பதிவு செய்த நாள்
22
டிச
2012
10:12
மரம் நல்லது என்றால், அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால், அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நல்லவர், நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக்கொணர்வர். தீயவரோ, தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள், என்று அறிவுறுத்தியவர் இயேசு கிறிஸ்து.
அன்பில் ஆனந்தத்தையும், பண்பில் பரோபகாரத்தையும் வெளிப்படுத்தும் பெற்றோரின் குழந்தைகள், தங்கள் வாழ்விலும் அதே குணநலன்களை பிரதிபலிப்பர். "நல்ல மரம், நல்ல கனி என்று பார்ப்பவர்கள் இவர்களை பாராட்டுவர். எண்ணம் தூய்மையானதாக இருந்தால், வார்த்தைகளில் இனிமை இழைந்திருக்கும். கேட்பவர்களின் காதுகளில் அது, ஸ்வரங்களின் பரவசத்தை ஏற்படுத்தும். பண்பாளராக இருந்தாலும், வார்த்தைகளில் நிதானம் நிலைத்திருக்க வேண்டும். இல்லையேல், நாம் பேசும் வார்த்தைகளே நம்மை குற்றவாளியாக மற்றவர் முன் நிறுத்தி விடும்.வாழ்நாளில், நாம் பேசிய தேவையற்ற வார்த்தைகளுக்காக இறுதி நாளில், இறைவனிடம் பதிலளிக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும்.