பதிவு செய்த நாள்
29
ஆக
2015
11:08
கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான் புராண கதையை நினைவுபடுத்தும் வகையில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதுரை வைகை அணையில் ஏற்பட்ட உடைப்பினை சரிசெய்ய, பாண்டிய மன்னன் பொதுமக்களில் ஒவ்வொருவரும் வந்து கரையை அடைக்க ஆணையிட்டான். அதில், வந்தி அம்மை என்ற வயது முதிர்ந்த பெண்மணிக்கும் கரையை அடைக்க மன்னனின் ஆணை இருந்தது. இப்பெண்மணியால் வேலை செய்ய முடியவில்லை.இப்பெண்மணிக்கு உதவி செய்ய, சிவபெருமான் கூலி ஆளாக வந்து, வந்தி அம்மையிடம் கூலியாக பிட்டு உணவை உண்டு விட்டு வேலைக்கு சென்றதாக புராண கதை உள்ளது. இக்கதை, ஆவணி மூலநட்சத்திரத்தில் நடந்ததால், அதனை நினைவுபடுத்தும் வகையில், கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், வாணியர் சமூக நலச் சங்கம் சார்பில், சிறப்பு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. அதில், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், குங்குமம், அரிசி மாவு போன்றவைகளால் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவலோநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் சிவலோகநாதருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ மூர்த்தி சப்பரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.