பதிவு செய்த நாள்
27
ஆக
2016
11:08
திருப்பூர் ;"கோவிந்தா... கோபாலா... கோஷம் முழங்க, திருப்பூரில், நம்பெருமாள் திருவீதியுலா வந்தார். திருப்பூர், ராயபுரம் பூமிநீளா சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், 22ம் தேதி துவங்கியது. சத்யசாயி சமிதி குழுவின் பஜன், திருப்பாவை இன்னிசை, செம்பை வித்யாபீடம் மாணவியரின் இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு என தொடர்ந்து நடந்த விழாவில், நேற்று, ஜெயந்தி உற்சவம் நடந்தது. காலையில், மூலவர் வேணுகோபாலகிருஷ்ண சுவாமிக்கு, சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில், உற்சவர் நம்பெருமாள் வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த சிறுவர், சிறுமியர் சூழ, பெண்கள் கோலாட்டம் இசைத்தனர்.ந ம்பெருமாள் திருவீதியுலா புறப்பாடு துவங்குகையில், வருணபகவான், தூறல் மழை பொழிந்து அபிஷேகம் செய்தார். பக்தர்கள், "கோவிந்தா, கோபாலா என, பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.தொடர்ந்து, கோவில் முன்புறம் உறியடி விழா நடந்தது. கிருஷ்ணர் வேடம் அணிந்தவர், உறியடி உற்சவம் கோலாலகமாக நடந்தது. அதன்பின், தீபாராதனை நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம்; 11:00 மணிக்கு அன்னதானத்துடன் விழா நிறைவடைகிறது.