Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
48 ஆண்டுக்கு முன்பு கடல் தாயின் சீற்றத்தால் தனுஷ்கோடி..!
டிசம்பர் 22,2012
அ-
+
Temple images

ராமேஸ்வரம்: கடல் தாயின் சீற்றத்தால், 48 ஆண்டுகளுக்கு முன்ப, டிச.,22 நள்ளிரவில் ஏற்பட்ட புயலால், அழிந்து போன வணிக நகரம் தனுஷ்கோடி, இன்றும் புயலின் எச்சங்களாய் காட்சியளிக்கிறது. இலங்கையில் சீதையை மீட்டு, ராமபிரான் திரும்பும் போது, அவர் எய்த அம்பு விழுந்த இடம் தான் தனுஷ்(வில், அம்பு)கோடி என ராமாணயத்தில் குறிப்பிட்டுள்ளது. தமிழத்தின் தென்கிழக்கு திசையில், ராமேஸ்வரத்தில் இருந்து 18 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், நூறு ஆண்டுக்கு முன்பு, புனித தலமாகவும், ஆங்கிலேயர் ஆட்சியில், வணிக நகரமாகவும் விளங்கியது. கடந்த 1914 ல், தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னாருக்கும் இடையே, பயணிகள் கப்பல் போக்குவரத்தும், சென்னை முதல் தனுஷ்கோடி வரை, "போட் மெயில் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு, மத்திய அரசின் கீழ், இரு போக்குவரத்தும் தொடர்ந்தது.

இருகடலும் சங்கமிக்கும் இந்த இடத்தில், சூரிய நமஸ்காரத்துடன் புனித நீராடினால், "பாவம் நீங்கி, புண்ணியம் சேரும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தமிழகத்தின் சிறந்த துறைமுகமாகவும் விளங்கிய தனுஷ்கோடி, தமிழகத்திற்கு வருவாய் ஈட்டி தரும், முக்கிய நகரமாகவும் இருந்தது. இரண்டாம் உலக போரில், இந்தியாவின் தென்கடல் எல்லையில், சிறந்த பாதுகாப்பு அரணாக விளங்கிய இந்நகரை, சிலநிமிடங்களில், கடல் அலைகள் புரட்டி போட்டு, நகரையே காணாமல் செய்து விட்ட சம்பவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதே நாளில் அதாவது, 1964 டிச., 22 ல், நள்ளிரவு 12.30 மணிக்கு ஏற்பட்ட புயலால், எழுந்த ராட்சத அலைகள் தனுஷ்கோடியை தாக்கியது. தூக்கத்தில் இருந்த மீனவர்கள், பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு, ரயிலில் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள், பயணிகள், பக்தர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் இறந்தனர். சில நிமிடங்களில், புயல் தனுஷ்கோடியில் இருந்த பள்ளிக் கூடம், மருத்துவமனை, தபால் நிலையம், கோயில்களை சேதப்படுத்தி, "மென்று துப்பிய எலும்பு துண்டு போல் ஆக்கிவிட்டது.

கட்டடங்கள் சின்னபின்னமாக சிதைந்தன. டிச., 24 ல் காலை, புயலின் கோர தாண்டவத்தின் அடையாளமாக, எங்கு பார்த்தாலும் கிடந்த பிணக்குவியல்களை அடையாளம் காணவும், கணக்கிடவும் முடியாமல் அதிகாரிகள் திணறினர். இச்சம்பவத்தை "தேசிய பேரிழப்பு என மத்திய அரசு அறிவித்தது. புயல் தாக்கியபோது, அங்கிருந்த சில மீனவர்கள், ரயில்வே ஸ்டேஷன் கட்டடம், மணல் திட்டுகள் மேல் நின்று, உயிர் தப்பியதாக கூறுகின்றனர். 48 ஆண்டிற்கு பிறகும், இன்றும் சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு உருக்குலைந்த கட்டடங்கள், புயல் தாண்டவத்தின் சுவடாய், புராதான சின்னமாக காட்சியளிக்கின்றன. இங்கு சாலை, மின்சாரம், குடிநீர் உட்பட கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் இது வரை, எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ராமேஸ்வரம் சுற்றுலாத் துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் சாலை அமைக்கும் திட்டம் உள்ளது. இப்பணி முடிந்தால், தனுஷ்கோடியில் இடிந்த கட்டடங்களை புனரமைத்து, சிறுவர் பூங்கா, சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்கு அம்சம், மீனவர்களுக்கு குடிநீர், மின் வசதியை ஏற்படுத்த முடியும், என்றார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.