திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் அருள்புரியும் கண்ணனின் விக்கிரகம், நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கேரள மாநிலம் குருவாயூர் உன்னிகிருஷ்ணன், பாதாள அஞ்சனம் மற்றும் மூலிகையினால் உருவானவர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோவிலில் எட்டு யானைகளுடனும், எட்டு நாகங்களுடனும் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் சந்தான கோபாலன்.
அம்பலப்புழா கிருஷ்ணன், திருப்பணித்துரா வேணுகோபால சுவாமி, குருவாயூர் உன்னி கிருஷ்ணன் சிலைகளை மகாவிஷ்ணுவே உருவாக்கினார். இந்த மூன்று கோவில்களிலும் பிரசாதம், பால் பாயசம்தான். குஜராத் மோட்ச துவாரகையில் உள்ள கிருஷ்ண பகவானுக்கு, மணிக்கு ஒருமுறை உடை மாற்றுகிறார்கள். ஒருநாளில் 17 முறை நைவேத்யம் செய்கின்றனர்.
குஜராத் பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோவில் குருக்கள், காலில் தண்டை அணிந்து, சேலை கட்டி கிருஷ்ணனுக்குப் பூஜை செய்வது வழக்கம். வேறெங்கும் காண்பதற்கரிய வைபவம் இது.