மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. திங்கட்கிழமை சிவனுக்குரிய சோமவார விரதம் மேற்கொள்வர். இதனை கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிப்பது சிறப்பு. சந்திரன் இந்த விரத பலனால் சோமன் என்னும் பெயரும், சிவனின் தலையில் இடம்பெறும் பாக்கியமும் பெற்றான். இந்த விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையில் நீராடி, சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வர். அந்தண தம்பதியரை வீட்டுக்கு அழைத்து சிவபார்வதியாக பாவித்து வழிபாடு நடத்துவர். அவர்களுக்கு உணவளித்த பின் உண்பர். கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடத்துவது வழக்கம். 108 அல்லது 1008 சங்குகளை சிவலிங்கம் போல அடுக்கி வைத்து இதனைச் செய்வர். சங்காபிஷேகம் செய்தால் நாட்டிற்கே சுபிட்சம் உண்டாகும். சோமவாரத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த 1008 சங்காபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.