பதிவு செய்த நாள்
28
மே
2015
11:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா, நேற்று கோலாகலமாக நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர். கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, மே, 10ம் தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. 15ம் தேதி பூச்சொரிதல் விழாவும், 17ம் தேதி காப்பு கட்டுதலும் நடந்தது. தொடர்ந்து, நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ரிஷபம், புலி, பூத வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், கஜலட்சுமி வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில், ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. கடந்த, 24ம் தேதி எதிர்காப்பு கட்டுதல் நடந்தது. அதை தொடர்ந்து, கடந்த, மூன்று நாட்களாக தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
வைகாசித் திருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா, நேற்று மாலை, 4 மணிக்கு துவங்கியது. அம்மன் மற்றும் கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின், மாலை, 5.15 மணிக்கு கோவில் பூசாரி, கோவிலில் இருந்து கம்பத்தை எடுத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நிறுத்தினார். கோவிலில் இருந்து, ஜவகர் பஜார் தெரு வழியாக ஊர்வலமாக கம்பம் கொண்டு செல்லப்பட்டு, இரவு அமராவதி ஆற்றில் விடப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து, எட்டு நாட்களுக்கு புஷ்ப வாகனம், கருட வாகனம், மயில் வாகனம், கிளி வாகனம், வேப்பமர வாகனம், பின்னமர வாகனத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். புஷ்ப அலங்காரம், பஞ்ச பிரகாரம், புஷ்ப பல்லக்கு, ஊஞ்சல், அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி, அமராவதி ஆற்றில் வாண வேடிக்கை நடந்தது. உள்ளூர் விடுமுறை என்பதால், மளிகை, மருந்து கடைகள், ஒரு சில ஹோட்டல்கள் மட்டும் செயல்பட்டன. கம்பம் விடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, 100க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.