பதிவு செய்த நாள்
25
நவ
2014
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா, நேற்று துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழாவில், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனை வழிபடும் விழா, நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று இரவு, 8:30 மணிக்கு, காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில், வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் உட்பட, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று, அண்ணாமலையார் கோவிலில் உள்ள பிடாரி அம்மனுக்கும்; நாளை, விநாயகருக்கும் விழா எடுக்கப்படும். வரும், 26ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. வரும், டிச., 2ம் தேதி, பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும்; டிச., 5ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.