பைபிள் எனப்படும் வேதாகமம், தேவன் ஆதியிலே உலகத்தைப் படைத்த போது, படைப்பின் தன்மையையும், அவற்றிலுள்ள அணுக்களின் அமைப்பு எப்படிப்பட்டதாக இருந்தது என்பன போன்ற தகவல்களையும் அலசி ஆராய்ந்து விவரிக்கும் புத்தகமல்ல. தேவனுடைய ஒட்டு மொத்தமான ரட்சிப்பின் (மன்னிக்கும்) திட்டத்தை ஒவ்வொரு சந்ததியும் விளங்கிக் கொள்ளும்படியான தகவல்களை உள்ளடக்கியது. வேதாகமத்தில் உள்ள வெவ்வேறு பகுதிகளை பல கால கட்டங்களில், பல பின்னணிகளில் வாழ்ந்த 40 வெவ்வேறு மனிதர்கள் எழுதியுள்ளனர். அவர்களில் தாவீது என்ற ராஜா, ஆமோஸ் என்ற மேய்ப்பர், தானியேல் என்ற உயர் பதவியில் இருந்த அதிகாரி, பேதுரு என்ற மீன்பிடிப்பவர் ஆகிய சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எழுதியிருக்கும் தகவல்கள், ஒரே மையக்கருத்தைக் கொண்டவை. அந்த கருத்து என்னவென்றால், தேவன் மக்களை பாவங்களிலிருந்து மீட்கும் ரட்சிப்பின் திட்டமே ஆகும்.ஒரு புத்தகத்தை பலர் எழுதும் போது மாறுபட்ட கருத்துக்களே இருக்க முடியும். ஆனால், வேதாகமம் ஒரே மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் அதை எழுதியவர்கள் ஒரே உள்ளுணர்வையும், ஒரே மாதிரியான சிந்தனையையும் பெற்றிருந்தார்கள் என்பது தான். இவற்றை அவர்களுக்கு தந்து எழுத வைத்தவர் ஆண்டவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும், வேதத்தை எழுதியவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் இல்லை. 1,500 ஆண்டுகால இடைவெளியில் வாழ்ந்தவர்கள், இவ்வளவு நீண்ட இடைவெளியில் எழுதப்பட்ட புத்தகமாக இருந்தாலும், அது ஒரே மையக் கருத்தை கொண்டிருக்க மற்றொரு காரணம் அதை எழுதிய ஒவ்வொருவருக்கும் தேவன் அருளியிருந்த ஒரே மாதிரியான வெளிப்படுத்தலே ஆகும். பைபிள், அறிவை விருத்தியடையவும், வாழ்க்கையை மாற்றமடையச் செய்வதாகவும் இருக்கிறது.