Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
9. பீடிகைகண்டு பிறப்புணர்ந்த காதை 11. பாத்திரம் பெற்ற காதை
முதல் பக்கம் » மணிமேகலை
10. மந்திரங் கொடுத்த காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2011
03:11

பத்தாவது மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி மந்திரங் கொடுத்த பாட்டு

அஃதாவது: மணிமேகலையை மணிபல்லவத்திடை வைத்து நீங்கிய மணிமேகலா தெய்வம் அவள் மாமலர்ப் பள்ளியினின்றும் துயிலுணர்ந்து மருட்கையாலே பெரிதும் வருந்தி எழுந்து யாங்கணும் திரிபவள் தந்தையை உள்ளி ஐயாவோ என்று அழுது புலம்புங்கால் தன் கண்ணுக்குத் தோன்றிய மாமணிப் பீடிகையைக் கண்டு தன்னையும் மறந்து அதனை வலஞ்செய்து வீழ்ந்து வணங்கி எழுந்த பொழுது தனது பழம்பிறப்புணர்ச்சியோ டெழுந்தாளன்றே; எழுந்தவள் முற்பிறப்பில் காயங்கரை என்னுமிடத்துப் பிரமதத்தன் கூறியவை எல்லாம் வாய்மையாதல் கண்டு அவளை முன்னிலைப்படுத்து அவன் உரைத்தவை எல்லாம் உரைத்து, யான் பழம் பிறப்புணர்ந்துழி மாபெருந் தெய்வம் வந்து உனக்குப் பேருதவி செய்யும் என்றாயன்றே! அத் தெய்வம் வந்திலதே என் செய்கோ? என்று அழுபவள் முன்னர் மணிமேகலா தெய்வம் தோன்றி அவள் மேற் கொள்ளும் அருளறம் முட்டின்றி நடைபெறுதற்கு இன்றியமையாத மந்திரஞ் சிலவற்றைச் செவியறிவுறுத்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலா தெய்வம் வந்தவுடன் மணிமேகலைக்கு அப்  பீடிகையே நங்கடவுள் என்றுணர்த்தற் பொருட்டு அதனைப் புகழந்தேத்தி வணங்குதலும்; மணிமேகலை அத் தெய்வத்தைத் தன் கணவனாகிய இராகுலன் எங்குளன் என்று வினாதலும், அத் தெய்வம் முற்பிறப்பிலே இலக்குமியாகி இராகுலனோடு இல்லறம் நிகழ்த்துங்கால் மணிமேகலை சாதுசக்கரன் என்னும் துறவோனை உண்டி கொடுத்து வழிபாடு செய்தமையும் அதனாலாம் பயனும் அம் முற்பிறப்பிலே மாதவியும் சுதமதியும் அவட்குடன் பிறந்தாராயிருந்தமையும் இப் பிறப்பில் மணிமேகலைக்கு அவர் தாயும்தோழியுமாயிருப்பதுவும்; இனி எதிர்காலத்தே நிகழவிருப்பனவும் இனிதின் அறிவுறுத்தலும் பின்னர் மந்திரங்களைச் செவியறிவுறுத்தலும் பிறவும், அழகாகக் கூறப்படுகின்றன.

அறவோன் ஆசனத்து ஆய் இழை அறிந்த
பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என
விரை மலர் ஏந்தி விசும்பூடு இழிந்து
பொரு அறு பூங் கொடி பூமியில் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்
முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப
உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி
பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு இழந்த
வறம் தலை உலகத்து அறம் பாடு சிறக்கச்
சுடர் வழக்கு அற்றுத் தடுமாறுகாலை ஓர்  10-010

இள வள ஞாயிறு தோன்றியதென்ன
நீயோ தோன்றினை நின் அடி பணிந்தேன்
நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம்
நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை ஏற்றினேன் புலம்பு அறுக என்றே
வலம் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்ப்
பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி
உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்
என் பெருங் கணவன் யாங்கு உளன்? என்றலும்
இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு  10-020

புலத்தகை எய்தினை பூம்பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல் இயல் மலர் அடி வணங்குழி
சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெரு மரல் ஒழித்து ஆங்கு இரத்தினத் தீவத்துத்
தரும சக்கரம் உருட்டினன் வருவோன்
வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின்
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல் இயல்! கண்டனை மெய்ந் நடுக்குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச  10-030

இராகுலன் வந்தோன் யார்? என வெகுளலும்
விரா மலர்க் கூந்தல்! அவன் வாய் புதையா
வானூடு இழிந்தோன் மலர் அடி வணங்காது
நா நல்கூர்ந்தனை என்று அவன் தன்னொடு
பகை அறு பாத்தியன் பாதம் பணிந்து ஆங்கு
அமர! கேள் நின் தமர் அலம் ஆயினும்
அம் தீம் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாம் உன் குறிப்பினம் என்றலும்
எம் அனை! உண்கேன் ஈங்குக் கொணர்க என
அந் நாள் அவன் உண்டருளிய அவ் அறம் 1  10-040

நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்
உவவன மருங்கில் உன்பால் தோன்றிய
உதயகுமரன் அவன் உன் இராகுலன்
ஆங்கு அவன் அன்றியும் அவன்பால் உள்ளம்
நீங்காத் தன்மை நினக்கும் உண்டு ஆகலின்
கந்தசாலியின் கழி பெரு வித்து ஓர்
வெந்து உகு வெங் களர் வீழ்வது போன்ம் என
அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர்
திறப்படற்கு ஏதுவா சேயிழை! செய்தேன்
இன்னும் கேளாய் இலக்குமி! நீ நின்  10-050

தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்
ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்
அவருடன் ஆங்கு அவன் அகல் மலை ஆடி
கங்கைப் பேர் யாற்று அடைகரை இருந்துழி
மற வணம் நீத்த மாசு அறு கேள்வி
அறவணன் ஆங்கு அவன்பால் சென்றோனை
ஈங்கு வந்தீர் யார்? என்று எழுந்து அவன்
பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்  10-060

ஆதி முதல்வன் அற ஆழி ஆள்வோன்
மா துயர் எவ்வம் மக்களை நீக்கி
விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி
உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்து உக
தொன்று காலத்து நின்று அறம் உரைத்த
குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்
பாத பங்கயம் கிடத்தலின் ஈங்கு இது
பாதபங்கய மலை எனும் பெயர்த்து ஆயது
தொழுது வலம் கொள்ள வந்தேன் ஈங்கு இப்
பழுது இல் காட்சியீர்! நீயிரும் தொழும் என  10-070

அன்று அவன் உரைத்த அவ் உரை பிழையாது
சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல்! நின்னொடு கூடினர்
அறிபிறப்பு உற்றனை அறம் பாடு அறிந்தனை
பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை
பல் வேறு சமயப் படிற்று உரை எல்லாம்
அல்லி அம் கோதை! கேட்குறும் அந் நாள்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உரு எய்தவும்  10-080

அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந் திறல்
மந்திரம் கொள்க என வாய்மையின் ஓதி
மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள்
பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன்
திருவறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ
மன் பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி
நின் பதிப் புகுவாய் என்று எழுந்து ஓங்கி
மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து
சிறந்த கொள்கைச் சேயிழை! கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்  10-090

இப் பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று
ஆங்கு அது கொடுத்து ஆங்கு அந்தரம் எழுந்து
நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என்

உரை

தனிமைத்துயராலே தெய்வத்தின் வரவு காணாமல் அழுது
நிற்கும் மணிமேகலை காணும்படி மணிமேகலா தெய்வம்
வானத்தினின்றும் மலர் ஏந்திய கையளாய் இறங்கி
வந்து மலர்தூவி மணிமேகலை கேட்கும் வண்ணம் புத்த
பீடிகையைப் பரவிப் பணிந்து ஏத்தல்

1-12: அறவோன்.............பணிந்தேன்

(இதன் பொருள்) அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் பெற்றியும் ஐது என-புத்த பெருமானுடைய இருக்கையாகிய பீடிகையைக் கண்டு கை தொழுது வணங்கினமையாலே மணிமேகலை நல்லாள் தன் பழம் பிறப்பை அறிந்தவளாயினள் இனி, மேலே நன்னெறிக்கண் செல்லுதற் கியன்ற பழவினையாகிய ஏதுவும் நன்கு முதிர்ந்து அவள் பண்பும் அழகிதாயிருக்கின்றது என மகிழ்ந்து, விரை மலர் ஏந்தி-கைகளிலே பீடிகைக்குப் பலிதூவுதற்குரிய நறுமணங் கமழும் மலர்களை ஏந்திக்கொண்டு; விசும்புஊடு இழிந்து- மணிமேகலை கண்காண வானத்துள்ளிருந்து இறங்கி; பொருவு அறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென வந்து தோன்றிய-ஒப்பற்ற காமவல்லி என்னும் வானநாட்டுப் பூங்கொடி ஒன்று நிலவுலகத்திலிறங்கிப் பொலிந்து தோன்றுமாறு போலே மணிமேகலையின் பக்கலிலே வந்து தோன்றிய; மணிமேகலா தெய்வம் முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப-மணிமேகலா தெய்வமானது தனது பழம்பிறப் புணர்ச்சி கைவரப் பெற்றமையால் தன்வரவினை எதிர் பார்த்து அழுது நிற்கும் அம் மணிமேகலை கேட்கும்படி, பீடிகையை நோக்கிக் கை தொழுது கூறுபவள்; உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து அறிவு இழந்த வறந்தலை உலகத்து-எந்தையே! இந் நிலவுலகத்திலே வாழுகின்ற மாந்தரெல்லாம் தமக்குரிய நல்லுணர்வு அழியப் பெற்று உறுதிப் பொருள்கள் புகும் வழியாகிய அவர்தம் செவித்துளை யெல்லாம் தீ மொழிகள் செறிந்து தூர்ந்து போதலாலே மெய்யறிவினை இழந் தொழிந்தமையால் மெய்யறிவின் திறத்திலே வற்கடமுற்றுக் கிடந்த இந்நிலவுலகத்திலே; அறம் பாடு சிறக்க மீண்டும் அந் நல்லறம் தனக்குரிய பெருமையோடு சிறந்து தழைக்கும்படி; சுடர் வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன-ஞாயிற்று மண்டிலம் தோன்றாமலொழிந்து போதலாலே உயிர்கள் நெறியறியாது தடுமாற்றமுறுகின்ற பொழுது ஒப்பற்ற இளஞாயிறு குணகடலினின்றுந் தோன்றினாற் போலே; நீ தோன்றினை; துடிதலோகம் ஒழிய நீ வந்து பிறந்து இவ்வுலகத்தை உய்யக் கொண்டனை யல்லையோ! நின் அடி பணிந்தேன்-நின் மலர் அடிகளில் இம்மலர்களை இட்டுப் பணிகின்றேன் காண்! என்றாள் என்க.

(விளக்கம்) இது மணிமேகலா தெய்வம் மணிமேகலையை நன்னெறிப்படுத்தும் குறிக்கோள் உடையதாகலின் ஈண்டுத் தமக்குத் தெய்வம் புத்த பெருமானே என்றும், அத் தெய்வத்தைப் பீடிகையாகிய அவனுடைய அறிகுறியை அவனாகவே மதித்து இவ்வாறு வாழ்த்தி வணங்குதல் வேண்டும் என்றும் அறிவுறுத்தற் பொருட்டு அதனை வாயாற் கூறாமல் தனது செயலாலே அறிவுறுத்திய படியாம்.

மக்கட்கு நல்லறிவு கொளுத்தும் நல்லாசிரியன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவனாயினும் தனது சொல்லாலே அறிவுறுத்துதலினுங் காட்டில் தனது ஒழுக்கத்தாலே அறிவுறுத்துதலே தலைசிறந்த வழியாகும் என்பதனை ஈண்டு இம் மாபெருந் தெய்வத்தின் செயலே அறிவுறுத்துதலறிக.

உலகத்தில் அறவொழுக்கம் தலைதடுமாறும்பொழு தெல்லாம் அறவோர் தோன்றி இவ் வுலகத்தை மீண்டும் அறந்தலை நிறுத்துவர் என்பது பல சமயத்தார்க்கும் ஒப்ப முடிந்தொரு கொள்கையாம். அதற்கிணங்கவே ஈண்டுப் புத்தருடைய பிறப்பு நிகழ்ச்சியையும் இத் தெய்வம்-உயிர்கள் எல்லாம்...........நீயோ தோன்றினை! என்று பாராட்டுதலும் அறிக. பௌத்த சமயத்தவர் உலகம் அநாதியாக உள்ளது அதன்கண் ஆருயிரை அறஞ் செவியறிவுறுத்திய புத்த பெருமானே இறைவன் ஆவான் என்னும் சித்தாந்த முடையவராவார். அப் புத்த பெருமானைப் பீடிகையிற் கண்டு பீடிகையை அவனாகவே கருதி வழிபாடு செய்தல் வேண்டும் என்பது அவர்தம் பிடகநூல் காட்டும் நெறியாம். இதனை, மேலே நீயேயாகி நிற்கமைந்த இவ்வாசனம் என இத் தெய்வம் கூறுமாற்றானுணர்க.

இனிப் பௌத்தர்கள் புத்த பெருமானையே கடவுளாகக் கருதுபவர் என்பதனை

முற்றுணர்ந்து புவிமீது கொலை முதலா
கியதீமை முனிந்து சாந்த
முற்றிருந்து கருணையினாற் பரதுக்க
துக்கனா யும்ப ரோடு
கற்றுணர்ந்த முனிவரருங் கண்டுதொழப்
பீடகநூல் களிவான் முன்னம்
சொற்றிருந்த வுரைத்தருளுந் தோன்றலே
கடவுள்அருட் டோன்ற லாவான்

எனவரும் மெய்ஞ்ஞான விளக்கத்தானும்(32-புத்த.சருக்கம்) உணர்க. ஈண்டு மணிமேகலா தெய்வம் சொல்வனவும் செய்வனவும் மணிமேகலை கண்டும் கேட்டும் அறிந்து கொள்ளற் பொருட்டேயாம் என்பது முந்தைப் பிறப்பெய்தி நின்றோள்கேட்ப என்றமையாற் பெற்றாம்.

சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலை ஞாயிறு தோன்றிய தென்ன என்னும் உவமை இல்பொருளுவமையாம். என்னை? சுடர் வழக்கறுதல் எஞ்ஞான்று மின்மையின்.

நீயோ தோன்றினை என்புழி ஓகாரம் பிற கடவுளர் அவ்வாறு தோன்றினாரிலர் எனப் பொருள் கொள்ளின் பிரிநிலையாம்; வாளாது அசைநிலை என்னலுமாம்.

இதுவுமது

13-16: நீயே........முன்னர்

(இதன் பொருள்) நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் ஆசனம் நாமிசை வைத்தேன்- பெருமானே எம்மனோர்க்கு நீயாகவே காட்சி தருகின்ற நீ இருந்தற முரைத்தற் கமைந்த இத் தரும பீடிகையை யான் இடையறாது வாழ்த்துமாற்றால் எனது நாவின்மேலேயே வைத்திருக்கின்றேன்; தலை மிசைக் கொண்டேன் தலையாலே வணங்குமாற்றால் எஞ்ஞான்றும் என்தலைமேலும் தாங்கியிருக்கின்றேன்; பூமிசை ஏற்றினேன்-என் உள்ளத் தாமரைப்பூவில் இடையறாது நினையுமாற்றால் எழுந்தருளவும் செய்துள்ளேன்; புலம்பு அறுகு என்றே-அஃது எற்றுக்கெனின் துன்பத்திற் கெல்லாம் காரணமாயிருக்கின்ற என் பவத்திறம் அற்றொழிவேனாதற் பொருட்டே என்று சொல்லி; வலங்கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர்- வலம் வந்து அத் தரும பீடிகையை வணங்கி வழிபாடு செய்கின்ற அம் மணிமேகலா தெய்வத்தின் முன்பு என்க.

(விளக்கம்) இதனால் மனமொழி மெய்களாகிய முக்கருவிகளாலும் புத்த பெருமானை வழிபாடு செய்யும் மரபு அறிவுறுத்தமை அறிக. இவ்வாறு வணங்கும் மரபினை மும்மையின் வணங்கி எனப் பிறாண்டும் (பவத்திற மறுகென.......3) கூறுதலாலறிக.

பூ- நெஞ்சத் தாமரைப்பூ புலம்பு: ஆகுபெயர்; பிறவிப்பிணி அறுகு-அறுவேன். வணங்குவோள்-வணங்கும் தெய்வம்.

மணிமேகலை மணிமேகலா தெய்வத்தை வணங்கி வினவுதலும் அத் தெய்வம் விடை கூறுதலும்

17-23: பொலங்கொடி....வணங்குழி

(இதன் பொருள்) பொலம் கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி-அவ்விடத்தே அத் தெய்வத்தின் வரவு பார்த்து நின்ற மணிமேகலை தன் வழிபாட்டை முடித்தெழுந்த மணிமேகலா தெய்வத்தின் திருவடிகளிலே பொற்கொடி ஒன்று நிலத்தின் மேலே வீழ்ந்து கிடப்பது போலே வீழ்ந்து வணங்கி எங்கள் குல தெய்வமே நீயே எளிவந்து என்னை இத் தீவினிடை இட்டனை ஆதலால்; உன் திரு அருளால் என் பிறப்பு உணர்ந்தேன்- நின்னுடைய திருவருளாலே இப் புத்த பீடிகையைக் கண்டு தொழுது அடிச்சி என்னுடைய பழம்பிறப்பினை உணர்ந்து கொண்டிருக்கின்றேன்!; என் பெருங் கணவன் யாங்கு உளன் என்றலும்-என் முற்பிறப்பிற் கணவனாயிருந்து திட்டி விடத்தாலிறந்து போயவன் இப்பொழுது இருக்கின்றனன் இதனை எனக்கறிவித்தருளுக! என்று வேண்டா நிற்றலும்; இலக்குமி கேளாய்- இலக்குமியே கேள்!; இராகுலன் தன்னொடு பூம் பொழில் அகவயின் புலத்தகை எய்தினை-நீ தானும் நின் கணவனொடு கூடிக் களித்து வாழுங்காலத்தே ஒரு நாள் பூம் பொழிலிடத்தே சென்று அவனோடாடிய நீ சிறிது ஊடல் கொண்டு அவனுக்கு முகங்கொடாயாயினை; இடங்கழி காமமொடு அடங்கானாயவன்- நின் கணவன் பணிமொழி பல கூறி ஊடலுணர்த்தியும் நீ உணராது பின்னும் ஊடுதலாலே நின்பாற் கொண்ட மிகப் பெரிய காமம் காரணமாக நின் சினத்திற்கு அடங்கானாகியவன்; மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி- மடந்தாய்! நின்றுடைய மெல்லியல்புடைய மலர் போன்ற அடிகளிலே வீழ்ந்து வணங்கும் பொழுது, என்க.

(விளக்கம்) பொலம் கொடி- பொன்னிறமான காமவல்லி என்னும் மலர்க்கொடி. இது மணிமேகலைக்குவமை. தான் அத் தீவிற்கு வந்ததும் பீடிகை கண்டு தொழுதலும் பழம்பிறப் புணர்ந்ததும் எல்லாம் அத் தெய்வத்தின் அருள் காரணமாக எய்திய நலங்களே என்பாள் உன்திருவருளால் உணர்ந்தேன் என்றாள். என் கணவன் யாண்டுளன் என்று இப்பொழுது நீ எனக்கறிவுறுப்பாய் என்று யான் அறிகுவெனாயினும் அவனிலை அறிய விதுப்புறும் நெஞ்சம் உண்மையால் அதனை இப்பொழுதே கூறியருள்க என்பது தோன்ற என் பெருங் கணவன் யாங்குளன் என்று விதுப்புற்று வினவுகின்றனள்.

 நீ நின் பழம்பிறப்புணர்ந்தமையையும் யான றிகுவன் என்பது மணிமேகலை யுணரும் பொருட்டு மணிமேகலை என்று விளியாது இலக்குமி! என்றே அத் தெய்வம் அவளை விளிப்ப தாயிற்று. அதனைக் கூறுவன் கேள் என்பதுபட இலக்குமி கேளாய் என்று பணித்தது.

புலத்தகை- புலக்குந் தன்மை. ஊடுதல் காமத்திற் கின்பமாதலின் நீ புலத்தகை எய்தினை. அவனுடைய அல்லல் நோய் காண்கஞ் சிறிது என நீ அவன் உணர்த்தவும் உணராயாய் ஊடனீட்டித்தனை; அவ்வழி நீயே ஊடல் தீரும் அளவும் அடங்குதலே அவன் செய்யற்பாற்றாகவும் அங்ஙனம் அடங்கானாய் அவன் நின் மலரடி வணங்கினான், அத்துணைப் பெரிது அவன் நின்பாற் கொண்ட காமம் என்பாள் இடங்கழி காமமொடு அடங்கானாய் என்றாள். இத்துணையும் இடங்கழி காமம் எனப் பாட்டிடை வைத்த குறிப்பினாற் கொண்ட பொருளென்றுணர்க.

மடந்தை: விளி; முன்னிலைப்புறமொழியுமாம்.

சாதுசக்கரன் வரவும், இராகுலன் சினத்தலும்

24-35: சாது........பணிந்தாங்கு

(இதன் பொருள்) சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்- சாதுசக்கரன் என்னும் பெயருடையவனாய் உயர்ந்த வானத்திலே இயங்கி நாடு தோறும் சென்று அறங்கூறும் சாரணன் ஒருவன்; இரத்தின தீவத்து தெருமரல் ஒழித்து- இரத்தினத் தீவிற் சென்று அங்கு வாழும் மாந்தர் மனச்சுழற்சியைத் தனது அறவுரையாலே அகற்றி; ஆங்கு தருமசக்கரம் உருட்டினன் வருவோன்- அத் தீவிலே அறவாழி இடையறாது உருளும்படி செய்து வான்வழியே வருபவன்; வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின் வந்து தோன்றலும்- வெவ்விய வெயில் சுடுகின்ற நண்பகலிலே நீவிர் காமவிளையாட்டயர்ந்த அகன்ற அப் பூம்பொழிலினூடே இழிந்து நுங்கள் முன்பு வந்து தோன்றாநிற்ப; மெல்லியல் கண்டனை மயங்கினை கலங்கி மெய்ந் நடுங்குற்றனை நல்கூர் நுகப்பினை நாணினை இறைஞ்ச- மெல்லியலாகிய இலக்குமியே நீயே அவன் வரவினை முற்படக் கண்டனை உடல் நடுங்கினாய் மயங்கினாய் நெஞ்சு கலங்கினை ஒருவாறு தெளிந்து அம்முனிவனை எதிர் கொண்டு நின் நுண்ணிடை துவள் நாணி வணங்கினாய்; இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும்-இடங்கழி காமத்தாலே நின்னடிக்கண் வணங்கிய இராகுலன் அவன்வரவு தனக்கு இடையூறு விளைத்தலின் இப்பொழுது ஈங்கு வந்தெய்தியவன் யாவன் என்று வெகுண்டு உரப்புதலும்; விரா மலர்க் கூந்தல் விரவிய மலர் அணிந்திருந்த கூந்தலையுடைய நீ பெரிதும் அஞ்சி; அவன் வாய் புதையா வானூடு இழந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்று-அவ்விராகுலனுடைய வாயினை நின்கையாற் பொத்தி வானத்தினின்றும் இழிந்து வருகின்ற இருத்தியுடைய இம்முனிவரை மலரடியிலே வீழ்ந்து வணங்காதொழிந்தது மன்றி நாவினால் இன்சொலியம்பாமல் சிறுமையுற்றனை என்று அறிவுறுத்துப் பின்பு; அவன் தன்னொடு-தன்பிழையுணர்ந்து கொண்ட இராகுலனோடு நீ சென்று; பகை அறு பாத்தியன் காம முதலிய உட்பகை அறுதற்குக் காரணமான புத்தருடைய திருவடிக்கன்பனாகிய அச் சாதுசக்கரனுடைய; பாதம் பணிந்து ஆங்கு-திருவடிகளில் வீழ்ந்து வணங்கியவுடன் என்க.

(விளக்கம்) சாதுசக்கரன் அறவோர் குழுவிலுள்ளோன். என்னை? குழு மண்டலித்துக் குழுமி இருத்தலியல்பாகலின் அதற்குச் சக்கரம் என்பது பெயராயிற்று. எனவே சாதுசங்கத்துள்ளோன் என்ப தாயிற்று. ஈண்டுச் சாதுசங்கம் என்றது பௌத்தரில் துறவோர் கூட்டத்தை. மீவிசும்பு திரிவோன் என்றதனால் இவன் இருத்தி(சித்தி) கை கூடுப் பெற்றவன் என்பது பெற்றாம்; இருத்தி பெற்றவர், நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்தில் திரியும் தெய்வத்தன்மை யுடையராயிருப்பர் என்பது நிலத்திற் குளித்து நெடுவிசும்பேறிச் சலத்திற் றிரியு மோர் சாரணன் தோன்ற என இந் நூலில் வருதலானும்(24-46-7) உணர்க.

இத்தகைய சாரணர் நாடுகள்தோறும் சென்று மக்கட்கு அறஞ் செவியறிவுறுத்துவது வழக்கம். சமண் சமயத்தும் இத்தகைய சாரணர் உளர் என்பது

பெரும்பெயர் ஐயர் ஒருங்கட் னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்ற

எனவரும் சிலப்பதிகாரத்தானும்(10-160-163) தெளிக.

இவரை அந்தரசாரிகள் என்றும்கூறுப. பாசிலைப்போதி அணிதிகழ் நீழலறவோன் திருமொழி அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் என்பர்இளங்கோவடிகளார்; (சிலப்-11-13). இனி அறத்தை ஆழியாக உருவகித்த லுண்டாகலின் அறஞ் செவியறிவுறுத்தலையே சக்கரம் உருட்டுதலாகக் கொண்டு இவனை அறவாழி யுடையோன் என்னும் பொருள்படச் சாது சக்கரன் என்றழைத்தனர் எனினுமாம். இதனை இரத்தினத் தீவத்துத் தரும சக்கர முருட்டினன் வருவோன் என்பது வலியுறுத்துதலுணர்க.

இனி, பௌத்தத் துறவோர் ஓம் மணிபத்மே கூஉம் என்ற மறை மொழி பொறித்த வட்டவடிவமாகப் பொன்னாற் செய்யப்பட்ட சக்கரத்தைக் கையிற் கொண்டுருட்டும் வழக்க முடையோராதலின், இவனும் அச்சக்கரத்தை உருட்டுபவனாய் வருபவன் எனினுமாம் என்பாருமுளர் தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர் எனப் பிறாண்டுளம் ஓதுதல் போன்று ஈண்டும் விசும்பு திரிவோன் என்றமையாது,மீவிசும்பு திரிவோன் என்றார். இரத்தின தீவம் மணிபல்லத்திற்கு அணித்தாகிய மற்றொரு தீவு. சாது சக்கரன் நிலத்திலிழிந்தமைக்குக் குறிப்பாக ஏதுக் கூறுவார் வெங்கதிரமையத்து வியன்பொழி லகவயின் வந்து தோன்றலும் என்றார்.

நின் கணவன் நின் அடியில் வீழ்ந்து வணங்கும் செவ்வியில் அச்சாது சக்கரன் வந்துற்றமையால் செய்வதறியாது மயங்கினை, கலங்கி மெய்ந்நடுக்குற்றனை, நாணினை என்று அத் தெய்வம் கூறியபடியாம்.

இனி, நின் கணவன் இடங்கழி காமமுடையனாய் நின்னூடல் தீர்க்குஞ் செயலுக்கு இடையூறாக விருந்தமையால் வெகுண்டு இன்னாச் சொல் கூறி உரப்பினன் என்பாள் இராகுலன் வந்தோன் யாரென வெகுளலும் என்றாள். இதனால் காமவெகுளி மயக்கங்களின் புன்மையை இத் தெய்வம் எடுத்துக் காட்டிய நுணுக்கமும் ஈண்டு நினைக.

மலரடி வணங்குதற்கு நீ ஏதுக்காட்டுவாய் வானூடிழிந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்றவாறு. இன் சொல்லே நாவிற்கியன்ற செல்வம் ஆதலின் அது கூறி வரவேலாததூஉமன்றி வந்தோன் யார் என இன்னாச்சொல் இயம்பி நின் நாவினது வறுமையைக் காட்டினை என்று நீ நின் கணவனை அறிவுறுத்தினை என்றவாறு. பாத்தியன் என்பது அடியவன் என்னும் பொருளுடையது. திருவாதவூர்ச் சிவபாத்தியன் எனவரும் நம்பியாண்டார் நம்பி வாக்கிற்கும் சிவனடியான் என்பதே பொருள் என்க. பகையறு பாதத்திற்கு அன்பன் என்பாள் பகையறு பாத்தியன் என்றாள். பகையறுபாதம் என்றது புத்தர் திருவடியை. பகை காம முதலியன.

இனி, இலக்குமி மெய்ந்நடுக்குறுதல் இறைபொருளாகப் பிறந்த அச்சம் என்னும் மெய்ப்பாடு.

இராகுலனுக்குத் தன் கருத்து நிறைவேறுதற்கு இடையூறாகத் தோன்றி அலைத்தல் பற்றி வெகுளி பிறந்தது என்க. தன் மனைவி இறைஞ்சக் கண்டு வெகுளி பிறந்ததெனின் மனைவியையே வெகுள்வான்மன். என்னை? ஈண்டுக் குடிகொன்றவள் இலக்குமியே யாதலின் அக் கருத்துப் போலி என்க.

இதுவுமது

34-41: அமர......அறுத்திடும்

(இதன் பொருள்) அமர கேள்- தேவனே! அடிச்சியின் வேண்டு கோளிதனைக் கேட்டருள்வாயாக! நின் தமர் அலம் ஆயினும்-அடியேங்கள் உனக்குச் சுற்றத்தாராகும் தகுதியுடையேமல்லே மாயினும்; அமுதொடு அம்தீம்தண்ணீர் கொணர்கேம்-உணவினோடு அழகிய இனிய குளிர்நீரும் கொணர்வேம்; உண்டி அவற்றை உண்டருள்க; யாம் உன் குறிப்பினம்-அடியேங்கள் முன்னர் அறியாமையாற் பிழை செய்தேமாயினும். இனிப் பெருமான் குறிப்பின் வழி ஒழுகுவேம், என்று நீ அச் சாது சக்கரனுக்கு இனியன் கூறவே; அவனும் எம் அனை உண்கேன் ஈங்குக் கொணர்க இன் சொல்லால் உள்ளமுருகி எம்மனோர்க்கெல்லாம் அன்னை அனையாய் ஒருதலையாக நீ கொணருபவற்றை யான் உண்பேன் காண்! அவற்றை இங்கே கொண்டு வருவாயாக என்று ஆர்வத்தோடே பணிப்ப, நீயும் கொணர்ந்து அன்புடன் அம்முனிவனை ஊட்டினையல்லையோ!; அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் அக்காலத்தே அச்சாது சக்கரன் நின் உணவை ஏற்று உண்டருளினமையாலே நினக்கெய்திய நல்வினை; நின் ஆங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்-அப் பிறப்பிலேயே நின்னிடத்தினின்றும் ஒழியாமல் இப் பிறப்பினும் தொடர்ந்து வந்து நின் பிறவிப்பிணியையும் அறுத்திடும் காண்! அத் தகையது அறவோர்க் கெதிரும் நல்வினை என்றாள் என்க.

(விளக்கம்) சாதுக்கரன் நிலவுலகத்திலேயே மக்கள் யாக்கையிலேயே அமரனாகி விட்டான் என்பது தோன்ற அமர! என்று இலக்குமி விளித்த வாறாம். தன் கணவன் சாதுசக்கரனைக் கண்டபொழுதே மலரடி வணங்காமல் வந்தோன் யார்! என வெகுண்டமை கருதி அவனெனத் தான் என வேற்றுமை நோக்காது அப் பிழையை இருவருடையதாகவும் கொள்க என்பாள் யாம் நின் தமரலம் ஆயினும் என்றாள். சிறியேம் பிழையைப் பொறுத் தருள்க. அதற்கு அறிகுறியாக யாம் கொணரும் அமுதம் நீரும் உண்டருளுதல் வேண்டும் என்றிரந்த படியாம்.

இனி, சாது சக்கரனும் இலக்குமியின் அன்பின் பெருமையைத் தான் உணர்ந்தமை தோன்ற எம்மனை உண்கேன் ஈங்குக் கொணர்க என்று விதுப்புற்றுப் பணித்ததின் இலக்கிய நயமுணர்க. இனி, அந்நாள் அவன் உண்டருளிய அறம் ஒழியாது நின்பிறப் பறுத்திடும் எனவரும் இதனோடு

சிவஞானச் செயலுடையோர் கையிற் றானம்
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து
பவமாய்க் கடலினழுந் தாதவகை யெடுத்துப்
பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத்
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச்
சரியைகிரி யாயோகந் தன்னிலுஞ் சாராமே
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி
நாதனடிக் கமலங்கள் நண்ணுவிக்குந் தானே

எனவரும் சிவஞானசித்தியார்ச் (சுப-278) செய்யுளை ஒப்பு நோக்கி இரண்டற்கும் நெருங்கிய உறவுண்மை உணர்க. ஈண்டு

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்  (87)

எனவரும் அருமைத் திருக்குறளும் நினைக.

இதுவுமது

42-49: உவவன........செய்தேன்

(இதன் பொருள்) சேயிழை உவவனம் மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன்- மணிமேகலையே கேள்! புகார் நகரத்துப் பகவனது ஆணையிற் பன்மரம் பூக்கும் உவவனத்துள் பளிக்கறையின்பக்கலிலே உனக்குமுன் வந்து தோன்றிய அரசிளங்குமரனாகிய உதயகுமரனே நீ இலக்குமியாயிருந்த பொழுது நின் கணவனாயிருந்தவனாகிய அந்த இராகுலன் காண்!; ஆங்கு அவன் அன்றியும்- பழவினை காரணமாக அவ்வாறு மாறிப்பிறந்த பிறப்பினும் உன்னைக் காமுற்று வந்தணுகிய அவ்வுதயகுமரனே யன்றியும்; அவன் பால் உள்ளம் நீங்காத்தன்மை நினக்கும் உண்டாகலின்-முற்பிறப்பிற் கணவனாயிருந்தமையாலே அவ்வுதயகுமரன் பால் நின் நெஞ்சம் சென்று அவனை மறவாது காமுற்றுருக்குமொரு பண்பு உன்னிடம் உளது ஆதலாலே; கந்த சாலியின் கழிபெருவித்து ஓர் வெந்துகு வெள்களர் வீழ்வது போன்ற என-நின்னெஞ்சம் அவளைத் தொடர்ந்து செல்லுமிந்நிகழ்ச்சி நெற்களுள் சிறந்ததாகிய கந்தசாலி என்னும் நெற்பயிரினது வளமுடைய மிகப் பெரியதொரு விதையானது வெந்து மாவாகி உதிர்வதற்கிடனான் வெள்ளிய களர்நிலத்திலே வீழ்வதனை ஒக்கும் என்று யான் கருதி; அறத்தின் வித்து ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் செய்தேன்- நல்லறத்தின் சிறந்த வித்தாகத் திகழுகின்ற நின்னை அவ்வறம் முளைத்துப் பயிராகித் தழைத்துத் தன் பயனை விளைவிக்கும் தன்மையைப் பெறுதற்குத் தகுதியாக நின்னை உவவனத்தினின்று என் விஞ்சையிற் பெயர்த்துப் பழம் பிறப்புணர்த்தும் இத்தரும பீடிகையைக் கண்டு நீ ஆக்க முறுதற்கு அதனயலிலே யான் நின்னை இட்டகன்றேன் காண்; என்று கூறிற்று என்க.

(விளக்கம்) (49) சேயிழை என்னும் விளி ஈண்டு மணிமேகலை என விளித்தபடியாம்.

உதயகுமரனாகிய அவனே முற்பிறப்பில் உன் கணவனாயிருந்த இராகுலன் என்றவாறு. அவன் முற்பிறப்பின் பால் நின்னிடத்தே இடங்கழி காம முடைமையின் அப் பற்றுக் காரணமாகவே ஊழ்வினை அவனை நின்பாற் கொணர்ந்தது; நீயும் அவன்பாலங்ஙனமே காமமுடைய ஆதலின் நின்னெஞ்சமும்(5: 848) கற்புத்தானிலள் நற்றவவுணர்வு இலள் வருணக்காப்பிலள் பொருள் விலையாட்டி யென்று இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது அவன் பின் சென்றதன்றே! அந் நெகிழ்ச்சியை நீ அறியுமாறே யானும் அறிந்தேன், அந் நிகழ்ச்சி நல்வித்துக் களர் நிலத்துகுவது போன்றதாம்.யான் என் விஞ்சையிற் பெயர்த்து ஈங்குக் கொணருமாற்றால் உன் ஊழ் வலியைக் கெடுத்து நன்னெறிப் படுத்தினேன் காண் என்று அத் தெய்வம் கூறுகின்றது ஈண்டு,

ஊழையும் உப்பக்கங் காண்ப ருலைவின்றித்
தாழா துஞற்று பவர்      (620)

என்னும் அருமைத் திருக்குறள் நிலைக்கத்தகும்

மணிமேகலாய்! புதுவோன் பின்றை நின்னெஞ்சம் போன தெனினும் காமத்தியற்கை இதுவே யாயின் அதன் திறம் கெடுக என்று அதற்குலைவின்றி நெஞ்சுறுதியும் பூண்டு நின்றனை.யானும் அச்செவ்வியறிந்து காமத்தின் திறங்கொடுதற் கேதுவாக ஓர் திறப்பட இது செய்தேன் என்று கூறுகின்றது. அத் தெய்வம் ஈண்டு

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றத் தான்முந் துறும் (1023)

எனவரும் திருக்குறள் நினைக்கத்தகும்.

ஓர் திறப்படலாவது பொறிவழி மணஞ் செல்லாமல் தடுத்து மெய்ப் பொருளை உணரும் ஒரே நெறியில் மனத்தைச் செலுத்துதல் அது ஈண்டு அருளறம் பூணுதலாம் என்க.

தெய்வம் மாதவி, சுதமதி, என்னும் இருவருடைய பழம் பிறப்புக்களையும் மணிமேகலைக்கு அறிவித்தல்

50-60: இன்னும்.........பணிதலும்

(இதன் பொருள்) இன்னும் கேளாய்- மணிமேகலாய்! இன்னும் நீ அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளும் உள அவற்றையும் கூறுவல் கேட்பாயாக!; நீ இலக்குமி-முற்பிறப்பிலே நீ இலக்குமியாயிருந்தனையல்லையோ அப் பிறப்பிலே; நின் தவ்வையர் ஆவோர்; தாரையும் வீரையும்- நினக்குத் தமக்கையராய்த் தாரை என்பாளும் வீரை என்பாளும் ஆகிய இருமகளிருளராயினர் காண்; ஆங்கு அவர் தம்மை அங்க நாட்டு அகவயின் கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-அங்ஙனம் இருந்த நின்னுடன் பிறந்த மகளிரிருவரையும் அங்க நாட்டினகத் தமைந்த கச்சயம் என்னும் குறு நிலத்தை ஆளும் வீரக்கழலணிந்த துச்சயன் என்னும் வேந்தன் ஒருவனே வாழ்கைத் துணைவியராக மணந்து கொண்டனன்; ஆங்கு அவன் அவருடன் அகல் மலையாடிக் கங்கைப் பேரியாற்று அடைகரை இருந்துழி-அங்கு அத் துச்சய மன்னன் தன் மனைவியராகிய தாரையோடும் வீரையோடும் அகன்ற மலையிடத்தே சென்று விளையாட்டயர்ந்து கங்கை என்னும் பேரியாற்றின் நீரடை கரையின்கண் ஒரு பொழிலின்கண் இளைப்பாறி இருந்த பொழுது; மறவணம் நீத்த மாசு அறு கேள்வி அறவணன் ஆங்கு அவன் பால் சென்றோனை- தீவினையின் தன்மை முழுவதையும் துடைத்தொழிந்த குற்றமற்ற பிடகநூற் கேள்வியையுடைய அறவண வடிகள் என்பார் அக்கரையிடத்திருந்த துச்சயமன்னன்பால் வந்த வரை நோக்கி; ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்தவன்-இவ்விடத்திற்கு வந்துற்ற நீர் யாவிரோ என்று வினவி எழுந்து எதிர் சென்றவன்; பாங்கு உளி மாதவன் பரதம்பணிதலும் அவருடைய அறிவொளி திகழும் திருவுருவத்தை நோக்கி இவர் அறத்தின் திருவுருவமே ஆயவர் என்று நினைத்து அம் மாதவருடைய திருவடியிலே வீழ்ந்து வணங்கா நிற்றலும்; என்க.

(விளக்கம்) பிரமதத்த முனிவனை முற்பிறப்பிலே காதலன் பிறப்புங்காட்டாயோ என்றிரந்தாய்க்கு அச் செய்தியை மறுமையில் அரும்பெருந் தெய்வம் அறிவுறுத்தும் என்றொழிந்தான் அல்லனோ அதற்கேற்ப யான் இதுகாறும் இயம்பியது நின் கணவனுடைய செய்தியாம். அதுவே அன்றி யான் நினக்கு அறிவுறுத்தும் செய்தியும் உள அவற்றையும் கேள் என்பதுபட இன்னும் கேளாய்! என அருள் கெழுமிய அத் தெய்வம் உள்ளி உள்ளி அறிவுறுத்த வேண்டிய வெல்லாம் அறிவுறுத்துகின்றது என்க. நீ இலக்குமி என மாறுக. நீ முற்பிறப்பில் இலக்குமியாயிருந்தனை இதனை நீயே அறிகுதி என்பது இதன் குறிப்பு. தாரையும் வீரையும் என்னுமிருவரும் நின் தவ்வையராயிருந்தனர் என வழி மொழியுமாற்றால் கூறிக் கொள்க. அங்க நாட் டகவயிற் கச்சயம் எனவே கச்சயம் அங்க நாட்டிலமைந்துள்ள குறுநிலப் பகுதி என்பதாயிற்று. கச்சயம் ஒரு நகரம் எனினுமாம்.

அவருடன்- தாரையும் வீரையும் ஆகிய மனைவியரிருவருடனும் மலையில் விளையாடி என்க. வந்தவுடன் ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து சென்று அவர் பாங்கு உள்ளி மாதவன் என்றுணர்ந்து அவன் பாதம் பணிதலும் என்க. பாங்கு உளி என்புழி உள்ளி-உளி என விகாரம் எய்தி நின்றது.

இதுவுமது

61-70: ஆதி......தொழுமென

(இதன் பொருள்) ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்-புத்தர்களுக்கெல்லாம் தலைவனாகிய புத்தபெருமானும் தனது அறவாழியையுருட்டி அறிஞர் உலகத்தைத் தன் அருளாட்சியின் கட்படுத்து ஆள்கின்றவனும், ஆகிய நம்மிறைவன்; மக்களை மாதுயர் எவ்வம் நீக்கி-மாந்தரினத்திற்குப் வெகுளி மயக்கங்களாகிய பெரிய துன்பங்களைப் போக்கி; விலங்கும் தம்முள் வெரூஉம் பகைநீக்கி உடங்கு உயிர் வாழ்க என்று- விலங்கினங்களும் தம்முள் ஒன்றினை ஒன்று அஞ்சுதற்குக் காரணமான தமதுட்பகை களைந்து அன்பினாலே ஒன்றி இன்புற்று வாழ்க என்னும் தனது கருணாபாவனை காரணமாக; உள்ளம் கசிந்து உக-கேட்போர் உள்ளமுருகி ஒழுகுமாறு; தொன்று காலத்து நின்று அறமுரைத்த குன்றம் மருங்கில் பழைய காலத்திலே ஏறி நின்று தன் மெய்க்காட்சிகளாகிய அருளறத்தை மாந்தர்க்கு அறிவுறுத்திய இந்த மலையின் மேலே; குற்றம் கெடுக்கும் பாத பங்கயம் கிடத்தலின்- கண்டவர்களின் மனமாசு தீர்க்கும் அப் பெருமானுடைய திருவடித்தாமரைகளின் சுவடு பதிந்து கிடத்தலாலே; ஈங்கு இது பாத பங்கய மலை எனும் பெயர்த்து ஆயது- இவ்விடத்தே உள்ள இந்த மலை, பாதபங்கய மலை என்னும் பெயர் உடையதாயிற்று; ஈங்கு தொழுது வலம் கொள வந்தேன்- இம் மலையை யான் தொழுது வலம் செய்து வணங்கவே இங்கு வந்துள்ளேன்; இப் பழுது இல் காட்சியீர் நீயிரும் தொழும் என-இந்த அருளறமாகிய குற்றமற்ற மெய்க் காட்சியையே மேற்கொண்டு இல்லறத்தே நிற்கின்ற நீவிரும் எம்மோடு வலம் வந்து மலையைக் கைதொழுது உய்யுங்கோள் என்று அறிவுறுத்துதலாலே என்க.

(விளக்கம்) ஆதி முதல்வன் என்றது கௌதம புத்தரை. அறம் முதலும் முடிவு மற்றது ஆகலின் அதனை முதலும் முடிவுமற்ற சக்கரமாகக் குறிப்புவமம் செய்வது நூனெறி வழக்கமாகும். தனது அறவாழியாலே அறிஞர் உலகத்தை ஆளுபவன் என்க. எவ்வம் என்றது ஆகு பெயராக அதற்குக் காரணமாகிய பிறப்பின் மேனின்றது. என்னை? பிறந்தோருறுவது பெருகிய துன்பம் என்பது புத்தருடைய மெய்மைகளுள் முதலாவதாதலறிக. அதனை நீக்குதலாவது. விசுத்தி மார்க்கத்தே செலுத்தி விடுவது.

விலங்குந் தம்முள் வெரூஉம் பகைநீங்கி
உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்து
.........................................அறமுரைத்த

என நிகழும் இதனோடு

எல்லாவுயிரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே

எனவரும் தாயுமானார் திருவாக்கினை ஒப்பு நோக்கி யுணர்க.

அன்பினாலே உடங்குயிர் வாழ்க என்று

என்க தொன்று காலம்- பழைய காலம்.

பாதபங்கயம் என்றது புத்தருடைய திருவடிச் சுவடுகளை.

துச்சயனும் மனைவிமாரும், பௌத்த சமயத்தைச் சார்ந்த இல்லறத் தாராதலின் அவரைப் பழுதில் காட்சியீர்! என்று அறவண அடிகள் விளித்தனர் என்க.

அப் பாத பங்கயம் தன்னை கண்டோர் காம வெகுளி மயக்கங்களைக் கெடுக்கும் தெய்வத்தன்மையுடைய தாகலின் நீயிருந் தொழும் என்றார் என்க.

இதுவுமது

71-80: அன்றவன்..............உரையார்

(இதன் பொருள்) அன்று அவன் உரைத்த அவ்வுரை பிழையாது சென்று கைதொழுது சிறப்புச் செய்தலின்-அற்றை நாள் அவ்வறவணவடிகள் பணிந்த மொழி பிழைபடாவண்ணம் தாரையும் வீரையும் ஆகிய நின் தமக்கையரிருவரும் கணவனும் அவ்வடிகளார் பின் சென்று அப் பாதபங்கயமலையை வலம் வந்து கை கூப்பித் தொழுது அதற்கு விழா வெடுத்தலாலே; மாதவியாகியும் சுதமதியாகியும் கோதை அம்சாயல் நின்னோடு கூடினர்-அவரிருவருள் தாரை யென்பவள் மாதவியாகியும் வீரை சுதமதியாகியும் வேறு வேறிடத்துப் பிறந்து வைத்தும் அந் நல்வினைப் பயனாக அருளறம் பூண்டு நினைக்குத் தாயாகவும் செவிலித்தாயாகவும் மணிமேகலை நல்லாய் நின்னோடு அன்புத் தொடர்புடையராயினர் காண்! அறிபிறப்பு உற்றனை அறம்பாடு அறிந்தனை-இனி நீ தானும் முற்செய் நல்வினைப் பயனாக முற்பிறப்பினை அறியத்தகுஞ் சிறப்புடைய பிறப்பினையும் பெற்றிருக்கின்றனை அதன் மேலும் அருளறத்தின் பெருமைகளையும் நன்கறிந்துள்ளனை அல்லையோ! பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை-இனி எதிர் காலத்திலே இவ்வருளறமல்லாத பிற அறங்களைக் கூறுகின்ற பல்வேறு சமயக்கணக்கர் தந் துணி பொருள்களையும் நீயே கேட்டுத் தெரிந்து கொள்குவை; அல்லியங்கோதை- மணிமேகலையே நீ; பல்வேறு சமயப்படிற்றுரை எல்லாம் கேட்குறும் அந்நாள் உனக்கு பல்வேறு  வகைப்பட்ட சமயவாதிகளும் தத்தம் சமயப்பொருளாக நினக்குக் கூறுகின்ற பொய் மொழிகளையெல்லாம் நீ அவ்வவர் பாற் சென்று வினவித் தெரிய முயலுகின்ற உனக்கு; யாவரும் இளையன் வளையள் என்று விளைபொருள் உரையார்-அச் சமயக் கணக்கர் எல்லாம் இவள் இளைமையுடையோள் என்றும் வளையலணியும் பெண்பாலினள் என்றும் கருதித் தத்தம் சமயத்தின் துணிபொருளாகிய சித்தாந்தத்தைக் கூறுதற்கு உடன்படார் ஆதலாலே; என்க.

(விளக்கம்) அவன்: அறவணன். அவ்வுரை என்றது அறவணவடிகள் நீயிரும் தொழும் என்று பணிந்த மொழியை. சிறப்பு- விழா. இனி அறவணவடிகளார்க்கு உண்டி முதலியன கொடுத்துச் சிறப்புச் செய்தலின் எனலுமாம். அவ்வறப் பயன் விளைதலின் மாதவியும் சுதமதியும் ஆகி, நின்னொடுங் கூடி அருளறம்பூண்டனர் என்பது கருத்து. அறிபிறப்புற்றனை அறம்பாடறிந்தனை ஆதலின் நின் முற்பிறப்பைப் பற்றி யான் கூற வேண்டியதில்லை என்றவாறு. படிற்றுரை- பொய்யுரை. வஞ்சகவுரையுமாம். வளையோள் என்றது பெண்பாலினள் என்றவாறு.

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு மந்திரம் செவியறி வுறுத்துதல்

80-88: வேற்றுரு..........இழிந்து

(இதன் பொருள்) வேற்றுருவு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் அருந்திறன் மந்திரம் கொள்க என-இத்தகைய இடையூறுண்டாகாமைக்கும் யாண்டும் இனிதிற் போக்குவரவு புரிதற்கும் உதவியாக நின்னை வேற்றுருவம் எடுத்துக் கொள்ளவும் விசும்பினூடு திரியவும் செய்யும் பெறற்கரிய தெய்வத்தன்மையையுடைய இந்த மந்திரங்களை நின் செவியினூட் கொள்வாயாக என்று கூறி; வாய்மையின் ஓதி-அம் மந்திரம் அவட்கு வாய்க்குந்தன்மையோடு செவியறிவுறுத்து; மதி நாள் முற்றிய மங்கலத் திருநாள் பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் திருஅறம் எய்துதல் சித்தம் என்று நீ உணர்- பின்னரும் மணிமேகலைக்குத் தேற்றுரை கூறுகின்ற அந்த மணிமேகலா தெய்வம் நல்லாய்! திங்களும் விசாகநாளும் முதிர்ந்து பொருந்தும் மங்கலமுடைய வைகாசித் திங்கள் நிறைமதி நன்னாளிலே இவ்வுலகியலறிவு தூர்ந்துபோம்படி அவற்றை நீ இகழ்ந்து கைவிட்டு மெய்மூலம் பெருந்தியிருந்து மாரனை வென்று வீரனாகத் திருவாய் மலர்ந்தருளிய திருவறம் தலைப்படுதல் ஒருதலையாம் என்று நீ உணர்ந்து கொள்வாயாக என்று பணிந்து அவ்விடத்தினின்றம் வானத்திலே எழுந்து உயர்ந்து பின்னரும்; மறந்ததும் உண்டு என மறித்து ஆங்கு இழிந்து- நங்காய்! நினக்குக் கூறவேண்டியது ஒன்றனை யான் மறந்து விட்டதுமுண்டு என்று கூறக் கொண்டு மீண்டும் அவ்விடத்திலேயே இழிந்து வந்து என்க.

(விளக்கம்) வேற்றுருக்கோடல் சமயக் கணக்கரிடம் மாதவன்வடிவிற் சென்று வினாதற்கு மட்டுமின்றி வேறு செவ்விகளினும் மணிமேகலைக்கு வேண்டப்பட்டமையின் மந்திரங் கொடுத்தற்கு விளை பொருள் உரையார் என்றது ஞாபகவேதுவாந்துணையே ஆயிற்று.

பொதுவறிவு-உலகியலறிவு. புலம்-மெய்க்காட்சி. மாதவன் புத்தன். திருவறம் என்றது, அருளறத்தை-அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லையாகலின் அதனையே செல்வம் ஆக்கி, திருவறம் என்றாள். என்னை? ஆகவே மக்களாய்ப்பிறந்தோர் எய்துதற்குரிய சிறப்புச் செல்வமாகவும், ஏனைய செல்வமெல்லாம் பொதுச் செல்வமாம் ஆதலின் என்க, இதனை.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள                (241)

எனவும்,

நல்லாற்றா னாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை            (242)

எனவும் வரும் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் திருவாக்கானு முணர்ந்து கொள்க.

சித்தம்-ஒருதலை. இது மணிமேகலையை அத் தெய்வம் அந் நெறியிலூக்குவித்தற்குக் கூறியபடியாம்.

நின் பதி என்றது-புகார் நகரத்தை. விடை கொடுத்து விசும்பிலேறிய தெய்வம் மீண்டும் யான் மறந்ததும் உண்டு எனத் தன் பிழையைக் கூறிக் கொண்டு இழிந்து வந்தது என்னுமிது, அத் தெய்வம் அவள்பால் வைத்த அருட்பெருமையை நன்கு விளக்குதலறிக. இது, தண்டமிழாசான் சாத்தனாருடைய புலமை வித்தகத்தையும் விளக்குதலுணர்க.

மணிமேகலா தெய்வம் மீண்டும் பசியறுக்கும் மந்திரங்கொடுத்தல்

89-93: சிறந்த........தானென்

(இதன் பொருள்) சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய்- மக்கட் பிறப்பிற்குரிய சிறந்த கொள்கையை மேற்கொண்டொழுகுகின்ற சேயிழாய் இது கேள்!; மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களுடைய உடம்பானது உணவினாலியன்றதொரு தொகுதியே ஆதலால் இப் பெரு மந்திரம் இரும்பசி அறுக்கும் என்று-இப் பொழுது யான் நினக்குச் செவியறிவுறுக்கும் இந்த மந்திரமானது நினக்கெய்தும் பெரிய பசியைத் தீர்க்குமொரு தெய்வத்தன்மை யுடைத்து இதுவும் நினக்கின் றியமையாததாம், ஆகவே இதனையும் ஏற்றுக் கொள்ளுதி! என்று சொல்லி; ஆங்கு அது கொடுத்து ஆங்கு-அவ்வாறே அம் மந்திரத்தையும் செவியறிவுறுத்த பொழுதே; நெடுந்தெய்வம் அந்தரம் எழுந்து ஆங்கு நீங்கியது- நெடிய புகழுடைய அம் மணிமேகலா தெய்வம் வானத்திலே எழுந்து போய் அவ் வானத்தினூடேயே மறைந்து போயிற்று; என்பதாம்.

(விளக்கம்) மக்கள் யாக்கை உணவின் பிண்டம் என்றது நீயும் மக்கட் பிறப்பினள் ஆதலின் உனக்குப் பசித்துன்பம் அடிக்கடி வந்துறும். ஆதலின் அதற்கும் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்றவாறு. உண்டி முதற்றே உணவின் பிண்டம் என்பது புறநானூறு. மந்திரங்களுள் தலைசிறந்த மந்திரம் இதுவே என்பது தோன்ற, பெருமந்திரம் என்று கூறிற்று.

இனி, இக் காதையினை ஆயிழை ஆயினள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம் வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி உணர்ந்தேன் யாங்குளன் என்றலும் கேளாய் புலந்தாய் இராகுலன் வணங்குழித் திரிவோன் உருட்டி வருவோன் தோன்றலும் கண்டனை உற்றனை இறைஞ்ச இராகுலன் வெகுளலும் நீ வாய் புதையா, நல்கூர்ந்தனை என்று அவனொடு பாத்தியன் பாதம் பணிந்து கொணர்கேம் உண்டியாம் குறிப்பினம் என்றலும் கொணர்கென உண்டருளிய அறம் அறுத்திடும், உதயகுமரன் உன்இராகுலன், உன்னைத் திறம்படச் செய்தேன், கேளாய் நின் தவ்வையராவோர் தாரையும் வீரையும் சிறப்புச் செய்தலின் மாதவி யாகியும் சுதமதியாகியும் நின்னொடு கூடினர், உற்றனை அறிந்தனை கேட்குவை உரையார் எய்தவும் திரியவும் ஆக்கும் இம் மந்திரம் கொள்கென ஓதி, திருநாள் அறம் எய்துதல் சித்தம் உணர் நீ பதிப் புகுவாய் என்று எழுந்து ஓங்கி உண்டென மறித்து இழிந்து கேளாய் பிண்டம் இம் மந்திரம் பசி அறுக்கும் என்று கொடுத்து எழுந்து தெய்வம் நீங்கியது என இயைத்திடுக.

மந்திரம் கொடுத்த காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar