அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தை பசுமை வனமாக்க கோயில் இடத்தில் 500 மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடக்கின்றன. இவற்றில் 10 நாட்கள் நடக்கும் சித்திரை, ஆடித்திருவிழாவில் சுவாமியை தரிசிக்க வரும் வெளியூர் பக்தர்கள் கோயில் வளாக பகுதியில் தங்குகின்றனர்.மலை அடிவாரமான கோயில் கோட்டை வாசல் முதல் கோயில் நிர்வாகம் பள்ளிக்கூடம் வரை ஏராளமான மா, வேம்பு, நாவல் போன்ற மரங்கள் இருந்தன. இவை பல ஆண்டுகளுக்கு முன் வெயிலில் கருகின. இதனால் திருவிழாவின் போது கோயிலில் தங்கும் பக்தர்கள் நிழல் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பக்தர்கள் வசதிக்காகவும், கோயில் வளாகத்தை பசுமை வனமாக்கவும் மாற்றுவதற்காக கோட்டை வாசல் முதல் கோயில் வரை வடக்கு பகுதியில் உள்ள 7 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான 500 மரக்கன்றுகளை கோயில் நிர்வாகத்தினர் வைத்து, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பராமரித்து வருகின்றனர். மேலும் 200 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளனர். இதேபோல் தேர் வலம் வரும் பகுதி முழுவதும் மரக்கன்றுகளை வைத்து பராமரித்தால் கோயில் வளாகம் சோலை வனமாக மாறும்.