பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தேவி கருமாரியம்மன் கோவில் மற்றும் மைதானம் மாரியம்மன் கோவிலில், நேற்று அக்னி கம்பம் நடும் விழா நடந்தது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள, சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. பக்தர்கள், 60 நாட்கள் பக்தியுடன் மாலை அணிந்து, விரதமிருந்து, வெள்ளியங்கிரி மலைக்கு செல்வது வழக்கம். அப்போது கோவிலில் உள்ள தேவி கருமாரியம்மனுக்கு பூச் சாட்டி, அக்னி கம்பம் நட்டு, விழா கொண்டாடி மகிழ்வர்.அம்மனுக்கு கடந்த, 24ம் தேதி பூச்சாட்டப்பட்டது. நேற்று இரவு, 9:00 மணிக்கு, நடூர் விநாயகர் கோவிலில் இருந்து, அக்னி கம்பம் எடுத்து வந்து, கோவில் நட்டனர். தொடர்ந்து, 7ம் தேதி வரை அபிஷேக பூஜையும், அன்று இரவு, 9:00 மணிக்கு, அம்மன் அழைப்பும், 8ம்தேதி அம்மன் திருவீதி உலாவும், மாலை, 4:00 மணிக்கு மாவிளக்கும், 9ம் தேதி அம்மன் சுவாமி மறுஊர்வலமும் நடைபெற உள்ளது. 10ம் தேதி சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜையும், 13ம் தேதி நடூர் மாரியம்மன் கோவிலில் இருந்து, திரிசூலம் எடுத்து வந்து, படி விளையாட்டும் நிகழ்ச்சியும், 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகளும், அன்னதானமும் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதி வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கு, பக்தர்கள் புறப்படும் நிகழ்ச்சியும், 17ம் தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை, வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
* ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள, மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா, கடந்த 24ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று இரவு கோவிலில் கம்பம் நடப்பட்டது. இன்று கொடியேற்றமும், 6ம் தேதி குண்டம் திறப்பும், 7ம் தேதி பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், குண்டம் இறங்குதலும், சுவாமிக்கு அலங்கார பூஜையும், அன்னதானமும் நடைபெற உள்ளது.வரும் 8ம் தேதி பொங்கல், மாவிளக்கு, தேரோட்டமும், 9ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 10ம் தேதி மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், 13ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.