திருத்தணி: மாத்தம்மன் கோவிலில் நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். திருத்தணி அடுத்த, செருக்கனுார் ஊராட்சிக்குட்பட்ட ராஜூலுகண்டிகை அருந்ததி காலனியில், மாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த, 10ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று அம்மன் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட பூ கரகத்துடன், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.