குச்சனூர் கோயிலில் ஆடி சனிவார விழா : நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2017 12:07
சின்னமனுார்: குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தேனி மாவட்டம் குச்சனுாரில் பிரிசித்தி பெற்ற சனீஸ்வரர் கோயில் உள்ளது. ஆடி மாதத்தின் 5 சனி வாரங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுயம்பு மூலவரை தரிசிப்பர். இந்த ஆண்டு திருவிழா நாளை காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக பூலாநந்தபுரம் ராஜகம்பளம் மாரைய நாயக்கர் வகையறாவினர் கலிப்பணம் செய்து சுத்தநீர் தெளிப்பர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆக.,8ல் சனீஸ்வரர்- நீலாதேவி திருக்கல்யாணம் நடைபெறும். மூன்றாவது சனிவாரத்திருவிழா முடிந்த பின், மூலவர் மீதுள்ள மஞ்சள் காப்பு களையப்பட்டு, புதிதாக சாத்தப்படும். இதற்காக 20 நாட்களுக்கு முன்பே மூலிகைகள் கொண்ட மஞ்சள் கலவை தயாராகும். நல்லெண்ணையுடன் கலந்து பாரம்பரிய வழக்கப்படி அர்ச்சகர்கள் சாத்துவர். சனீஸ்வரர் மீது சாத்தப்படுவது ஆண்டு முழுவதும் நீடிக்க அவ்வப்போது நல்லெண்ணெய் பூசப்படும். ஆக., 14ல் சோணை கருப்பணசாமி பொங்கல் திருவிழா நடைபெறும். இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மது வகைகள் சுவாமி சிலையின் பாதத்தில் உள்ள மண் குவளையில் ஊற்றப்படும். நுாற்றுக்கணக்கான பாட்டில் மது ஊற்றினாலும் வாடை வராது என்று மக்கள் நம்புகின்றனர். அதன்பின் அறநிலையத்துறை சார்பில் கறி விருந்து நடைபெறும். ஆக., 19ல் 5வது சனி வாரத்திருவிழா முடிந்தவுடன் கொடியிறக்கப்படும்.