ஆனைமலை : ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். ஆனைமலை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நேற்று நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சோம வார பூஜையின் சிறப்பு: கார்த்திகை மாதம் திங்கள்கிழமை சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து பூர்ண சந்திர நிலையை அடைந்ததாக ஐதீகம். வாழ்வில் பரிபூரணத்தை பெற பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். ரமணமுதலி புதூரில் உள்ள மண்கண்டேஸ்வரர் கோவிலில் நேற்று சங்காபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காலை 5.00 மணிக்கு நீராடி சிவாலயத்தை 11 முறை சுற்றி வந்து, நாக கன்னிகளுக்கு பழம் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். இந்த சோமவார பூஜையில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.ஆனைமலை சோமேஸ்வரர் கோவில், கோட்டூர் ஆதிசங்கரர் ஆலயம், பெத்தநாயக்கனூர் பட்டீஸ்வரர், சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சோமவார சிறப்பு பூஜை நடந்தது.