சூரசம்ஹாரம் என்பது சூர பதுமனுக்கு மட்டும் நடந்த நிகழ்ச்சி என்று கொள்ளக் கூடாது. ஒவ்வொரு மனிதனிடமும் தோன்றும் சூரத்தன்மையை அழிப்பதையே இது குறிக்கிறது. ஆறு நாட்கள் முருகனைத் தொழுவதால் நம் உள்ளத்தில் இருக்கும் அழுக்கு நீங்கி ஆறாவது நாள் நம்மிடம் குடிகொண்டிருக்கும் சூரத்தன்மை அறவே ஒழிந்துவிடும். முருகன் சூரனுடன் பதினெட்டு வருடங்கள் போர் புரிந்தான். அவனால் ஒருநாளில் சூரனை அழித்துவிட்டிருக்க முடியும். பதினெட்டு வருடங்கள் அவன் திருந்த முருகன் வாய்ப்பு அளித்தான், தன் காட்சியையும் அவனுக்குக் காட்டிக் கொண்டே இருந்தான். ஒரு வகையில் சூரன் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றுகிறது!
காவேரிக்குப் போகிறவன் முதலில் தன் கையை அந்த நீரில் கழுவிக் கொள்வான். பின்பு தண்ணீர் குடிப்பான். கழுவுவதற்கு வேறு தன்ணீர் வேண்டும் என்பது இல்லை. அது போல் முருகப் பெருமானுடைய சந்நிதிக்குச் சென்றால் முதலில் நம்முடைய பற்றுக்கள் போய்விடும். பிறகு அவன் திருவருளால் இன்பம் அடையலாம். நம் பற்றுக்கள் போகவும் அவன் திருவருள் வேண்டும். அழுக்கு இருக்கிறதே என்று அஞ்சி இருக்கக் கூடாது. அவனைச் சரணடைய வேண்டும்.