மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள எல்லாம் வல்ல சித்தர் சன்னதி புகழ்பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். இவரின் பெயரைக் கொண்டே இங்குள்ள மூலவரும் சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்பர். சதுரகிரிமலையில் மகாலிங்கத்தை பிரதிஷ்டை செய்த அகத்தியர் பூஜை செய்துவிட்டு, சுந்தரானந்தரின் மேற்பார்வையில் விட்டு சென்றார். அதனால், அவருக்கு சுந்தர மகாலிங்கசுவாமி என்ற பெயர் உண்டானது. நவக்கிரகங்களில் புதனுக்குரிய தலமாக மதுரை விளங்குவதால், இவரை புதன் கிழமையில் வழிபட்டால் கல்வியில் மேம்பாடு உண்டாகும். பூக்கூடாரம் இட்டு வழிபடும் நேர்த்திக்கடன் இவருக்கு சிறப்பு வழிபாடாக நடக்கிறது. சாம்பிராணி தைலமும் இவருக்கு விருப்பமானதாகும். சொக்கநாதரே சித்தராக எழுந்தருளி கல்யானைக்கு கரும்பு கொடுத்ததாக திருவிளையாடல் கூறுகிறது.