மங்கலதேவி கண்ணகி கோயில் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2022 10:12
கூடலுார்: இந்து சமய அறநிலைத்துறை திருக்கோயில் நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் இடையே காணொளி காட்சி மூலம் இன்று நடக்கும் ஆய்வு கூட்டத்தில், தமிழக -கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கண்ணகி பக்தர்கள் உள்ளனர். தேனி மாவட்டம் கூடலுார் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று இங்கு விழா கொண்டாடப்படும்.
3 நாள் விழா: துவக்கத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்து வந்த விழா கேரள வனத்துறையின் கெடுபடியால் ஒரு நாளாக குறைக்கப்பட்டது. மேலும் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கான நேரமும் 10 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்கப்பட்டது. இக்கோயிலுக்குச் செல்ல கேரளா குமுளி வழியாக 14 கி.மீ., தூரத்திற்கு கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது. தமிழகப் பகுதியான லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., தூரத்திற்கு வனப்பகுதியில் நடைபாதை உள்ளது. நடந்து செல்ல முடியாத பக்தர்கள் பலர் கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதையை பயன்படுத்துகின்றனர். தமிழக வனப்பகுதி வழியாகவும் ஜீப் பாதை அமைக்க பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு தமிழக அரசு இப்பாதை அமைக்க சர்வே பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தமிழக வரலாற்று சிறப்புமிக்க கோயிலில் பராமரிப்பு பணிகள் செய்யாமல் இருப்பதால் அழிந்து வருகிறது. இதனை சீரமைக்கக் கோரி மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் உச்சநீதமன்றத்தில வழக்கு தொடர்ந்து, நடந்து வருகிறது.
ஆய்வுக்கூட்டம்: இன்று வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தலைமையில் திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர், துணை இயக்குனர், கோட்ட அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் கண்ணகி கோயிலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு வரும் சித்ரா பவுர்ணமி விழாவில் தமிழக பக்தர்கள் சுதந்திரமாக வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணகி பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.