வெள்ளிக்கிழமை.. வெற்றித்திருநாளில் கோயில்கள் திறப்பு: மகிழ்ச்சியுடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2021 09:10
தேவகோட்டை: இந்துக்கள் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனாவை காரணம் கூறி மாநில அரசு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோயில்கள் திறப்பிற்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் தடை செய்தது. வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகளவில் அம்மனை வழிபாடு செய்வது மரபு. தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர்.
மற்ற துறைகளில் திறந்து விட்ட அரசு கோயிலை திறக்க வில்லை. பண்டிகை காலம் என்பதால் ஆன்மிகவாதிகள் போராட்டங்கள், கோர்ட்டை நாடினர். இந்நிலையில் நேற்று அரசு கோயில் வழிபாட்டுக்கு அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமியையும் அம்மனையும் கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். பக்தர்கள் மகிழ்ச்சி யோடு சுவாமி கும்பிட்டனர். குறிப்பாக அம்மன் கோயில்களில் பெண்கள் அதிகளவில் வழிபாடு நடத்தினர்.
கோயிலுக்கு வந்த தனலட்சுமி , நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை மங்கலகரமாக அம்மனை கும்பிட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சினிமா தியேட்டரை திறந்த அரசு கோயிலை திறக்க தடை செய்தது நெருடலாகத்தான் இருந்தது. இப்போதாவது திறக்க உத்தரவிட்டது மகிழ்ச்சி. மக்கள் எல்லோரையும் நன்றாக வைத்திருக்குமாறு சுவாமியை வேண்டினேன். விஜயதசமி வெற்றிக்குரிய நாள் . இன்று கோயிலை திறந்தது வெற்றிதான். என கூறினார்.
ஹிந்து சேனா இயக்க மாநில செயலாளர் சுரேஷ் கூறுகையில் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கோயிலை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசிற்கு நன்றி. இந்துக்களின் புனிதமான நாள் வெள்ளி. போரில் வெற்றி பெறும் நாளான இன்று கோயிலை திறக்க சொன்னதும் ஒரு வகை வெற்றி தான். நாளை புரட்டாசி கடைசி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. கோயிலை திறக்க உத்தரவிட்ட தை போல திருவிழாவை சமூக இடைவெளியுடன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்த உத்தரவிடவேண்டும். என்றார்.