பெண்ணாடம்: பழமைவாய்ந்த திருமலை அகரம் விசுவநாதர் கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்ணாடம் திருமலை அகரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாதர் கோவில் உள்ளது. கோவில் கருவறையில் சிவன், விஷ்ணு இருவரும் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதனால் இவ்வூருக்கு திருமலை அகரம் (விஷ்ணு திருமால், சிவன் அகரம்) என பெயர் வந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். கோவிலில் விநாயகர், முருகன், காலபைரவர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் உள்ளன. விசாலாட்சி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அவர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இந்து சமய அற நிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இக்கோவிலில் சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடப்பது வழக்கம்.
கோவில் கடந்த 50 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பாழடைந்துள்ளதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, அரச மரம் வளர்ந்து, சுற்றிலும் முட்புதர்கள் மண்டியுள்ளன. கோபுர சிலைகளும் உடைந்துள்ளன. இங்கு தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது. கோவில் திருப்பணிக்காக கடந்த 2007ல் பழனி பாலதண்டாயுதபாணி கோவிலில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. திருப்பணி துவங்காததால் 2010ல் பணம் பழனி கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. கோவிலை புனரமைக்கக் கோரி கிராம மக்கள் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. எனவே, பழமைவா ய்ந்த திருமலை அகரம் விசுவநாதர் கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.