கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகா, ஆதிதிருவரங்கம் கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலை விட மிக பழமைவாய்ந்த இக்கோவிலில் தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான 27 அடி நீள நவபாஷனத்தில் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயன நிலையில் மூலவராக அருள்பாலிக்கிறார். மூலவர் அரங்கநாத பெருமாளுடன் கருடாழ்வார், சரஸ்வதி, பிரம்மா உள்ளிட்ட சுவாமிகளும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் சந்திர புஷ்கரணி தீர்த்தமாக வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் உள்ள பெரிய அளவிலான தானியக்களஞ்சியம் சிறப்பு வாய்ந்ததாகும்.
இக்கோவில் சேதமடைந்த நிலையிலும், தைலகாப்பு மேற்கொள்ளப்படாமல் மூலவர் சுவாமியும் இருந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முயற்சியால் இக்கோவிலை புனரமைத்து, மூலவருக்கு தைலகாப்பும், புதிய தேர் உருவாக்க அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு திருப்பணிகள் துவங்கியது. கோவில் சுற்றுச்சுவர், கோபுரம், நெற்களஞ்சியம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 26ம் தேதி கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்க உள்ளது. தொடர்ந்து, யஜமான சங்கல்பம், புண்ணியாகவஜனம், வாஸ்துசாந்தி, பூர்ணாஹூதி, அக்னி பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 27ம் தேதி மகா சாந்தி, சப்த கலச ஸ்நாபனம், திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. 28ம் தேதி காலை 10 மணியளவில் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படு கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வரு கின்றனர்.