பதிவு செய்த நாள்
11
பிப்
2016
12:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மன்னர்கள் காலத்தில் திருப்புத்தூரைச் சுற்றி இருந்த கோட்டையின் வட மேற்கு மூலையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருந்தது. கோட்டை சிதைந்த பின்னும், இக்கோயில் மக்களின் வழிபாட்டில் பல நூற்றாண்டுகளாக உள்ளது. இக்கோயிலுக்கு தற்போது புதிய ராஜகோபுரம்,விமானம், சுவாமி விக்ரம், உற்சவருக்கான திருப்பணி நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை முத்துபட்டர், சுதர்சன பட்டர் உள்ளிட்ட பட்டர்களால் பிப்.8 காலை வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. மாலையில் யாகசாலை பிரவேசித்து,வேத,திவ்ய,பிரபந்த பாராயணங்கள், அக்னி ஆராதனம், ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. யாகசாலையிலிருந்து, காலை 9.35 மணிக்கு கோபுர,விமானங்களுக்கு புனித நீர் கலசங்களுடன் பட்டர்கள் புறப்பாடு நடந்தது.
காலை 9.50 மணிக்கு கோபுர,விமானங்களில் புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வீர ஆஞ்சநேயர் சுவாமி பிரதிஷ்டையும், பின்னர் விசேச திருவாராதனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாட்டினை திருப்பணிக்குழுத் தலைவர் ரெனா.துரைசிங்கம்பிள்ளை, துணைத் தலைவர்கள் ரெனா.ராமலிங்கம்பிள்ளை,நா.ஆறு.தங்கவேலு பிள்ளை, செயலாளர் என்.ராஜகோபால், இணைச் செயலர் ஆறு.நா. ராமேஸ்வரன், துணைச் செயலர்கள் மருது.சரவணன்,உதய.சண்முகம், பொருளாளர் ஆர்.வி. கே.எஸ்.சண்முகம் ஆகியோர் செய்தனர்.