷிகள் ஆவார்கள். திருதகேது தீப்தகேது பஞ்சஹ்ஸ்தன் நிராமயன் பிருதுச் சிரவன் முதலியோர் அந்தத் தக்ஷõசார்வணி மனுவின் குமாரர்களாவர். இனிப் பிரமசாவர்ணி என்பவர் பத்தாவது மனுவாவர். அந்த அந்தரத்தில் சுதர்மாக்கள், வீருதர் என்ற தேவர்கள் நூறு நூறாய்ச் சேர்ந்த கூட்டமாக இருப்பார்கள். அவர்களுக்கு மகா பலசாலியான சாந்தி என்பவன் இந்திரனாவான். அந்த அந்தரத்தில் ஹவிஷ்மான், சுகிருதன், சத்தியன் தபோ மூர்த்தி, நாபாகன், அப்பிரதிமௌஜன், சத்தியகேது என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சுஷேத்திரன், உத்தமன்ஜு, புரிஷேணன் முதலான பதின்மர் அந்த மனுவின் குமாரர்களாவார்கள். அவர்கள் இந்தப் பூமியை ரக்ஷித்து வருவார்கள். பதினோராவது மனு தர்மசாவர்ணி என்பவர், அவருடைய அந்தரத்திலே விகங்கமரென்றும், காமகமரென்றும், நிர்வாணரென்றும் ருசிகள் என்றும் சொல்லப்பட்ட தேவர்கள் முக்கியமாவார்கள். அவர்கள் கணம் ஒன்றுக்கு முப்பது முப்பது பேரிருப்பார்கள். விருஷா என்பவன் அவர்களுக்கு இந்திரனாவான். அப்போது நிச்சரன், அக்னித் தேஜன், வபுஷ்மான்; கிருணி; ஆருணி; அவிஷ்மான், அனகன் என்பவர்கள் சப்தரிஷிகளாவார்கள். சர்வத்திரகன்; ஸ்வதர்மா; தேவானீகன் முதலியவர்கள் அந்த மனுவின் புதல்வர்களாவார்கள். ருத்திர புத்திரராகிய ருத்திர சாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மனுவாவார். அவருடைய அந்தரத்தில் ருது தாமா என்பவன் இந்திரனாவான். அரிதர், ரோகிதர், சமனசர், சுகர்மர்; சுராபர் என்ற தேவர் கூட்டம் ஒன்றுக்குப் பப்பத்துப் பேராக இருப்பார்கள். தபஸ்வீ, சுதபன், தபோமூர்த்தி, தபோரதி, தபோதிருதி, தபோதியுதி, தபோதனன் என்ற இந்த எழுவரும் சப்தரிஷிகள். தேவவான், உபதேவன், தேவசிரேஷ்டன் முதலான அந்த மனுபுத்திரர்கள் அரசர்களாவார்கள். ரவுச்சியன் என்பவர் பதின்மூன்றாவது மனுவாவர். சுத்திராமர், சுதாமர், சுகர்மர் என்ற தேவதைகள் கணத்துக்கு முப்பத்து மூவராக இருப்பார்கள். மகாவீரியனான திவஸ்வதி என்பவன் இந்திரனாவான். நிர்மோஹன், தத்துவதர்சி நிஷ்பிரகம்பியன், நிருச்சுகன், திருதிமான் புதல்வர்களான சித்திரசேனன், விசித்திரன் முதலியவர்கள் அப்பொழுது வேந்தராவார்கள். பதினாலாவது மனுவாக பவுமன் என்பவனாவான். அந்தக்காலத்தில் சுசி என்பவன் இந்திரனாக இருப்பான். சாக்ஷúஷர், பவித்திரர், கனிஷ்டர், பிராசிதர், வாசாவிருத்தர் என்று தேவகணங்கள் ஐந்துண்டு. அக்கினிபாகு; சுசி; சுக்கிரன், மாகதன், ஆக்னீத்திரன், யுத்தன், ததாஜிதன் என்போர் சப்தரிஷிகளாவார்கள். அந்த மனுவுக்கு உரு, கம்பீரபுத்தி முதலனா குமாரர்கள் பிறப்பார்கள். அவர்கள் தான் இந்தப் பூமியைக் காத்து வருவார்கள்.

கிருதயுக முதல் நான்கு யுகங்களின் முடிவில் வேதங்களுக்கும் அழிவுண்டாகும் அல்லவா? அப்போது அந்தச் சப்தரிஷிகள் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து மீண்டும் அந்த வேதங்களைப் புதுப்பிப்பார்கள். கிருது யுகந்தோறும் அந்தந்த மனுக்கள் சுமீருதி என்ற தரும சாஸ்திரத்தை இயற்றி வருவார்கள். தேவதைகளோ மனுவந்தரம் முடியும் வரையில் யாகங்களில் ஹவிர்ப்பாகங்களைப் புசித்து வருவார்கள். மனுபுத்திரர்களாலும் அவரது குலத்தில் பிறக்கும் அரசர்களாலும் மனுவந்தரத்தின் இறுதிவரையிலும் பூமியானது ரக்ஷிக்கப்பட்டுவரும். இப்படியே மனுவந்தரம் தோறும் அவராலேயே உலகவுபகாரம் நிகழ்ந்து வரும். மனுவும் சப்தரிஷிகளும் தேவர்களும் இந்திரனும் மனுவின் புதல்வர்களும் எம்பெருமானுடைய சங்கல்ப காரியத்தை நிறைவேற்றும் அதிகார புருஷர்களாக விளங்குவார்கள். இவ்விதமாகப் பதினான்கு மனுவந்தரங்கள் கழியும்போது, ஆயிரம் யுகங்களின் அளவுள்ள ஒரு கல்பகாலம் சம்பூரணமாகின்றது. இது ஒரு பகற்காலம், இவ்வளவேயுள்ள இரவுக்காலமும் கழிந்த பிறகு பிரம சொரூபத்தை அனுஷ்டித்து எழுந்தருளியிருப்பவனும் முதல் சிருஷ்டி கர்த்தாவும், சகல ஐசுவரியமுள்ளவனும், சகல சொரூபியுமான ஸ்ரீஜனார்த்தன பகவான், மூவுலகையும் உட்கொண்டு யோக நித்திரையை ஆஸ்ரயித்து உலகமெல்லாம் அழிந்த மகார்ணவ ஜலத்திலே ஆதிசேடனாகிய படுக்கையிலே திருக்கண் வளர்வான். பிறகு, பகவான் யோக நித்திரையிலிருந்து விழித்து, ரஜோகுணத்தை யாச்ரயித்து முன்போலவே உலகப்படைப்பை நடத்துவான். மனுவந்தரந்தோறும் உள்ள மனு தேவ இந்திர சப்தரிஷி மனுபுத்திரர்கள் யாவரும் ஸ்திதியைச் செய்யவல்ல ஸ்ரீவிஷ்ணுவின் சாத்வீக அம்சமாவார்கள். உலகங்களை நிலைபெறச் செய்யும் தொழிலுடைய ஸ்ரீவிஷ்ணு சகல உயிரினங்களுக்கும் இதம் உண்டாகும்படிக் கிருதயுகத்தில் கபிலாதி சொரூபங்களைத் தரித்து உத்தமமான ஞானத்தைப் பிரகாசித்து அருள்வான். திரேதா யுகத்தில் அந்தந்தச் சக்கரவர்த்திகளின் சொரூபத்தைத் தரித்து, துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனங்களைச் செய்து வருகின்றார். துவாபர யுகத்திலே வேதவியாஸ சொரூபமாகி, ஒன்றாக இருக்கும் வேதத்தை இருக்கு முதலான நான்கு பிரதான பிரிவுகளாகவும் சாகா பேதங்களாலே அநேகம் பிரிவுகளாகவும் பிரிந்து உலகத்தை அனுக்கிரஹிக்கிறான். கலியுகத்திலோ கல்கி யவதாரஞ் செய்து, வேத சாஸ்திரங்களையும் தருமங்களையும் கடந்து நடக்கும் துஷ்டர்களை வழியிலே நிறுத்துகிறான். இவ்வாறு ஸ்ரீவிஷ்ணுபகவான் அந்தந்த ரூபத்தினால் உலகங்களைப் படைத்தும், காத்தும், சங்கரித்தும் வருகிறான். ஆகையால் சர்வபூத சொரூபியான எம்பெருமானைவிட ஒரு வஸ்துவும் இல்லை என்ற உண்மையை இந்தப் பிரகரணத்திலும் இதற்கு முந்தியவைகளாலும் உமக்கு தெளிவாகச் சொன்னேன். மைத்ரேயரே! இனித்தெரிந்து கொள்ள வேண்டியவை ஏதேனும் இருந்தால் கேட்பீராக.

3. வேதவியாசர்கள் வரிசை

பராசர முனிவரே! தாங்கள் கூறியதிலிருந்து, சகலமும் ஸ்ரீவிஷ்ணுவினிடத்தில் உண்டாகி, அவனிடத்திலேயே நிலைபெற்று லயித்து அவனுக்குச் சொரூபமாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அந்த மகாத்மாவான எம்பெருமான் யுகந்தோறும் வியாசரூபியாகி வேதங்களைப் பிரித்தருளுகிறான் என்று கூறினீர்கள். எந்தெந்த யுகத்தில் யார் யார் வியாசர் ஆனார்களோ, அவர்களையும் வேதத்தின் சாகைகளைப் பற்றியச் சிறப்புகளையும் அடியேனுக்குச் சொல்லவேண்டும் என்றார் மைத்ரேயர். பராசரர் கூறலானார். மைத்ரேயரே! வேதம் என்கிற மகாவிருட்சத்திற்குக் கிளைகள் பலவுண்டு. அளவற்ற அவற்றை விரித்துச் சொல்வது கடினம். ஆகையால் சுருக்கமாகச் சொல்கிறேன்; கேளும். எம்பெருமான் துவாபரயுகம்தோறும் வியாசராக அவதரித்து, மக்களுக்கு உற்சாகம், சாமர்த்தியம் ஓதித்தரிக்குஞ் சக்தி இவையெல்லாம் அற்பமாக இருப்பதைக் கண்டு, அவர்களின் நலனுக்காக ஒன்றாயிருக்கின்ற வேதத்தைப் பல பிரிவுகளாக்கி அருள்செய்கிறார். அந்த எம்பெருமான் எந்த உடலைச் சேர்ந்து, வேதபேதங்களைச் செய்தருளுகின்றானோ அவையெல்லாம் வேதவியாசர் என்ற திருநாமமுடைய திருமேனிகள் என்று அறிவீராக. இனி இந்த மனுவந்தரத்தில் யார் யார் வேதவியாசரானார்களோ அவர்களைப் பற்றியும் கூறுகிறேன்; கேளும். இந்த வைவஸ்வத மனுவந்தரத்திலே துவாபர யுகந்தோறும் மாமுனிவர்களால், இருபத்தெட்டு முறைகள் வேதம் பிரிக்கப்பட்டது. ஆகையால் இதுவரையிலும், இருபத்தெட்டு வியாசர்கள் சென்றிருக்கிறார்கள். முதலாவது துவாபர யுகத்தில் பிரம்மாவே வேதவியாசராக விளங்கினார். இரண்டாவது யுகத்தில் வைவஸ்வதமனு வியாசரானார். மூன்றாவது யுகத்தில் சுக்கிரரும், நான்காவதில் பிரகஸ்பதியும், ஐந்தில் சூரியனும், ஆறில் இயமனும், ஏழில் தேவேந்திரனும், எட்டாவதில் வசிஷ்டரும், ஒன்பதாவதில் சாரசுவதரும், பத்தாவதில் திரிதாமாவும், பதினோராவதில் திரிவிருஷாவும், பன்னிரண்டில் பரத்வாஜா மாமுனிவரும், பதின்மூன்றில் அந்தரிஷரும், பதினான்கில் தருமியும், பதினைந்தாவது யுகத்தில் திரையாருணியும், பதினாறாவது யுகத்தில் தனஞ்செயனும், பதினேழாவது யுகத்தில் கிருதஞ்சயனும், பதினெட்டாவது யுகத்தில் சஞ்சயனும், வேதவியாசரானார்கள். பிறகுள்ள துவாபரங்களில் முறையே பரத்வாஜர், கவுதமர், ஹரியாத்துமா என்று இதர புராணங்களில், கூறப்படும் உத்தமர் என்பவர், வாஜீசிரவன் என்ற மறுபெயருடைய வேனன், திருணபிந்து என்ற பெயருடைய சோமசுஷ்மாயணன், வால்மீகி என்னும் திருப்பெயரால் புகழ்பெற்ற பார்க்கவரிக்ஷர் இவர்கள் வேதவியாசராயினர். இதுபோல் இருபத்து நான்கு துவாபரயுகங்கள் கழிந்த பிறகு, இருபத்தைந்தாவது துவாபரத்தில் என் தந்தையான சக்தி மாமுனிவரும் இருபத்தாறாவதில் நானும், இருபத்தேழாவதில் ஜாதுகர்ணர் என்பவரும் வேதவியாசர்களானோம். பிறகு இருபத்தெட்டாவதான இந்தத் துவாபரயுகத்தில் என் மகனான கிருஷ்ணத் துவைபாயனன் வேதவிபாகஞ்செய்தான். இப்படி இருபத்தெட்டு மாமுனிவர்கள் துவாபரயுக முடிவான காலங்களில் வேதத்தை நான்காகப் பிரித்து உலக உபகாரம் செய்து வந்தார்கள். இனிவரும் துவாபர யுகத்தின் கடைசியில் துரோண குமாரனான அசுவத்தாமா வியாசராவார்.

ஏகாக்ஷர ஸ்வரூபமாய் நாசவிகாரங்களையடையாமலிருந்த பிரணவமானது உச்சரிக்கப்படுமளவில் தான் விரிவதனாலும் வேதத்தை விரிப்பதனாலும் பிரமம் என்று சொல்லப்படும், அஃது எவ்விதமெனில்; பிரணவத்தினிடத்தில் நித்தியமாக இருக்கிற முதல் மூன்று வியாகிருதிகளும் ரிக்கு முதலான நான்கு வேதங்களும் சொல்லப்படுகின்றன. ஆகையால் அத்தகைய மகிமையுள்ள பிரணவஸ்வரூபமான சுத்தப் பிரமத்தின் பொருட்டுத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! உலகத்தின் பிரளயத்திற்கும் உற்பத்திக்கும் எது காரணமாக இருக்கிறதோ, எது மகத்தத்துவத்திற்கும் மேன்மையானதாக மறைக்கப்படும் பொருளாக உள்ளதோ அத்தகைய பிரணவ பிரம்மத்திற்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். அகாதமாயும், அபாரமாயும் அழிவற்றதாயும் உலகத்தை யோகிப்பதாயுள்ள தமோ குணத்துக்கு இருப்பிடமாயும், சத்வகுணகாரியமான பிரகாசத்தினாலும் ரஜோகுண காரியமான பிரவர்த்தனத்தாலும் தருமம் முதலிய சகல புருஷார்த்த சாதகமாயும், சாங்கிய நூலறிவுடையோருக்குப் பிரகிருதி புருஷ விவேகத்தின் உபாயமாதலால் நிலைபெறும் இடமாகவும் சமதமாதி குணங்களைச் சாதிக்கவல்ல யோகியருக்கு அவற்றை சாதிக்கும் உபாயமாயும் விளங்குகிற அந்த சப்த பிரம்மத்துக்குத் தண்டனிடுகிறேன்! எது அவியக்தமாயும் அமுதமாயும் சாஸ்தவமாயும் இருக்கிற பிரவிருத்திப் பிரம்மாக இருக்கிறதோ அதை நான் வணங்குகிறேன். சர்வப் பிரபஞ்ச காரணமானப் பிரதானமாயும் பரமாத்ம ஸ்வரூபாதிகளைக் காட்டுவதனால் பரமாத்மாவுக்குக் காரணமாயும், உபநிஷத்துகளில் அக்ஷய முதலாய்ப் பிரதானம் ஈறாகவுள்ள சொற்களால் வெகுவிதமாய் சொல்லப்படுவதாயும், பிரிவற்றதாயும் சுத்தமாயும் இருக்கிற அந்தப் பிரணவப் பிரமத்தை வணங்குகிறேன்! பரமாத்மாவான ஸ்ரீவாசுதேவனுக்கு ஸ்வரூபமாக இருக்கிற அந்தப் பிரணவரூபமான பரப்பிரமத்திற்கு நிதம் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். உறுப்பான அக்ஷர வகையால் மூன்றாய்ப் பிரிந்திருந்தாலும் அவயவ விஸ்வரூபத்தில் பிரிவற்றதாக இருக்கின்ற அந்தப் பிரணவமானது அந்த ஸ்ரீவாசுதேவனேயாகும்; சகல பூதங்களிலும் அந்த வாசுதேவன் ஒருவனே எழுந்தருளியிருந்தாலும், பேதபுத்தி விஷயங்களான பிரமம் சூத்திர இந்திராதி மூர்த்திகளை அநுஷ்டித்திருப்பதால் வெவ்வேறாகக் கருதப்படுகிறான். அவனே இருக்கு வேதசொரூபியும், யஜுர்வேத சொரூபியும், சாமவேத ஸ்வரூபியுமாய் இந்த மூன்று வேதாரசாரமான பிரணவ ஸ்வரூபியாகவும் புருஷார்த்த ஸ்வரூபியாகவும் இருக்கிறான். அவனே சகல ஆத்மாக்களிலும் அந்தராத்மாவாக இருக்கிறான், அவனே பிரிவற்ற வேதரூபமாக இருந்து பலவிதமான வேதங்களாகப் பேதிக்கப்படுகிறான். அந்த அனந்தனான ஸ்ரீபகவானே; வேத சாகைகளைப் பிரிக்கும் வியாசாதி ஸ்வரூபியாகிறான். சகல வேத சாகைகளின் ஞானமும் இந்த ஸ்ரீஅனந்தனே என்பதையும் அறிவீராக!

4. வேத சாகைகளின் பேதங்கள்

மைத்ரேயரே! ஆதியில் பிரம்மாவினால் அத்தியயனம் செய்யப்பட்ட வேதம், நான்கு பாதங்களையுடையதாகவும் அநேகவாயிரம் கிளைகளைக் கொண்டதாகவும் இருந்தது. அதிலிருந்து அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம் என்கிற ஐந்தும், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் என்ற பஞ்சமகா யக்கியங்களும் ஆகப் பத்துவிதமான யக்கியங்களும், திரவியம், தேசம், பலம், காலம், ஞானம்; கர்மம், காரகம், சிரத்தை அவஸ்தை ஆகிருதி, நிஷ்டை என்ற உறுப்பினையுடையனவாக உண்டாயின. இந்த யாகங்கள் யாவும் சர்வபீஷ்டங்களையும் கொடுக்கும் திறமுள்ளனவாகும். பிறகு, இருபத்தெட்டாவது யுகத்தில் எனது மகனான வியாசர் மகா சமர்த்தராகையால் நான்கு பாதங்களைக் கொண்ட அந்தவொரு வேதத்தை நான்காகப் பிரித்தார். இவர் இப்பொழுது எப்படிப் பிரித்தாரோ, அப்படியே முந்திய யுகங்களிலும் நானும் மற்ற முனிவர்களும் பிரித்தோம். வியாசர் பிரித்ததைப் போலவே, ஸ்ரீமந் நாராயணாம்சம் பெற்று, மற்ற வியாசர்களும் அவ்வப்போது வேதத்தைப் பிரித்தருளினார்கள் என்பதை அறிவீராக. மைத்ரேயரே! இந்தப் பூவுலகத்தில் ஸ்ரீவாசுதேவனைத் தவிர மற்றொருவன் மகாபாரதம் இயற்ற வல்லவனாகான். ஆகையால் கிருஷ்ணத் துவைபாயர் என்ற பெயரையுடைய இந்த வியாசரை ஸ்ரீமந்நாராயண அம்சம் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இந்தத் துவாபார யுகத்தில் என் குமாரனான வியாசர் வேதங்களைப் பிரித்தவிதத்தைக் கூறுகிறேன்! கேளும். வியாச மாமுனிவர், வேதங்களைப் பிரிக்கும்படி சதுர்முகப் பிருமனால் நியமிக்கப்பட்டார். அவர் தாம் பிரித்த வேத சாகைகளை அத்தியயன பரம்பரையினால் பிரவர்த்திப்பிக்க வல்லவர்களான சீடர்களை ஆராய்ந்து தேடி இருக்கு வேதத்திற்கு பைல மகாமுனிவரையும், யஜுர் வேதத்துக்கு வைசம்பாயன மகாமுனிவரையும், சாம வேதத்துக்கு ஜைமினி முனிவரையும், அதர்வண வேதத்துக்கு சுமந்து முனிவரையும் இதிஹாச புராணங்களுக்கு மகா மேதையான ரோமஹர்ஷணர் என்ற சூதரையும் பரிக்கிரகித்து அருளினார். அத்துவர்யு உத்காதா, ஹோதா பிரம்மா என்ற நால்வகையான (சாதுர்ஹோத்திரம்) ரித்துவிக்குகளில் காரியமுள்ளதாகையால், யாக ஹேதுவாக இருந்த வேதம் ஒன்றையே நான்காகப் பிரித்தார். அவற்றினால் யக்கியங்களை நடத்தியருளினார். யஜுர் வேதங்களினால் அத்துவாயு காரியத்தையும் இருக்கு வேதங்களினால் ஹோதாவின் காரியத்தையும், சாம வேதங்களினால் உத்காதாவின் செயலையும் இந்த மூன்று வேதங்களினாலேயும் அரசர்களுக்கு வேண்டிய சாந்திக பவுஷ்டிகாதிகளையுடைய அதர்வண வேதத்தாலேயும் பிரம்மாவின் செயலையும் ஏற்படுத்தினார்.

இனி வேதங்களைப் பிரித்தது எப்படியெனில், அகண்டமான வேதத்திலிருந்து இருக்குகளையெல்லாம் பிரித்தெடுத்து ஒன்றாக்கி அதனை இருக்கு வேதம் என்றும், யசுகளைப் பிரித்தெடுத்துச் சேர்த்து யஜுர்வேதம் என்றும், சாமங்களைப் பிரித்தெடுத்து சேர்த்து சாமவேதம் என்றும், மூன்று வேதங்களைச் செய்து, அரசர்களுக்கு முக்கியமான காரியங்களையும் புரோகித கிருத்தியத்தையும் நிறைவேற்றுவதற்காக அதர்வ பாகங்களையெல்லாம் சேர்த்தெடுத்து அதர்வண வேதத்தையும் செய்தருளினார். இவ்விதமாக, முன்பு ஒன்றாக இருந்த வேத விருட்சமானது நான்கு கிளைகளாகப் பிரிந்து பிறகு பெருங்காடாயிற்று. பைலமா முனிவருக்கு வேதத்தை இரண்டு சம்ஹிதைகளாகச் செய்து இந்திரப் பிரமாதி என்பவருக்கு ஒன்றையும், பாஷ்களர் என்பவருக்கு மற்றொன்றையும் அருளினார். அந்தப் பாஷ்கள முனிவர் தாம் பெற்ற சம்ஹிதையை நான்காகச் செய்து போத்தியர், அக்கினி, மாடகர், யாக்கியவல்கியர், பராசரர் என்ற நால்வருக்கு, ருக்கு வேத சாகையின் பிரிவுகளான சாகைகளைப் போதித்தருளினார். அந்த இந்திரப் பிரமதி என்ற முனிவர் தாம் ஓதிய ரிக்வேத சம்ஹிதையை தமது மகனான மாண்டூகேயர் என்பவருக்கு போதித்தார். அந்த சம்ஹிதை சிஷ்ய பிரசிஷ்ய பரம்பரையினாலே வளர்ந்து கொண்டிருந்தது. இப்படியிருக்கும் பொழுது வேதமித்திரன் என்ற சாகலயர் தாம் ஓதிய இந்திர பிரமதி சாகையை ஐந்தாகச் செய்து முத்கலன் கோமுகன் வாச்சியன், சாலீயன், சைச்சிரன் என்ற தம்முடைய மாணவர் ஐவருக்குக் கொடுத்தார். அந்தச் சாகலருடைய சப்பிரமசாரியாண சாகபூர்ணா என்பவர் இந்திரபிரமதி சம்ஹிதையை மூன்றாகச் செய்து நிருத்தம் என்ற வேதாங்கம் ஒன்றையும் செய்து ஆக நான்கையும் தமது மாணவரான கிரவுஞ்சன், வைதாளிகன், பலாகன், நிருத்தன் என்ற நால்வருக்கும் வழங்கினார். முன்பு சொல்லிய சாகலியருடைய சப்பிரமச்சாரியான பாஷ்கலி என்பவர், இந்திர பிரமிதி சாøயை மூன்றாக்கி காலாயனி, கார்க்கியர், ஜபர் என்ற மாணவர் மூவருக்கு வழங்கினார். இந்தவிதமாக ரிக் வேதத்தின் சாகைகளும் அனு சாகைகளும் பிரதி சாகைகளும் உண்டாயின. மைத்ரேயரே! ருக்வேதசாகா கர்த்தாக்களான பஹ்ருசரை நான் உமக்குத் தெரிவித்தேன்.

5. யஜுர் வேத சாகைகள்

மைத்ரேயரே! யஜுர்வேத விருட்சத்துக்குப் பிரதானமான இருபத்தேழு சாகைகளை வைசம்பாயன மகாமுனிவர் செய்தார். பிறகு அவற்றைத் தமது சீடர் அநேகருக்குக் கொடுத்தார். அவர்களும் முறைப்படி ஓதி வந்தனர். அந்த வைசம்பாயன மகாமுனிக்கும் பிரமராதருடைய குமாரரான யாக்கியவல்க்கியர் என்பவர் சீடராக இருந்தார். அவர் முக்கியமான தருமங்களையெல்லாம் அறிந்தவர். அவர் குருவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தார். முன்பொரு சமயம், மகாமேருவிலே முனிவர்களெல்லாம் கூடித் தமது சபைக்கு எந்த ரிஷி இன்று வராமலிருக்கிறாரோ அவருக்கு ஏழு தினங்களுக்குள் பிரம்மஹத்தி தோஷம் வரக்கடவது என்று ஒரு சாபம் உண்டாக்கி இருந்தார்கள். அந்த ஏற்பாட்டைக் கடந்த இந்த வைசம்பாயன மகாமுனிவர் ஒரு நாள் தம்முடன் பிறந்தவனின் புத்திரரான பாலகன் ஒருவனைக் காலினால் தீண்ட, அந்தப் பாலகன் மரணமடைந்தான். அதனால் அவருக்கு பிரமஹத்தி தோஷம் சம்பவித்தது. அப்பொழுது வைசம்பாயனர் தமது சீடர்களை நோக்கி, ஓ சீடர்களே! எனக்காக நீங்கள் பிரம்மஹத்தி நீங்கும்படியான விரதத்தைச் செய்யுங்கள். வேறு ஒன்றும் நினைக்காதீர்கள்! என்று நியமித்தார். அப்போது யாக்கியவல்கியர் குருவை நோக்கி, ஆசாரியாரே! அற்ப தேஜஸ் உள்ளவர்களான இவர்களை ஏன் வருத்தவேண்டும்? அடியேன் ஒருவனே அந்த விரதத்தைச் செய்கிறேன் என்று சொல்ல, குருவானவர் கோபமடைந்து, யாக்கிய வல்கியரை நோக்கி, நீ பிராமணரை அவமானம் செய்தாய்! இத்தகைய நீ எனக்கு சீடனாக இருக்கத் தகாது. ஆகையால் என்னிடத்தில் ஓதிய வேதங்களை விட்டுவிடு. உத்தமமான பிராமணர்களை தேஜஸ் இல்லாதவர்கள் என்று சொன்னாய், இத்தகைய சீடர் எனக்கிருந்து ஆவதென்ன? அன்றியும் என் கட்டளையையும் பங்கப்படுத்தினாய். ஆகையால் வேதங்களை விட்டுவிடு! என்று கண்டித்தார். உடனே யாக்யவல்கியர், ஓ ஆசாரியாரே! தங்களிடமுள்ள பக்தியினால் இப்படிச் சொன்னேனேயல்லாது வேறில்லை. அப்படியிருக்கக் கோபித்துக் கொள்கிற உம்மாலேயும் எனக்கு ஆகவேண்டியதில்லை. உம்மிடத்தில் ஓதின வேதமும் எனக்கு வேண்டாம்! என்று சொல்லி, உதரத்தினால் பூசப்பட்ட ரூபமுடையவைகளாய்க் காணப்பட்ட யஜுர் வேதங்களைக் கக்கி, இதோ உங்களது வேதங்களை உங்களிடமே கொடுத்தேன்! என்று சொல்லிவிட்டுத் தம்முடைய மனதின் படிபோய்விட்டார். பின்பு யாக்யவல்கியர் கக்கிய வேதங்களை மற்றப் பிராமணர்கள், நேரடியாக இந்தக் கக்கலை உண்பது தகுதியல்ல வென்று எண்ணித் தித்திரி என்ற பறவைகளாக மாறி உண்டார்கள். ஆகையால் அவர்களுக்குத் தைத்திரீயர்கள் என்ற பெயர் உண்டாயிற்று. பிறகு வைசம்பாயனரின் மாணவர்கள் அனைவரும் தமது குருவின் கட்டளையை ஏற்று, பிரம்மஹத்தி நீங்குவதற்கான விரதத்தை ஆஸ்ரயித்து அனுசரித்தார்கள். அவர்களுக்கு அதனால் சரணாத்துவர்யுக்கள் என்ற பெயர் வழங்கலாயிற்று.

யாக்கியவல்கியரோ, சூரிய பகவானிடமே யசுசுகளைக் கிரகிக்க வேண்டும் என்று கருதி பிராணாயாமம் முதலியவற்றால் சூரியனைத் துதித்துப் போற்றலானார். மோட்சத்துக்கு மார்க்கமாயும், அளவற்ற தேஜஸைக் கொண்டவராயும், ருக்கு, யஜுர், சாம வேதங்களின் ரூபமாயும் இருக்கிற சூரியனை வணங்குகிறேன்! வெய்யிலுக்கும் மறைக்கும் ஹேதுவாக இருப்பதால் அக்கினி சோம ரூபியாகவும் அதன் காரணமாக உலகத்துக்குக் காரணமாயும், வெளிச்சத்தைத் தருபவராயும் அமிர்த ஹேதுவான காந்தியை பரிப்பவராயும் இருக்கும் அவருக்குத் தண்டனிடுகிறேன்! கலை காஷ்டை, நிமிஷம் முதலிய காலத்தை அறிவிக்கும் சொரூபத்தைக் கொண்டவராயும், தியானிக்க தக்கவராயும், பிரணவ ரூபியாயும், பிரபஞ்ச ரூபியாயும் இருப்பவருக்கு எனது வந்தனம் உரியதாகுக! தனது கிரணங்களினாலே சந்திரனைப் போஷித்துத் தேவதைகளையும், ஸ்வதாமிர்தத்தினாலே பிதுர்க்களையும் காத்து ரட்சித்து வருகின்ற திருப்தி ரூபமானவருக்கு நமஸ்காரஞ் செய்கிறேன். பனி, வெப்பம், மழை ஆகியவற்றை உண்டாக்கி, ஹரிக்கின்றவராயும் முக்காலங்களின் ஸ்வரூபியாகவும் இருக்கும் சூரியபகவானுக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன். இந்த உலகத்தின் இருளைப் போக்கி, ஜகத்துக்கெல்லாம் அதிபதியாயும், சத்துவகுணசரீரம் உள்ளவராயும் இருக்கிற ஆதித்த பகவானுக்கு நமஸ்காரங்களைச் செய்கிறேன். எந்தத் தேவன் உதயமாகாமற் போனால் ஜனங்கள் சத்கருமங்களைச் செய்வதற்குத் தகுதியுடையவராக மாட்டார்களோ, தண்ணீரும் சுத்த ஹேதுவாக மாட்டாதோ, அத்தகைய சூரியதேவனை வணங்கித் தொழுகிறேன்! எந்தத் தேவனது கதிர்களால் ஸ்பரிசிக்கப்பட்டு மனிதன் சத்காரியங்களுக்கு யோக்கியன் ஆகின்றானோ, அத்தகைய சுத்தி காரணமான தேவனைத் தொழுகின்றேன்! பிரேரகனாயும் உற்பத்தி செய்பவனாயும் அந்தகாரத்தைப் போக்குவோனாகவும் இருக்கின்ற தேவனுக்கு எனது வணக்கங்கள்! தேவர்களுக்கெல்லாம் அதியாய் இருக்கும் ஆதித்த பகவானுக்கு பலமுறைகள் வந்தனஞ் செய்கிறேன். எந்த தேவனுடைய தேரானது இதமும் ரமணீயமுமான தேஜோமயமாக இருக்கிறதோ, குதிரைகள் ஞானரூபங்களாயும், அமிர்தங்களாயும் இருந்து அந்த ரதத்தை இழுக்கின்றனவோ, உலகங்களுக்கெல்லாம் கண்ணாக இருக்கும் அந்தப் பகவானைத் தொழுகிறேன்! என்று இவ்விதமாக யாக்கியவல்கியர் சூரியனை வணங்கி வழிபட்டு வந்தார். அப்போது சூரியபகவான் குதிரை வடிவில் அவர் முன்பு, தோன்றி, ஓ முனிவரே! உமக்கு வேண்டும் வரத்தைக் கேளும்; என்றார். அதனால் யாக்கியவல்கியர் சூரியனைத் தொழுது, சுவாமி! எனது குருவான வைசம்பாயன மகாமுனிவருக்கும், தெரியாத யஜுர் வேதங்களை எனக்கு வழங்கி அருள்புரிய வேண்டும்! என்று வேண்டினார். உடனே சூரியபகவான், அவருக்கு அவர் வேண்டிய வண்ணம் வியாசரது உபதேசமில்லாமையால், வைசம்பாயன முனிவருக்குத் தெரியாத அயாதயாமங்கள் என்ற யஜீசுகளை வழங்கியருளினார். அந்த சாகைகளை அத்தியயனஞ் செய்தவர்களுக்கு வாஜிகள் அல்லது வாஜசனேயர் என்ற பெயர் வழங்கலாயிற்று. சூரியன் (வாஜி) குதிரை வடிவத்தில் அந்த வேதத்தை உபதேசித்ததால் அந்தப் பெயர் உண்டாயிற்று. அந்த வாஜசனேய, சங்கிசையை யாக்கியவல்கிய முனிவர் காண்வசாகை முதலிய பதினைந்து சாகைகளாகப் பிரித்தார். இவ்வாறு தான் யஜுர் வேதத்தின் பிரிவுகள் உண்டாயின.

6. சாம, அதர்வண வேதங்கள், புராணங்கள்

மைத்ரேயரே! சாமவேத விருட்சத்தின் சாகா பேதங்களையும் கேட்பீராக, வியாசரது சீடரான ஜைமினியானவர், தம்முடைய குமாரரான சுமந்து என்பவருக்கு ஒரு சம்ஹிதையை உபதேசிக்க அவரும் தம்முடைய மகனான சுத்துவா என்பவருக்கு அதை உபதேசித்தார். பிறகு அந்தச் சுத்துவாவின் மகனான சுகர்மா என்பவர் தம் தந்தையிடம் தாம் கற்ற அந்த ஜைமினி சம்ஹிதையை ஓராயிரம் பிரிவுகளாகப் பிரித்துத் தமது மாணவருக்கும் கொடுத்தார். கவுசல்யர் என்னும் பெயர் பெற்றிருந்த அந்த ஹிரண்யநாபருக்கு வடநாட்டார் ஐநூறு பேர், சாம சாகையை ஓதும் சீடர்களானார்கள். அவர்கள் ஐநூறு சாகைகளை ஓதிக்கொண்டு ஒரு காலத்தில் கீழ்த்திசையில் இருந்ததால் கீழ்த்திசை சாமகர் என்று வழங்கப்பட்டனர். அந்த பவுஷ்பிஞ்சி என்பவருக்கும் லோகாக்ஷி கவுமுதி, கக்ஷீவான் லாங்கலி முதலிய சீடர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஓதிய சங்கிதைகளைப் பலவாக விரிவுரை செய்தனர். முன்னே சொன்ன இரணிய நாபருடைய சீடர்களில் ஒருவரான கிருதநாமா என்பவர் இருபத்து நான்கு சங்கிதைகளைத் தமது மாணவருக்கு ஓதுவித்தார். அவர்களும் இந்தச் சாம வேதத்தை மிகவும் விரிவுபடுத்தினர். இவ்விதமாகச் சாமவேதச் சாகைகளின் பிரிவுகள் உண்டாயின. இனி அதர்வண வேதத்தின் விரிவைச் சொல்கிறேன். வேதவியாச முனிவரிடம் அதர்வண வேதத்தைக் கற்றறிந்த சுமந்து என்ற முனிவர், அந்த அதர்வண வேதத்தைத் தமது சீடரான கபந்தர் என்பவரிடம் வழங்கினார். அந்த கபந்த முனிவர் அதை இரண்டு பிரிவுகளாக்கி தேவதரிசர், பத்தியர் என்ற சீடருக்கு வழங்கினார். அந்தத் தேவதரிசருக்கு, மேதன் பிரமபலி, சவுல்கா யனிபிப்பலாதன் என்ற நான்கு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தேவதரிசர் செய்த நான்கு சங்கிதைகளையும் முறையே ஓதிவந்தனர்; பத்தியருக்கு ஜாபாலி குமுதாதி, சவுனகர் என்ற மூன்று மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது ஆசிரியர் பிரித்த மூன்று சங்கிதைகளையும் பல சங்கிதைகளாகச் செய்தனர். அந்த சவுனகர் என்பவர் தம்முடைய சங்கிதையை இரண்டாகச் செய்து பப்புரு என்பவருக்கும், சைந்தவர் என்பவருக்கும் வழங்கினார். சைந்தவரின் சீடரான முஞ்சிசேர் என்பவர் தாம் பெற்ற சங்கிதை இரண்டாகப் பிரித்தார். அந்த சங்கிதைகளில் முக்கியமான பாகங்கள் ஐந்தாகும். அவை நக்ஷத்திர கல்ப்பம், வேத கல்ப்பம், சங்கீதா கல்ப்பம், ஆங்கிரச கல்ப்பம், சாந்தி கல்ப்பம் என்பனவாகும். நட்சத்திர கல்பம் என்பது நக்ஷத்திராதிகளுடைய சொரூப குணாதிகளை விவரிப்பதாகும். வேதகல்ப்பமாவது, பிரமத்துவம் முதலிய புரோகித காரியங்களைத் தெரிவிப்பதாகும். சங்கிதா கல்ப்பம் என்பது மந்திரங்களின் ஏற்பாட்டை உணர்த்துவது ஆங்கிரச கல்ப்பம்; ஸ்தம்பனமோஹன மாரணாதிகளான அபிசாரங்களைக் காட்டுவது யானை குதிரை முதலியவை பற்றிய பதினெட்டு சாந்திகளை விதிப்பது-சாந்தி கல்ப்பமாகும். இவைகளே அதர்வண வேதத்தில் சிறப்பானவை. இவ்விதமாக நான்கு வேதங்களின் விகற்பங்களை நான் உமக்கு அறிவித்தேன்.

இனிமேல், புராணங்களின் வரலாற்றைக் கூறுகிறேன்; கேளும்! புராணம் என்பது சாஸ்திரங்கள் அனைவற்றிலும் முதன்மையானதாகும். அது கிருதயுகத்தில் பிரும்மாவினால் நூறுகோடி கிரந்த விஸ்தாரமாக இயற்றப்பட்டு, பிராம்மம் என்ற பெயருடன் ஒன்றாகவே இருந்தது. பின்பு, திரேதா யுகத்திலே அதை ரிஷிகள் நூற்றுப் பதினெட்டு சம்ஹிதைகளோடு கூடிய பதினெட்டுப் பிரிவுகளுடன் கோடிக்கிரந்த விஸ்தாரமாகச் செய்தனர். பிறகு, வேதவியாசர் துவாபரயுகத்தின் இறுதியில் அப்புராணங்களின் சாரங்களை எடுத்து, நான்கு லக்ஷம் கிரந்த விஸ்தாரமுடையதாய், பாரதாதி ஆக்கியானங்களும் பிருதிவீ கீதை பிதுரு கீதை முதலான காதைகளையும் வராக கல்ப்பாதி, கல்ப்ப நிர்ணயங்களும், சிருஷ்டி மனுவந்தராதிகளும், வமிச வமிசானு சரிதங்களும் விளங்கும்படியாக பதினெட்டுப் புராண சங்கிதைகளைச் செய்து, தமது மாணவரான சூதமுனிவருக்கு உபதேசித்தனர். அந்த சூதர் என்ற ரோம ஹர்ஷணருக்கு சுமதி, அக்கினி, வர்ச்சன், மித்திராயு, சாம்சபாயனன், அகிருதவிரணன், சாவர்ணி என்ற சீடர்கள் இருந்தார்கள். அவர்களில் அகிருத விரணரும் சாவர்ணியும்; சாம்சபாயனரும்; வியாச கிருதமான புராண சங்கிதையைப் பற்றி தாங்களும் சில சங்கிதைகளைச் செய்தனர்; இவற்றுக்கு எல்லாம் மூலமானதாக; ஒரு சங்கிதையை ரோமஹர்ஷணர் செய்தார். இந்த நான்கின் சாரத்தைக் கொண்டுதான்; நான் இந்தப் புராணத்தை இயற்றினேன். புராணங்கள் யாவற்றினும் முதன்மையாக இருந்தது பிரம்மபுராணம், அதை முதலாகக் கொண்ட பதினெட்டுப் புராணங்கள் உண்டென்று புராணங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அவையாவன, பிராம்மம், பாத்துமம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீபம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம் பவுஷ்யத்து, பிரமகைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கவுர்மம், மாச்சியம், காருடம், பிரமாண்டம் முதலியன அவற்றின் முறையே இதுவாகும். இந்தப் புராணங்கள் யாவும் சிருஷஅடி, சங்காரம், வமிசங்கள் மனுவந்திரங்கள். வமிசங்களுடைய வரலாறுகள் ஆகியவற்றை அறிவிப்பனவாகும்.

மைத்ரேயரே! உமக்கு இப்போது நான் சொல்லி வருவது பத்மபுராணத்துக்குப் பிற்படச் சொல்லிய விஷ்ணு புராணமாகும். இது புராண வரிசையில் மூன்றாவதாகும், எல்லாப் புராணங்களிலும் சொல்லப்படுகிற சிருஷ்டி முதலியவற்றில் ஸ்ரீவிஷ்ணுவே மூலம் என்று கர்த்துருத்துவாதி அறங்களைக் கொண்டு சொல்லப்படுகிறது. ஆன்ம கோடிகளில் அறியவேண்டிய அறங்கள் அனைத்தையும், முன்பு சொன்ன நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களான சிøக்ஷ வியாகரணம் காந்தம்; நிருத்தம்; ஜோதிடம்; கல்ப்பம் என்ற ஆறும், மீமாம்சையும், நியாய நூலும், இதிகாச புராணங்களும், அறநூல்களும் ஆகிய பதினான்காகும். இவற்றுக்கு வித்யா ஸ்தானங்கள் என்றும் பெயர் உண்டு. இவை தவிர ஆயுர்வேதம் என்ற வைத்திய சாஸ்திரமும் தனுர்வேதம் என்ற ஆயுத சாஸ்திரமும் அர்த்தி சாஸ்திரம் என்ற ராஜநீதி சாஸ்திரமும் உபவித்தைகள் என்று சொல்லப்படும். இவையனைத்தும் பதினெட்டு வித்தைகள் என்று பொதுப்பட வழங்குகின்றன. இந்த வித்தைகளை வகுத்தவர்கள் பிரமரிஷிகள், தேவரிஷிகள், ராஜரிஷிகள் என்ற மூவகை முனிவர்களாவர். மைத்ரேயரே! நீங்கள் கேட்டபடி வேதத்தின் மூல சாகைகளையும், அச்சாகைகளின் பிரிவுகளையும் அவற்றின் கர்த்தாக்களையும் அவை பிரிவதன் காரணத்தையும் உமக்குத் தெரியும்படிச் சொன்னேன். சகல மனுவந்திரத்திலேயும் இப்படி சாகைகளின் பிரிப்பது சமமாக நிகழ்ந்துவரும், ஆதியில் பிரும்மாவினால் அறியப்பட்ட வேதம் நித்தியமானது. ஆகையால் இந்தச் சாகைகள் அனைத்தும் அவற்றின் விகற்பங்கள் ஆகும். இவ்விதமாக வேத சம்பந்தமான யாவற்றையும் சொல்லிவிட்டேன். இனி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

7. வைணவத்தின் பெருமை

மைத்ரேயர் தமது குருவை நோக்கி, முனிவர் பெருமானே! நான் கேட்டவற்றுக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லிவிட்டீர்கள். இனியும் ஒரு விஷயம் இருக்கிறது அதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். அதாவது சப்தத்துவீபங்களும் பாதாளங்களும் மேலேழு உலகங்களும் அடங்கியிருக்கிற இந்தப் பிரம்மாண்டத்துக்குள்ளே ஸ்தூலங்களும் சூஷ்மங்களும், சூஷ்மத்தில் சூஷ்மங்களும் ஸ்தூலங்களில் ஸ்தூலங்களுமாக ஏராளமான உயிரினங்கள் வாசஞ்செய்கின்றன. இத்தனை பெரிய பிரம்மாண்டத்துக்குள்ளே அங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு இடமானாலுங்கூட பிராணிகள் இல்லாமலிருப்ப தில்லை. இந்த உயிரினங்கள் எல்லாம் கர்மபந்தத்தினாலே, இங்கே பிறக்கின்றன. பின்னர் ஆயுளின் முடிவிலே எமனுக்கு வயப்பட்டு, அவனால் நியமிக்கப்பட்ட அந்தந்த வாதனைகளை அனுபவித்து, அந்த வாதனைக்காலம் தீர்ந்த பிறகு தேவாதி யோனிகளிலே பிறந்திருக்கிறார்களே இவ்விதமாக உயிரினங்கள் ஜனன மரணக்கிரமத்தில் சுழன்று கொண்டேயிருக்கின்றன என்பது சாஸ்திரங்களின் நிச்சயம். இத்தகைய சம்சாரத்திலே சரீரிகள் எந்தக் காரியஞ்செய்தால் எமனுக்கு வயப்படாமல் தப்புவார்கள். அந்தக் காரியம் யாது? இதை அடியேனுக்குக் கூறியருள வேண்டுகிறேன் என்று வேண்டினார், பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! இந்தக் கேள்வியைத் தான் முன்பு ஒரு காலத்தில் நகுலன் பீஷ்மரைக் கேட்டான். அதற்குப் பீஷ்மர் சொன்னதாவது, குழந்தாய்! கலிங்க தேசத்திலிருந்து எனக்கு நண்பரான பிராமணர் ஒருவர் வந்திருந்தார். அவரை நான் கேட்டவைகளில் எதெது எப்படியெப்படியாகும் என்று சொல்வாரோ, அப்படியப்படியே நிகழ்ந்தன. அவர் பூர்வஜன்ம ஞானமும் யோக திருஷ்டியும் உடையவர். ஆகையால், நான் கேட்டவைகளுக்கு அவர் சொன்னது ஒருபோதும் பொய்த்ததில்லை. அந்த நம்பிக்கையினாலே நீ கேட்ட கேள்வியை நானும் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் யோகியானவர், நான் கேட்ட கேள்வியைக் குறித்து மிகவும் இரகசியமான யமகிங்கர சம்வாதம் ஒன்றை என்னிடம் சொன்னார். அதாவது ஒரு காலத்தில் பாசக்கயிற்றைக் கைகளில் எடுத்துக் கொண்டு பிராணிகளைக் கவர்ந்து வரச்சென்ற தன்னுடைய சேவகனை யமதர்மராஜன் தன்னருகே அழைத்து, தூதுவனே! நீ உனது தொழிலை நடத்தும்போது ஸ்ரீமதுசூதனை ஆஸ்ரயித்தவரைத் தீண்டாதே விட்டு விடு. நான் மற்றவர்களுக்கு பிரபுவேயல்லாது வைணவருக்குப் பிரபுவல்லேன் சகல தேவதைகளாலும் ஆராதிக்கப்பட்ட பெருமாளாலே நான் எமன் என்று பெயரிடப்பட்டுச் சகல பிராணிகளுடைய பாப புண்ணியங்களையெல்லாம் ஆராய்ந்து நடத்தும்படி நியமிக்கப்ப்டேன்! ஆகையால், அந்த ஸ்ரீஹரிக்கு வசப்பட்டு இருக்கிறானே தவிர, சுதந்திரனாக இல்லை. அவர் எனக்கிட்ட அதிகாரத்தில் நான் சிறிதளவு தவறினாலும் கூட என்னையும் அந்த ஸ்ரீவிஷ்ணுவானவர் தண்டிப்பார். கை வளையல், கிரீடம், குண்டலம் முதலிய ஆபரணங்களிலேயும் காரணமான ஸ்வர்ணம் ஒன்றே வியாபித்திருக்கிறது. அதுபோல சுரர், நரர் பசு முதலான சகல காரிய வர்க்கங்களிலும் அந்த ஸ்ரீஹரி ஒருவனே வியாபித்திருக்கிறார். ஆகையால் அவரே சர்வேஸ்வரனாகும்.

மற்ற தேவர்கள் எல்லாம் அவருடைய வியாப்தியைக் கொண்டு அவரிட்ட கட்டளைகளைச் செலுத்தி வருகிறார்கள். காற்றினால் கிளப்பப்பட்ட மண்புழுதி, காற்றடங்கியதும் மறுபடியும் பூமியிலேயே படிவது போல், பகவத் சங்கல்பத்தினால் உண்டான சுரநராதிகள் அனைத்தும், பகவத் குணவைஷம்யம் அடங்கியதும் அந்தப் பகவானிடத்திலேயே லயமடைந்து விடுகின்றன. சகல தேவதைகளாலும் அர்ச்சிக்கப்பட்ட திருவடித்தாமரைகளுள்ள அந்த ஸ்ரீஹரியை எந்த மனிதன் நிருபாதிகமாகச் சேவித்துக் கொண்டிருப்பானோ அந்த மனிதனைக் கண்டதும் நெருப்பைக் கண்டதுபோல் தூரத்தில் விட்டோடிப் போகக் கடவாயாக! என்று கட்டளையிட்டான். அதற்கு கிங்கரன், எமதேவரே! அந்த ஸ்ரீவிஷ்ணுவினுடைய பக்தனை இன்னான் என்று நான் அறிந்து நடப்பதற்காக அந்த மகா புருஷனுடைய லக்ஷணங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன் என்றான். அதற்கு யமதர்மன், கேளாய்; கிங்கரனே! எவன் தன்னுடைய வருணாசிரம தர்மங்களை பகவானுடைய ஆக்ஞா கைங்கரியங்களாகக் கருதி, அதனின்று தவறாமலும், தனது நண்பனிடத்திலும் பகைவரிடத்திலும் பாரபட்சமின்றி சமபுத்தியுள்ளவனாகவும், ஒரு பொருளையும் அபகரிக்காதவனாகவும், ஓருயிரையுங் கொல்லாதவனாகவும் மிகவும் தூய்மையான இதயமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அந்தப் புருஷனையே ஸ்ரீவிஷ்ணுபக்தன் என்று அறிந்து கொள்வாயாக. தூய்மையான ஞானமுடைய எவனுடைய சித்தமானது கலி சம்பந்தமான ராகத்துவேஷங்களால் அழுக்கடையாமல் எப்போதுமே ஸ்ரீமந்நாராயணன் வாசஞ்செய்யப்பெற்று விளங்குமோ, அந்த மனிதனை ஸ்ரீஜனார்த்தனனுடைய பரமபக்தன் என்று அறிவாயாக. அன்பர்களின் இதயகமலங்களில் படிக மலைபோல் ஸ்ரீபகவான் நிர்மலனாய் எழுந்தருளியிருக்கும் போது மாச்சரியம் முதலான தோஷங்கள், பறந்து போகும். குளிர்ச்சியான சந்திரனுடைய கதிர்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் அக்கினியின் காந்தியும்; சிறப்பும் பெருமையடையாததுபோல்! எவனது இதயத்தில் ஸ்ரீவாசுதேவன் எழுந்தருளியிருப்õனோ, அந்த மனிதன் நிர்மல புத்தியுடையவனாகவும், மாச்சரியம் முதலிய குறைகள் அற்றவனாகவும், மிகவும் சாந்தனாகவும், தூய்மையான ஒழுக்கமுடையவனாகவும், இனிமையாகவும் மிதமாகப் பேசுபவனாகவும்; கர்வம், வஞ்சனையற்றவனாகவும் விளங்குவான். அந்த அனாதியான பகவான் எவனுடைய இதயத்தில் எழுந்தருளியிருக்கிறானோ அவன்; இளமையான தேமாமரமானது தானிருக்குஞ் செழிப்பினாலேயே தனக்குள் இருக்கிற பூசாரத்தைக் காட்டுவதுபோல, உலகத்திலுள்ள எவருக்குள்ளும் சாந்தனாய் விளங்குவான். அந்த அவியயனாய் அநாதியான ஸ்ரீஹரிபகவான் சங்கு, சக்கராதி ஆயுத சமேதனாய் ஒருவனுடைய இதயத்தில் வீற்றிருப்பானானால் அந்தப் புருஷனுடைய பாவமெல்லாம் சூரியன் இருக்குமிடத்திலே அந்தகாரம் மறைவது போல, பாபவினாசனனான அந்தப் பகவானாலே கண்டிக்கப்பட்டுபோம். இயம, நியமாதிகளாலே பாவத்தைக் கழித்தவர்களாயும் எப்பொழுதும் ஸ்ரீ அச்சுதனிடத்திலே பற்றி நிற்கின்ற சித்தமுள்ளவர்களாயும் மாச்சரியம் மதம் முதலிய குற்றங்கள் கழித்தவர்களான புருஷர்களைக் கண்டால்; கிங்கரனே; நீ மிகவும் தூரத்தில் விலகிப்போய் விடுவாயாக.

எந்தப் புருஷன் யாருமில்லாத ஏகாந்த ஸ்தானத்திலே பிறரது பொருளான சுவர்ணராசி ஜொலித்துக் கொண்டிருக்கக் கண்டாலும் அதைத் துரும்பு போல நினைத்துத் தீண்டாமற் போவானோ, எம்பெருமான் ஒருவனையேயன்றி மற்ற எதையும் புத்திபிற்பற்றாமல் இருப்பானோ அவன் ஸ்ரீவிஷ்ணு பக்தன் என்று தெரிந்து கொள்வாயாக. இனிமேல் ஸ்ரீவிஷ்ணு பக்தியற்ற பாவியினுடைய இலக்கணமுஞ் சொல்கிறேன், கேட்பாயாக. எவன் பிறரது பொருளை எவ்விதத்திலாவது அபகரிப்பவனாகவும், உயிர்களைக் கொல்வோனாகவும், கடினமாகப் பேசுவோனாகவும், தீவினையால் வீணான மதம் பொருந்திச் சித்தங்கலங்கியவனாகவும் இருக்கிறானோ; அவனது இதயத்தில் அந்த ஸ்ரீஅனந்தன் வாசஞ்செய்யமாட்டான். எவன் நற்புத்தியில்லாதவனாய் பிறருடைய செல்வத்திலே பொறாமைப்படுபவனாயும், எம்பெருமானை ஆராதியாமலும் பாகவத விஷயத்தில் திரவியத்தை வினியோகப்படுத்தாமலும் இருக்கிறானோ, அந்த அதமனுடைய மனதில் ஸ்ரீஜனார்த்தனன் எழுந்தருளமாட்டான். எவன் தனது நண்பனிடத்திலும், உறவினரிடத்திலும், மனைவியிடத்திலும், மக்களிடத்திலும், பெற்றோரிடத்திலும் வஞ்சனையுள்ளவனாய், பணமே பெரிதாகப் பேராசை கொண்டவனாக இருக்கிறானோ, அந்த அதம் ஸ்ரீவிஷ்ணு பக்தனல்ல என்பதைத் தெரிந்துகொள். எவன் அயோக்கிய நினைவும் அயோக்கிய செயலிலும் நாட்டமும், அயோக்கிய சகவாசமும் பாபகர்மச் செயலும் செய்பவனாகக் கழிக்கின்றானோ அந்த மனித மிருகத்தை ஸ்ரீவிஷ்ணு பக்தன் அல்லன் என்று அறிந்து கொள்வாயாக! பரமபுருஷனான ஸ்ரீவாசுதேவனொருவனே சகல பிரபஞ்சமும் தாமுமாகத் திருமேனியுடையவனாக இருக்கிறான் என்று யாருக்கு ஸ்ரீஅனந்தனிடத்திலே சர்வ வியாபகத்துவ புத்தி ஸ்திரமாக இருக்கிறதோ, அத்தகைய மகான்களைக் கண்டால் தூரத்தில் விலகிப் போவாயாக! ஓ பத்மநாபா! வாசுதேவா, விஷ்ணுவே, தரணீதரா, அச்சுதா, சங்கு சக்கர கதாபாணி, நீ அடியேங்களுக்கு சரணமாக வேண்டும், என்று யாரால் சொல்லிக் கொண்டிருப்பார்களோ, அத்தகைய மகாபரிசுத்த புருஷர்களை நீ கண்ணெடுத்தும் பாராமல் தூரமாக ஓடிப்போவாயாக. சத்தியஞானானந்தமயனாய்ப் பிரகாசிக்கும் அந்த எம்பெருமான் எவனுடைய இதயகமலத்தில் வாசஞ்செய்து கொண்டிருப்பானோ அந்த மகாபுருஷனுடைய கடாக்ஷம் இருக்குமிடமெல்லாம் நீ செல்லத்தக்கவனல்ல, நானும் அங்கு செல்லத்தக்கவன் அல்லேன் பதறிச் சென்றால், எம்பெருமானது திருவாழியின் தேஜோவிசேஷத்தால் பதராக்கப்பட்டு விடுவோம். அந்த மகான், ஸ்ரீவைகுண்ட திவ்வியலோகத்துக்கே எழுந்தருளத்தக்கவன். ஆகையால் சூரியாதி உலகங்களைப் போல நம்முடைய லோகம் அந்தப் பரமபாகவதன் பரமபதத்துக்குச் செல்லும் வழியாகாமையினால், அவனது கடாக்ஷத்தக்கும் உரியதல்ல என்று சூரியனது மகனான யமகர்மராஜன் தன் சேவகனுக்குக் கட்டளையிட்டான். அந்த யமகிங்கரன், இந்த ரகசியத்தை எனக்கு உபதேசித்தான். பீஷ்மரே! உம்மிடம் உள்ள நட்பினால் அதை நான் உமக்குப் போதித்தேன்! என்று அந்த கலிங்கதேசத்துப் பிராமணர் எனக்குக் கூறினார். அந்த ரகசியத்தை நான் உமக்குச் சொன்னேன். இந்தச் சம்சாரப் பெருங்கடலில் ஆழ்ந்து கிடக்கும் பிராணிகளுக்கு ஸ்ரீமந்நாராயணனைவிடப் புகலிடம் வேறில்லை. எவன் எம்பெருமானிடம் ஆன்ம சமர்ப்பணம் செய்துள்ளானோ, அவன் திறத்திலே யமகிங்கரரும்; காலதண்டமும்; காலபாசமும் ஒன்றுஞ் செய்ய இயலாது. இதை நீர் நன்றாக அறிந்து கொள்வீராக என்று பீஷ்மர் நகுலருக்குப் போதித்தார். மைத்ரேயரே! நான் அதை உமக்குச் சொன்னேன். இனி யாது கேட்கவேண்டுமோ கேளும்.

8. ஆராதனை முறையும் வருணாசிரம தருமமும்

சுவாமீ! இந்த சம்சாரத்தை வெல்ல வேண்டுவோர் ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதிக்க வேண்டும் என்பது சித்தமாயிற்றல்லவா? இனிமேல் அந்த லோகநாதனை ஆராதிக்க வேண்டிய வழிமுறைகளையும், அப்படி ஆராதிக்கும் மனிதர், எந்தப் பயனை அடைவார்கள் என்பதையும் நான் அறிய விரும்புகிறேன். எனவே அவற்றை அடியேனுக்கு விளக்கியருள வேண்டும் என்று மைத்ரேயர், பராசர முனிவரிடம் வேண்டி நின்றார். பராசரரான பிரமரிஷி கூறலானார். மைத்ரேயரே! நீங்கள் இப்போது என்னைக் கேட்ட விஷயத்தை முன்பொரு காலத்தில் சகரமாமன்னன், அவுர்வ மகாரிஷியைக் கேட்டான். அதற்கு அந்த முனிவர் கொடுத்த விடையை நான் உமக்குச் சொல்லுகிறேன் கேளும். சகர மகாராசன், பிருகு மாமுனிவரின் குமாரரான அவுர்வ மகாமுனிவரை வணங்கி, ஸ்ரீவிஷ்ணுவின் ஆராதனை சம்பந்தமான காரியத்தையும், அந்த ஆராதனையால் விளையும் பயனையும் கேட்க அந்த முனிவர் அருளி செய்கிறார். சகர மாமன்னா! ஸ்ரீமந்நாராயணனை ஆராதனை செய்பவன் இந்தப் பூலோக வாழ்வுக்குரிய ஐசுவரியங்களையும் சொர்க்கலோக சம்பந்தமான இந்திராதி போகங்களையும், சொர்க்கத்திலிருப்பவரும் விரும்புகின்ற சதுர்முகாதி பதங்களையும் யாவற்றுக்கும் மேலான மோட்சானந்தத்தையும் பெறுவான். ஆராதனை செய்பவன் எதை எதை எவ்வளவுக்கெவ்வளவு விரும்புகிறானோ அதையதை அவ்வவ்வளவும் பெறுவான். இதில் ஐயமில்லை. அந்தச் சுவாமியை ஆராதிக்கும் வகையெப்படி என்றால், அதையும் சொல்கிறேன் கேட்பீராக. வர்ணாசிரமங்களுக்கு ஏற்ற ஒழுக்கமுள்ளவனாலேயே அந்தப் பரமபுருஷன் ஆராதிக்கப்படுவான். இந்த வழியேயல்லாமல் வேறுவழிகள் அவ்வெம்பெருமானுக்கு மகிழ்ச்சியளிப்பதல்ல. இந்திராதி தேவதாந்தா சம்பந்தமுடையவைகளாகத் தோன்றும் சகல யாகங்களினாலேயும் யாரும் அந்த எம்பெருமானையே பூஜிக்கின்றான். எந்த மந்திரங்களை ஜெபித்தாலும் அவனையே ஜபிக்கிறான். இதுபோலவே அன்னியரை ஹிம்சை செய்தாலும் அவனையை இம்சித்தவனாகிறான். எம்பெருமானே சகல தேவதைகளிலும் வியாபித்திருப்பவன். ஆகையால் எவனும் தனக்குள்ள வர்ணாசிரமங்களுக்குரிய நல்லொழுக்க முடையவனாயிருந்தே அந்த சுவாமியை ஆராதனை செய்ய வேண்டும். பிராமணனானாலும், வேந்தனானாலும், வைசியனானாலும், சூத்திரனானாலும் தனக்குரிய தருமத்தோடு எம்பெருமானை ஆராதிக்க வேண்டுமேயன்றி வேறுவிதமாக ஆராதித்தல் கூடாது. யார் பிறர்மீது அபவாதஞ் சொல்வதும், கோட் சொல்வதும், பொய் பேசுவதும் பிறர் நடுங்கும்படியாகப் பேசுதலுமாகிய குற்றங்களில்லாதவனோ அவனாலே தான் எம்பெருமான் ஆராதிக்கப்படுவான். எவன் பிறர் மனையாளிடத்திலும் பிறர் பொருளிடத்திலும், பிறரைத் துன்புறுத்தலும், மனம் பற்றாமல் இருப்பவனோ அப்படிப்பட்டவனாலேயே, பரமபுருஷன் மகிழ்விக்கப்படுவான். எவன் உயிரினங்களை அடிக்காமலும், துன்புறுத்தாமலும், கேடு நினைக்காமலும் இருப்பானோ, அவனால் தான் புரு÷ஷாத்தமன் மகிழ்விக்கப்படுவான். தேவர் விப்பிரர், ஆசாரியார் ஆகியவர்களுடைய பணிவிடைகளில் எவன் நிராதனாக இருப்பானோ அவனாலேதான் ஸ்ரீயப்பதி மகிழ்வடைவான். எவன் தனது மக்கள் மனைவி முதலியவரிடத்தில் அன்போடு நன்மைகளை நினைப்பதைப்போலவே, பிறரிடத்திலும் நன்மையை நினைத்திருப்பானோ, அவனே ஸ்ரீமந்நாராயணனுக்கு மகிழ்ச்சியூட்டவல்லவன்!  யாருடைய மனம், ராகத் துவேஷாதிகளால் கெட்டுப் போகாமலிருக்குமோ, அந்தத் தூய்மையான மனத்தினாலேயே ஸ்ரீகோவிந்தன் மகிழ்விக்கப்படுவான், அரசனே வருணாசிரமங்களில் சாஸ்திரங்களினால் ஏற்பட்ட தருமங்கள் எவைகள் உண்டோ, அவைகளில் தவறாமல் நிற்பவன் ஸ்ரீவிஷ்ணுவை ஆராதிக்கத் தக்கவன் என்று அதர்வமா முனிவர் சொன்னார்.

அதைக் கேட்ட சகர மாமன்னன், முனிவரே! வர்ணாசிரமங்களையும் அவற்றிற்குரிய தருமங்களையும் நான் அறிய விரும்புகிறேன், ஆகையால் அவற்றை அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டுகிறேன் என்று விண்ணப்பம் செய்ய முனிவர் தொடர்ந்து கூறலானார். அரசே! பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வகை வருணத்தாரின் தர்மங்களையும் நான் சொல்கிறேன். மனம் ஒன்றிக் கேட்பீராக. பிராமணன் தானம் கொடுக்கவும், தானம் பெறவும், யாகங்கள் செய்யவும் அதிகாரமுடையவனாய், வேத அத்தியயனத்தை விடாமற் செய்து கொண்டு நாள்தோறும் ஸ்நானத் தர்ப்பணாதிகளையும் சிரவுதஸ்மார்த்த அக்னி ஹோத்திரங்களையும் செய்து வரவேண்டும். பிழைப்புக்காகப் பிறருக்கு வைதிக கருமங்களைச் செய்வித்தலும், வேதசாஸ்திரங்களை ஓதுவித்தலும் நியாயமான நேர்மை வழிகளில் சம்பாதித்த பொருளைக் கொண்டு பிறர் கொடுக்கும் யோக்கியமான தானங்களை ஏற்றுக்கொள்வதுமாகிய செயல்களைச் செய்யலாம். பிராமணன் உயிரினங்கள் அனைத்துக்கும் நன்மையைச் செய்யவேண்டுமேயல்லாது தீமையைச் செய்யலாகாது. ஏனெனில் எல்லா உயிரினங்களிடத்தும் அன்பாக இருப்பதே பிராமணனுக்கு உயர்வு ஆகும். இந்தத் தன்மைதான் அந்தணன் என்கின்ற பெயருக்குக் காரணமாகும். பிறருடைய ரத்தினக் கற்களை, பருக்காங் கற்களைப் போல சமமான எண்ணங்கொண்டு கருதவேண்டும். ரிது காலத்திலே தன் பத்தினியோடு சேர்வது பிராமணனுக்கு நியாயமாகும். இனி க்ஷத்திரியன், தன் விருப்பப்படி பிராமணருக்குத் தானங்கள் கொடுக்கவும், யாகங்களைச் செய்யவும் வேதசாஸ்திரங்களை ஓதவும் அதிகாரமுடையவன். அவனுக்கு ஆயுதம் எடுத்துச் சேவிப்பதும், பூமியைக் காப்பதும் ஜீவனங்களாகும். ஆயினும் பூமியைக் காப்பதே முக்கியமாகும். அரசர்கள் யாவரும் பூமியைப் பரிபாலனம் செய்தே கிருத கிருத்தியராகிறார்கள். ஏனென்றால், அந்தத் தேசத்தில் நடக்கும் யாகம், தவம் முதலிய புண்ணிய கருமங்களில் அரசனுக்கும் பங்குண்டாகிறது என்பதையும் அறிவீராக. எந்த அரசன் துஷ்டரைத் தண்டித்து, நல்லோரைப் பரிபாலனஞ் செய்து, வருணாசிரம தர்மங்களை நிலைநிறுத்துகிறானோ அந்த அரசன் தனக்கு இஷ்டமான புண்ணிய உலகங்களை அடைகிறான். இனி வைசியன், பிரம்மதேவனின் பசுக்களைப் பரிபாலனஞ் செய்தலும் பயிர் செய்தலுமாகிய செயல்களைப் பிழைப்பாகக் கற்பித்தான். அவனுக்கும், வேத அத்தியயனமும் தானமும், யாகமும் செய்ய அதிகாரமுண்டு. மேலும் அவன் முந்தியவர்களைப் போல, நித்திய நைமித்திய தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டும் வரவேண்டும். சூத்திரனோ முந்தியவருக்கு ஊழியஞ் செய்து பிழைத்தலும் அவர்களுக்குச் சேவ பூதனாக இருந்து அவரால் போஷிக்கப்படவும் வேண்டும் அல்லது சரக்குகளைக் கொண்டு விற்றுவரும் பொருளினாலாவது பிழைப்பதையுமே பிழைப்புத்தொழிலாகக் கொண்டிருக்கிறேன். மேலும் அவனுக்குத் தானங்கொடுக்கவும் பாகயக்ஞவிதியினால், பிதுர்க்கிரியை முதலான கருமங்களைச் செய்யவும் அதிகாரமுண்டு. வேத வேதங்கள் ஒழிந்தவற்றை ஓதலாம். சகல வர்ணத்தாரும் தங்கள் ஊழியக்காரர் முதலானவர்களைப் போஷிப்பதற்காக வேண்டும் பொருள் நியாயமான வழிகளில் சம்பாதிக்கலாம். சந்ததிக்காகத் தத்தமது பெண்டிரிடத்தில் ருதுக்காலங்களில் சேரலாம். எல்லா வருணத்தாருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய குணங்களாவன.

சகல பூதங்களிடமும் தயை, பொறுமை, கர்வமில்லாமை சத்தியம், சித்தி, வீண் வருத்தமின்மை, மங்களச் செய்கை, இனிமையாகப் பேசுதல், சிநேகிக்கும் குணம், வீணாசையின்மை, லோபியாகாமை அழுக்காறின்மை ஆகியவை முக்கியமாகும். பிரம்மச்சரியம் முதலிய ஆசிரமங்களுக்கும் இந்தத் தருமங்கள் பொதுவானவையாகும். ஆயினும் பிராமணாதிகளுக்கு ஆபத்தருமங்களைச் சொல்கிறேன் கேட்பீராக. பிராமணன் அரசனது கருமத்தையும் க்ஷத்திரியன் வைசியரது கருமத்தையும், வைசியர் சூத்திரரது கருமத்தையும் செய்யலாம். பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சூத்திரரது கருமத்தைச் செய்யலாகாது. பிராமணர், க்ஷத்திரியர் ஆகிய இருதரத்தாரும் சக்தியுடையோராக இருந்தால் கீழோருடைய கருமங்களை விட வேண்டும். ஆபத்தில் சூத்திர கருமம் தவிர மற்றையக் கீழான தருமங்களைச் செய்யலாம். இவ்விதமாக அல்லாமல் அவனவன் நினைப்பது போல் அந்தந்தத் தொழில்களைச் செய்து சாதி சங்கரஞ் செய்யலாகாது. அரசே! வருண தருமங்களை இப்போது நான் உனக்குச் சொன்னேன், இனிமேல் ஆசிரம தருமங்களை சொல்கிறேன். கேட்பாயாக என்று அவுர்வ மகாமுனிவர் சகர மாமன்னனிடம் கூறலானார்.

9. வாழ்க்கையின் நான்கு தருமங்கள்

சகர மாமன்னனே! கேட்பாயாக. முதலில் பிரும்மசரியா சிரம தர்மத்தைச் சொல்கிறேன், சிறுவனாக இருப்பவன் உபநயனம் செய்யப்பெற்று, விரத நியமங்களோடு வேதங்களை ஓதிக்கொண்டு, குருவின் இல்லத்திலேயே இருக்க வேண்டும். சவுசாசார சம்பன்னனாய்க் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். விரத அனுஷ்டானமுடையவனாய் வேதங்களை ஓதவேண்டும். காலையிலும் மாலையிலும் சூரியனையும் அக்கினியையும் மனம் ஒன்றிப் பூஜிக்க வேண்டும். குருவை வணங்கி வரவேண்டும். சீடன் தன் குருநாதர் நிற்கும் அளவில் தானும் நிற்கவும், அவர் போகும்போது தானும் உடன் செல்லவும், அவர் மேலே உட்கார்ந்தால் கீழே உட்காரவும் வேண்டும். ஒருபோதும் அவருக்கு விரோதமான காரியங்களைச் செய்யக்கூடாது அவர் ஓதென்று கட்டளையிட்டவுடனேயே அவருக்கு எதிரில் நின்றுவேறு நினைப்பின்றி வேதத்தை ஓதி உணரவேண்டும். அதன் பிறகு, குருவின் அனுமதியைப் பெற்று பிøக்ஷயினால் தான் கொண்டு வந்த அடிசிலை உண்ண வேண்டும். ஆசிரியர் நீராடியபிறகு அந்த நீரில் சீடன் நீராட வேண்டும். தினந்தோறும் காலையில் சமித்து, தருப்பை முதலியவைகளைக் குருவுக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். இவ்விதமாகக் குருவினிடத்தில் ஓதவேண்டிய வேதங்களை அந்தந்த ஞானம் வருமளவும் ஓதிய பிறகு அவரிடம் அனுமதி பெற்று குருவுக்கு காணிக்கை அளித்துவிட்டுக் கிருகஸ்தாசிரமத்துக்குப் போக வேண்டும். இனி கிருகஸ்தாசிரமம் என்ற இல்லற வாழ்க்கையின் ஒழுக்கத்தைச் சொல்கிறேன். பிரம்மச்சரியத்தைக் கழித்த பிறகு விதிப்படி ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனக்குத் தகுந்த தொழிலில் திரவியஞ்சம்பாதித்து, இல்லற வாழ்வை நடத்த வேண்டும். பருவக்காலங்களில் பிண்டம் இடுவதினாலும் எள்ளுடன் கூடிய தண்ணீராலும் பிதுர்க்களையும், யாகங்களினால் தேவர்களையும், அன்னங்களினால் அதிதிகளையும், வேத அத்தி யமனத்தினால் முனிவர்களையும், சந்ததியினால் பிரமதேவனையும் பூதபலி கர்மத்தால் பூதங்களையும், வாத்சலியம் அன்பினால் சகல உலகங்களையும் திருப்திப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இவ்விதம் செய்து வருகிற கிரஸ்தன் தனது சுக கர்மங்களினால் சம்பாதிக்கப்பட்ட அநேக புண்ணிய உலகங்களை அடைவான். பிøக்ஷயெடுத்துண்ணும் துறவிகள் பிரமச்சாரிகள் யாருண்டோ, அவர்கள் யாவரும் கிருகஸ்தனிடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றனர். ஆகையால் இந்த இல்லறமானது உயர்ந்ததாகும். மேலும் வேதங்களைக் கற்பதற்காகவும் தீர்ந்த ÷க்ஷத்திர யாத்திரைக்காகவும் பூமியைப் பார்ப்பதற்காகவும், பிராமணர்கள் சுதேசம் விட்டுத் திரிந்து கொண்டிருக்கின்றனர். சிலர் ஓரிடம் என்றில்லாமலும் ஆகாரமில்லாமலும் அஸ்தமனமாகும் இடமே வீடாகக் கொண்டு தங்குவோராகத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகையோர் அனைவருக்கும் இல்லறத்தோரே சார்பாகவும், ரட்சிப்போராகவும் இருக்கின்றனர். இத்தகைய தேசாந்திரிகள் வருமளவில் நல்வரவு கேட்பது போன்ற இனிமையான பேச்சுக்களை இல்லறத்தோன் பேசி, ஆசனம், போஜனம், சயனம் முதலியவற்றை வழங்கவேண்டும். அதிதியானவன் எவனிடம் வந்து தன்னாசை கெட்டுத் திரும்பிப் போகிறானே, அந்த அதிதியானவன் அந்த இல்லறத்தானுக்குத் தனது பாவத்தைக் கொடுத்து விட்டு, அவனது புண்ணியத்தைத் தான் கொண்டு போகிறான்.

இல்லறத்தில் இருப்பவனுக்குப் பிறரை அவமதித்தல், அகங்காரம், டம்பம் கொடுத்து விட்டோமே என்ற மனத்தவிப்பு அடித்தல்; வைதல் இவையெல்லாம் மேன்மையாக மாட்டா! இத்தகைய கெட்ட குணங்களில்லாமல் நற்குணமுடையவனாய்; எந்த கிரஸ்தன் தனக்குரிய தர்மங்களை நன்றாகச் செய்து வருகின்றானோ அவன் சகல இடையூறுகளிலிருந்தும் விடுபட்டு உத்தமமான உலகங்களை அடைவான். இப்படிக் கிருஸ்தா சிரமத்திலிருந்து செய்ய வேண்டியவைகளைச் செய்து; வயது முதிர்ந்தவுடன் தனது புத்திரர்கள் வசம் தனது பத்தினியை ஒப்புவித்தாகிலும் அவளையும் தன்னுடன் அழைத்து கொண்டாகிலும் வனத்திற்குச் செல்லவேண்டும். அவ்வாறு செல்லுதலே வானப் பிரஸ்தாசிரமமாகும். இனி; வானப்பிரஸ்தாசிரம தர்மங்களைச் சொல்கிறேன். வானப்பிரஸ்தனானவன் இலை, கனி, கிழங்கு வகைகளைப் புசித்துக் கொண்டு தாடியும் சடையும் தரித்தவனாய், எல்லாப் பொருள்களிலும் பற்றற்று முனிவனாய் அந்தக் காட்டில் தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். முனிவனாக இருப்பவன், தோலையாகிலும் நாணற்புல் மரவுரி முதலியவற்றையாகிலும் உடுக்க வேண்டும். முச்சந்திகளிலும் நீராட வேண்டும். அந்த வானப்பிரஸ்தனுக்குத் தேவதா ஆராதனையும் ஹோமமுமான காரியங்களாகும். அரசே! முனிவனானவன் அப்பியஞ்சனம் செய்து கொள்ள வேண்டுமாயின் காட்டெண்ணையினால் செய்து கொள்வதே தகுதியானதாகும்! தவஞ்செய்தலும் குளிர்வெப்பம் முதலியவற்றை சகித்துக் கொள்வதும் முனிவனுக்குச் சிறப்பான தர்மங்களாகும். இத்தகைய முறையில் எந்த முனிவன் வானப்பிரஸ்த தருமத்தை அனுஷ்டிப்பானோ, அவனது தீராத தோஷங்களையெல்லாம் அக்கினி தகிப்பது போலத் தகித்து நிலையான உலகங்களை அடைவான். நான்காவது சந்நியாசிக்குரிய ஆசிரமம் என்று சொல்வார்கள். எவன் புத்திரக்களத்திராதிகளிலும் பொருள் முதலானவைகளிலும் மனப்பற்றில்லாமல் இருக்கிறானோ அவன் நான்காவதாச் சிரமத்தில் பிரவேசிக்க வேண்டும். இவ்விதமாகக் காமக்குரோத மாச்சரியங்கள் இல்லாமல் சந்நியாசம் பெற்றுத் தர்மார்த்த தர்மங்களுக்கு உரிய சகல முயற்சிகளையும் விட்டு; பிரம்மஞான நிஷ்டை செய்து வரவேண்டும். அந்தச் சந்நியாசி நண்பரிடமும் பகைவரிடமும் ஒரேவிதமான மித்திர பாவத்துடனிருந்து, மிருகங்கள், பறவைகள் முதலிய பலவற்றுக்கும் வாக்கு, மனம், காயம் என்ற மூன்றிலும் துரோகஞ் செய்யாமல் இருக்க வேண்டும். புத்திராதித் தொடர்புகளையும் விட்டுவிட வேண்டும். கிராமத்தில் ஓரிரவும், பட்டணத்தில் ஐந்து இரவுகளும்; இப்படி யாக இடத்துக்குத் தக்கவாறு வாசஞ்செய்து கொண்டு ஒருவருடைய பகைமையோ; நட்போ வராதவாறு நடந்து கொள்ள வேண்டும். யதியானவன்; வீட்டில் இருப்போரெல்லாம் புகிக்கும் காலம் அறிந்து சாதி குலாச்சாரங்களில் சிறந்தவர் வீட்டுக்கு யாசகத்துக்குப் போகலாம். சந்நியாசியானவன் காமக்குரோத, லோப மதபேதங்களை விட்டு விட்டு ஒன்றிலும் எனது என்ற அபிமானம் இல்லாதவனாக இருக்க வேண்டும். எந்தத் துறவி சகல, பூதங்களுக்கும் அபயங்கொடுத்துச் சஞ்சரிக்கிறானோ; அவனுக்கு சகல பூதங்களாலும் பயமில்லை. இப்படி பிராமணன் துறவியாகித் தன்னுடைய அக்கினி ஹோத்திரத்தை, தனது சரீரத்திலேயே இருக்கச் செய்து தன் சரீரத்தில் இருக்கும் அக்கினியைக் குறித்து, தன் முகமாகிய குண்டலத்தில், பிøக்ஷயினால் கிடைத்த அவிசுகளை விதிப்படி ஓமஞ்செய்து வருவானாகில் அவன் அக்கினி சயனஞ் செய்தவர்கள் அடையும் உலகங்களை அடைவான். இது சாதாரண சந்நியாசிகளைக் குறித்ததாகும். விசேஷ சந்நியாசிக் கிரமத்தைக் கேட்பீராக. எவன் நிச்சய புத்தியுள்ளவனாய், தூய்மையாளனாய் இந்தச் சந்நியாசத்தை முறைப்படி ஆஸ்ரயிக்கிறானோ அவர் எரிகரும்பில்லாத அக்கினியைப் போல, மிகவும் சாந்தமான ஜோதியாய் விளங்கும் பிரமலோகத்தை அடைவான்.

10. விரத விவாகக் கிரியைகள்

சகர மாமன்னன், அவுர்வமா முனிவரை நோக்கி, முனிவரே வருணாசிரம தர்மங்களைத் தாங்கள் கூறியருளினீர்கள். இனி, புருஷனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கூறவேண்டும் என்றான். அரசனே; நீ கேட்ட தருமங்களைச் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக. தந்தை முதலில் காப்பாதானம் முதலியவற்றைச் செய்து; பிள்ளை பிறந்தவுடன் அதற்கு ஜாதகர்மாதிகளான சகல கிரியைகளையும் அப்யுதயங்களாயும் செய்ய வேண்டும். பிராமணர்கள் தேவக் கிரியையாகிலும் நாந்தீ பிதுர்க்கிரியையாகிலும் செய்யும்போது பிராமணர்களை இரட்டையாகவும்; கிழக்குமுகமாக எழுந்தருளச் செய்து; திருப்தியடையும்படி திருவமுது செய்விக்க வேண்டும். நாந்தீ முகர்களான பிதுர்க்களைக் குறித்து தயிர், யவங்கள், இலந்தை இவற்றோடு கலந்த பண்டங்களை மகிழ்ச்சியோடு தேவ தீர்த்தத்தினாலேயாகிலும் பிரஜாபத்திய தீர்த்தத்தினாலே யாகிலும் பிரதக்ஷிணமாகக் கொடுக்க வேண்டும். இதுபோலவே மற்ற விருத்திகளிலும் செய்வது அவசியம். பிறகு தகப்பன் பத்தாவது நாள் முதலாக சாஸ்திரங்களில் சொல்லிய நாட்களில் தகப்பனே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும். தன் குலதெய்வத்தின் பெயரையாவது, தன் மூதாதையரின் பெயரையாவது முன்னிட்டதாயும், புருஷனுக்குப் புருஷவாசகமாயும், ஸ்திரீக்கு ஸ்தீரிவாசகமாயும், பொருட் குறைவற்றதாயும், வெட்கமாகவோ, அருவருக்க வைப்பதாகவோ இராததாகவும், சமமான எழுத்துள்ளதாயும், மிக நீளாததாயும், மிகவும் குறுகாததாயும், அதிகக் கடினமான எழுத்தற்றதாயும், எளிதில் அழைக்கக் கூடியதாயும் உள்ள பெயரை வைக்க வேண்டும். அந்தப் பெயரானது பிராம்மணருக்கு சர்வ என்ற சொல்லோடும்; க்ஷத்திரியருக்கு வர்ம என்ற சொல்லோடும்; வைசியருக்கு குப்த என்ற சொல்லோடும், சூத்திரருக்குத் தாஸ என்ற சொல்லோடும் இறுதியில் அமைந்ததாக இருக்க வேண்டும். விஷ்ணுசர்மா; இந்திர வர்மா, சந்திரகுப்தன், ஹரிதாஸ் என்பது போலப் பெயரிட வேண்டும்.

இதுபோலப் பெயரிட்ட பிறகு, உபநிஷ்கிரமணம் முதல் உபநயனம் ஈறாகவுள்ள சம்ஸ்காரங்களைப் பிதாவினால் செய்யப் பெற்றவுடன், அந்தப் பிள்ளை குருவிடம் சென்று, முன் சொல்லிய விதிப்படி வேதசாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்து குருவுக்குத் தக்ஷிணை கொடுத்து; வேத விரதங்களை அனுஷ்டித்து; கிருதஹஸ்தாசிரமத்துக்குப் போக இச்சிப்பாணாகில்; அவன் திருமணஞ்செய்து கொள்ள வேண்டும். அல்லது நைஷ்டிக பிரமச்சாரியாகக் காலத்தைக் கழிக்க வேண்டும். அப்படிப் பிரமச்சாரியாக வாழ்ந்தால்; குருவுக்கோ அல்லது குருபுத்திரர்களிடமோ பணிவிடைசெய்து வரவேண்டும். அதுவுமில்லையெனில் தன் விருப்பம் போல வானப்பிரஸ்தனாகவோ, சந்நியாசியாகவோ ஆகலாம். ஒருவன் திருமணஞ் செய்துகொள்ளும் விஷயத்தில்; தன் வயதுக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேற்படாத வயதுள்ள பெண்ணாகவும், அதிக அடர்த்தியான கூந்தலும் மிகக்குறைவான கூந்தலும் இல்லாதவளாகவும், அதிக கறுப்பாகவோ, வெளுப்பாகவோ இல்லாத நல்ல நிறமுடையவளாகவும், அளவுக்கு மேற்படாமலும் குறையாமலும் உள்ள அவயவங்கள் வாய்ந்தவளாகவும், சூத்திராதிகளால் வளர்க்கப்படாதவளாகவும், இழிகுலத்தில் பிறவாதவளாகவும், உடம்பில் மிகவும் ரோமங்கள் மொய்த்திராதவளாகவும், வியாதியில்லாதவளாகவும்; துஷ்டத்தனமும் துஷ்ட வார்த்தைகளும், அற்றவளாகவும் குஷ்டம் முதலிய நோயுடைய தாய் தந்தையருக்குப் பிறவாதவளாகவும்; மீசை முதலான புருஷ லட்சணங்கள் இல்லாதவளாகவும்; ஆண் பிள்ளையைப் போன்ற தோற்றம் இல்லாதவளாகவும்; பருத்த கனமான குரலில்லாதவளாகவும், மெலிவற்றவளாகவும், காக்கை போன்ற குரலற்றவளாகவும், இமைகளில் மயிர்ச் செறிவுள்ளவளாகவும், வட்டமாகவோ, வேறுவிதமாகவோ அவலக்ஷணப்படாத நேத்திரங்களைக் கொண்டவளாகவும், ரோமம் நிறைந்த கணைக்கால்களும் உயர்ந்த புறக்கால்களும் இல்லாதவளாகவும்; சிரிக்கும்போது கபோலங்கள் பாழி போல் குழிவடையாதவளாகவும் உக்கிரமான காந்தியும் மிகச் சிவந்த கண்களும், மிகப் பெருத்த கைகால்களும் இல்லாதவளாகவும் இரண்டு புருவங்களும் சமமாக அமைந்தவளாகவும் அப்புருவங்கள் நெருங்கி ஒன்றோடொன்று இணைந்திராதவளாகவும் மிகவும் இடைவெளியுள்ள பற்களற்றவளாகவும், கொடுமையும் பயங்கரமுமான தோற்றமில்லாதவளாகவும் உள்ள பெண்ணையே திருமணஞ் செய்துகொள்ள வேண்டும். மேலும் அந்தப் பெண்ணின் தாய்வழியில் ஐந்து தலைமுறைக்கும் தகப்பன் வரிசையில் ஏழுதலைமுறைக்கும் உட்படாதவளாக இருக்கவேண்டும். இத்தகைய கன்னிகையை நியாயமான விதிமுறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தத் திருமணம் பிராம்மம் தைவம் ஆரிஷம் பிரஜாபத்தியம், ஆசுரம் காந்தருவம் ராக்ஷசம், பைசாசம் என்ற எட்டுவகையாகும். இவற்றினுள் எந்த வருணத்துக்கு எது தகும் என்று முனிவர்கள் விதித்துள்ளனரோ அந்த விவாகத்தையே செய்யவேண்டும். மற்றவற்றை ஒதுக்கிவிடவேண்டும். இவ்விதமாகத் திருமணஞ் செய்து கொண்டவளுடன், யாதொரு குறைவுமில்லாமல் இல்லறம் நடத்தி வருபவன் சுகமும் பயனும் பெறுவான்.

 
மேலும் விஷ்ணு புராணம் »
temple news
1. புராணம் கேட்ட வரலாறு 18 புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது 23,000 ஸ்லோகங்கள் ... மேலும்
 
temple news
9. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்த கதையும், ஸ்ரீதேவிப் பிராட்டியாரின் திருத்தோற்றமும் பராசரர் ... மேலும்
 
temple news
15. கண்டு மகரிஷியின் காதலும் தக்ஷ வமிசமும் பராசர முனிவர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேயரே கேளும்! ... மேலும்
 
temple news
1. பிரியவிரத வம்சம் பராசர முனிவரே! உலகப்படைப்புப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ... மேலும்
 
temple news
9. சிம்சுமார சக்கரம் மைத்ரேயரே! ஸ்ரீஹரி பகவானின் சிம்சுமாரம் என்ற ஜந்துவைப் போலத் தோன்றுகின்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar