கீழக்கரை: சிவாலயங்களில் நிராகரிக்கப்படும் தாழம் பூ, உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் மட்டும் மூலவர் மங்களநாதருக்கு சூடப்பட்டு வருவது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சிவன் கோயில்களில் ஒன்று உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில். இங்கு மூலவர் மங்களநாதருக்கு சுகந்த மணம் பரப்பும் தாழம் பூ சூடப்பட்டு வருகிறது. பொதுவாக சிவன் கோயில்களில் தாழம் பூ பயன்படுத்துவதில்லை. ஆனால் மங்களநாதருக்கு உகந்ததாக தாழம் பூ கருதப்படுகிறது. இதனால் உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் மட்டும் பூஜை பொருட்களில் தாழம் பூ தவறாமல் இடம்பெறுவதுண்டு. இதுகுறித்து கோயில் ஸ்தானிக குருக்கள் கூறியதாவது: ஜோதி பிழம்பான சிவபெருமானின் அடிப்பகுதியை காண மகாவிஷ்ணு, வராகமூர்த்தி அவதாரத்தில் பூமியை தோண்டி பார்த்தார். தலை பகுதியை பிரம்மன் ஆகாயத்தில் பறந்தவாறு தேடினார். அப்போது கீழ்நோக்கி பறந்து வந்த தாழம்பூவிடம், சிவனின் முடியை கண்டதாக தெரிவிக்குமாறு பிரம்மன் கூறியுள்ளார். இதனால் ஆதியும், அந்தமும் இல்லாத சிவனின் கோபத்திற்கு ஆளாகினர் பிரம்மாவும், தாழம்பூவும். கோயில் முன்புள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் பிரம்மனுக்கு சாபவிமோசனம் அளிக்கப்பட்டது. தாழம் பூவிற்கு மங்களநாதரின் திருமேனியில் இடம்பெற உத்தரவும் வழங்கப்பட்டது. இதனால் தான் உத்தரகோசமங்கை சிவன் கோயிலில் மட்டும் மூலவர் மங்களநாதருக்கு தாழம் பூ சூடப்படுகிறது. இவ்வாறு புராணங்களில் இடம்பெற்றுள்ள இக்கோயிலின் வரலாற்று சிறப்பை, இங்குவரும் பக்தர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர், என்றார்.