மனம் என்னும் பாம்பு மனிதனை ஆட்டி வைக்கிறது. அதை அடக்கும் விதத்தை விளக்கிய சித்தர் பாம்பாட்டிச் சித்தர். இவரின் பாடல்கள் ‘நின்றாடு பாம்பே’ என்னும் சொல்லுடன் முடியும். சட்டை முனிவரின் சீடரான இவர் கொங்கு நாடான மருதமலையில் வாழ்ந்ததாகச் சொல்வர். இங்கு பாம்பாட்டிச் சித்தர் குகை உள்ளது. மனித உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்களில் முதன்மையானது மூலாதாரம். குண்டலினி சக்தி இங்கு பாம்பு வடிவில் சுருண்டு கிடக்கிறது. இதனை விழித்தெழச் செய்யப் பாடியவர் என்பதாலும் இவருக்கு இப்பெயர் வந்தது என்பர். சித்தர் ஞானக்கோவை என்னும் நுாலில் 130 பாடல்களில் பாம்பு பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.